புதன், 18 ஜனவரி, 2017

நரம்பின் மறை

விபுலானந்த சுவாமிகளின் தமிழ்த்தொண்டு
இலங்கைத் தமிழருள் ஒரு பல்துறை வல்லுநர் என்ற வகையினருள் அடங்கக்கூடிய வெகு சிலருள் முதன்மை இடத்தைப் பெறுபவர் சுவாமி விபுலானந்தர். பொறியியல் (engineering), ஆங்கிலம், எண்ணியல் (mathematics) , இயற்பியல் (physics) , சோதிடம் (astrology), வானவியல் (astronomy), இசையியல் (music),  தாவரவியல் (botany), சங்க இலக்கியம் (sangam literature), கூத்தியல் (theatre ), வடமொழி (sanskrit)  என்று பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் அவற்றையெல்லாம் தன் தமிழ் சார்ந்த, தமிழிசை சார்ந்த ஆய்வுக்கான சுய புரிதலை மேம்படுத்துவதற்காகவே கையாண்டிருந்தார்.

சுவாமிகள்  எழுதிய 'யாழ்  நூல்' (நரம்பு வாத்தியங்கள் பற்றிய ஆய்வு) மற்றும் 'மதங்க சூளாமணி' (சேக்ஸ்பியரின் அரங்க நாடகங்கள் , வடமொழி நாடகங்கள், சிலப்பதிகார நாடகங்கள் பற்றிய ஒப்பீடு) ஆகியன மதுரைத் தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்பெற்றவை. இவற்றில் 'யாழ் நூல்' சுவாமிகளின் புகழை உலகெங்கும் பரப்பியது.

சுவாமிகள் பங்குனி 29, 1892 இல் கிழக்கிலங்கையிலுள்ள மடடக்களப்பில் பிறந்தார். லண்டன் பல்கலைக் கழகப் பரீட்சையான பி.எஸ்.சி. இல் தேறியிருந்தாலும் அவருடைய ஆர்வம் முழுவதும் தமிழைச் சுற்றியே தான் இருந்தது. இறை பக்தியுள்ள அவரை ஒரு இந்து மதக் கண்ணாடியூடு பார்ப்பவர்களும் உளர். இராமகிருஷ்ண மடம், யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் என்பன அவரது தமிழாய்வுக்கான பயணத்தின் சில தங்கு மடங்களெனவே நான் பார்க்கிறேன். யாழ் நூலாக்கத்தின்போது அவர் தன் எண்ணக்கிடக்கையை இவ்வாறு வெளியிடுகிறார்.

ஆயிரம் ஆண்டுகளாக மறைந்து கிடந்த அருங்கலை நிதியத்தின் பெருமையினையும், அதனைத் தேடிக்காணப்புகுந்த எனது சிறுமையினையும் ஒப்புவைத்து நோக்கும் சான்றோர் என்னை எண்ணி நகையாடுதல் இயல்பேயாம். 'வையமென்னை இகழவும் மாசெனக்கெய்தவும்' இவ்வாராய்ச்சியினை யான் எழுதத்துணிந்தது, 'பொய்யில் காட்சிப் புலைமையினோ' ராகிய இளங்கோவடிகள் தமிழ்த் தெய்வத்தின் திருவடிகளுக்கு அணியாகப் புனைந்தளித்த தெய்வமாக்கவியாகிய சிலப்பதிகாரத்தின் மாட்சியினை என்னாலியன்றவரை உலகிற்குத் தெரிவிக்கும் பெருவிருப்பினாலேயாம். இயற்றமிழ் நூல்களிலே பறந்து கிடைக்கும் இசைநூன் முடிபுகளை என்போன்ற தமிழ் மாணவர்கள் ஓரளவிற்கு உணர்ந்து கொள்ள இவ்வாராய்ச்சி உதவுமாயின், எய்தும் பயனும் பெறுதற்குரிய பேறும் அதுவேயெனக் 
கொண்டு உளமகிழ்வுருவேன்"

சிலப்பதிகாரம் தமிழ் உரை ஆசிரியர்கள் மத்தியில் மிகவும் ஆர்வத்தோடு நோக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இளங்கோவடிகளின் புலமையை இலகுவாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றோர் சிலரே இருந்தனர். அதிலும் அரங்கேறு காதையைப் புரிந்து கொள்வதென்பது பல புலவர்க்கும் பண்டிதர்க்கும் மிகவும் சிரமமாகவே இருந்தது. சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதுபவர்கள் அரங்கேறு காதையைத் தவிர்ப்பதே வழக்கமாகவிருந்தது.  சுவாமிகள் அதை ஒரு சவாலாக எடுத்து அரங்கேறு காதைக்கு உரை எழுத முற்பட்டார்.

அரங்கேறு காதையில் மாதவியின் நடன அரங்கேற்றம் பற்றிய குறிப்பில் 25 அடிகள் யாழிசையின் ஆசிரியரொருவர்  எத்தகைய குணாதிசயங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்றும் அவரது கடைமைகள் என்னவென்பன என்றும் விபரிக்கின்றன. பல்லாயிரம் வருடங்களாகத் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்த தமிழிசை உருவாக்கத்தில் உள்ள நுட்பங்களும் நுணுக்கங்களும் சுவாமிகளின் ஆய்வுணர்வுகளைத் தூண்டின. மாதவியால் பாவிக்கப்பட்ட யாழ், அதன் உருவாக்கம், அதிலிருந்து உருவாகும் இசையின் தன்மைகள் என்று அனைத்தையும் அறிய முற்பட்டபோதுதான் அதன் ஆழம் அவருக்குப் புரிந்தது. தனியே தமிழிசை பற்றிய அறிவு மட்டும் போதாது எண்ணியல், இயற்பியல், தாவரவியல் என்று இன்னோரன்ன துறைகளில் நிபுணத்துவம் தேவை என்பதை உணர்ந்து அவற்றைக் கற்றறிந்தார்.

தமிழிசையின் உருவாக்கம், அதன் பண்புகள், சுர வரிசை அமைப்பியல் பற்றிய விளக்கமோ விபரிப்போ இக்கட்டுரையின் நோக்கமல்ல. சுவாமிகளின் பல்வேறு முயற்சிகளும் தமிழ் சார்ந்த வகையில் எவ்வாறு முனைப்போடு நகர்த்தப்படடன தமிழுக்கு அவரது பங்களிப்பு என்ன என்பதைச் சுற்றியே இக் கட்டுரை வடடமிடுகிறது.

ஐந்திணை மாந்தர்,  அவர்களின் பழக்கத்திலிருந்த இசைப் பாரம்பரியம், இசைக்கருவிகலின் பயன்பாடு பற்றி சங்க இலக்கியங்களில் பரவிக் கிடக்கிறது. இன்றய வாசகனுக்கு இவ்விலக்கியங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை. உரையாசிரியர்களாலேயே தவிர்க்கப்படட அரங்கேற்று காதையில் வரும் இசை இலக்கணம் மட்டுமல்ல கருவிகளின் கட்டுமானம், அவற்றுக்கான உதிரிகளை எவ்வகையான தாவரங்களிலிருந்து பெற வேண்டும், நரம்புகளின் எண்ணிக்கை, நரம்புகளின் அளவு, துளைகளின் இடைவெளி என்று சகல இசைக் கூறுகளையும் ஆய்கூடத்தில் பிரதி பண்ணி (re-engineered) கணிதச் சமன்படுத்தலுக்கு உள்ளாக்கியே தன நிறுவல்களைச் செய்கிறார். அவருக்கிருந்த ஆழமான தமிழறிவே இதைச் சாத்தியமாக்குகிறது.

" ஆயிரம் ஆண்டுகளாக மறைந்து கிடந்த அருங்கலை நிதியத்தின் பெருமையினையும், அதனைத் தேடிக்காணப்புகுந்த எனது சிறுமையினையும் ஒப்புவைத்து நோக்கும் சான்றோர் என்னை எண்ணி நகையாடுதல் இயல்பேயாம். 'வையமென்னை இகழவும் மாசெனக்கெய்தவும்' இவ்வாராய்ச்சியினை யான் எழுதத்துணிந்தது, 'பொய்யில் காட்சிப் புலைமையினோ' ராகிய இளங்கோவடிகள் தமிழ்த் தெய்வத்தின் திருவடிகளுக்கு அணியாகப் புனைந்தளித்த தெய்வமாக்கவியாகிய சிலப்பதிகாரத்தின் மாட்சியினை என்னாலியன்றவரை உலகிற்குத் தெரிவிக்கும் பெருவிருப்பினாலேயாம். இயற்றமிழ் நூல்களிலே பறந்து கிடைக்கும் இசைநூன் முடிபுகளை என்போன்ற தமிழ் மாணவர்கள் ஓரளவிற்கு உணர்ந்து கொள்ள இவ்வாராய்ச்சி உதவுமாயின், எய்தும் பயனும் பெறுதற்குரிய பேறும் அதுவேயெனக் 
கொண்டு உளமகிழ்வுருவேன்" என சுவாமிகள் தன் நிலை விளக்கம் செய்கிறார்.

சங்கப் பாடல்களில் கூறப்படுகின்ற பல சொற்கள் இன்று நடைமுறையில் இல்லாதவை. அவற்றை இலகுவாக்கி பாடல்களின் பின்புலம் (திணை ), அத்திணைகளில் காணப்படும் பறவைகள், விலங்குகள், தாவரங்கள், அவை எழுப்பும் இசை எல்லாவற்றையும் கதை சொல்லும் பாணியில் முன்வைக்கிறார். உதாரணத்திற்கு யாழ் நூலில் வரும் யாழுறுப்பியல் அதிகாரத்தில் வில் யாழ் என்ற தலைப்பின் கீழ் இப்படி விவரிக்கின்றார் :

"பழந்தமிழ்நாட்டுப் பஹ்ருளியாற்றங்கரைக்குச் செல்வோமாக. மிக மிகப் பழைய காலம். முல்லை நிலம். மரங்களடர்ந்த சோலையின் பாங்கர் ஒரு பசும்புற்றரை. புற்றரையிலே பசுக்களும் கன்றுகளும் மேய்கின்றன. கார்காலம்; செடி கொடிகளில் பூக்கள் நிரம்பியிருக்கின்றன. இடையானொருவன் வருகிறான். காலிலே செருப்பு அணிந்திருக்கிறான். உறுதியான உடல்; மயிரடர்ந்த தோட்கட்டு; பால் மனம் நாறுகின்ற தலை மயிர். அறையின் கட்டிய ஆடையின் ஒரு தலைப்பினைத் தோளில் போட்டிருக்கிறான். பலநிறமாகிய கோட்டுப்பூக்களையும் கொடிப்பூக்களையும் கலம்பகமாகத் தொடுத்த மாலையொன்று தோளிற்கிடக்கிறது. இடுப்பிலே ஒரு மூங்கிற்குழல் சொருகப்பட்டிருக்கிறது.
ஒரு கையிலே கோல்; மற்றொரு கையிலே வில்வடிவமான ஒரு பொருள். ஒரு வில்லல்ல; பல விற்கள் சேர்த்துக் கடடப்பட்டிருக்கக் காண்கிறோம். 

நண்பகற்காலமாகிறது. இடைச்சி ஒரு குடுவையிலே பாலிட்டுக் காய்ச்சிய கூழ் கொண்டு வருகிறாள். இடையன் கூழினையுண்டு நீரருந்துகிறான். பின்பு கையிலே குழலை எடுக்கிறான். சில நாட்களுக்கு முன் அம மூங்கிற்குழல் இடையனால் இசைக்கருவியாக்கப்பட்டது. தீக்கடை கோலினாலே, புகையெழக் கைமுயன்று தீயைக் கடைந்து கொண்டு, அக் கடைக்கோலிலுள்ள தீயினாலே மூங்கிலிலே  துளையிடடான். குழலிலே பாலைப்பண் வாசிக்கிறான். இடைச்சி கேட்டு மகிழுகிறாள்."

சங்கஇலக்கியம் இன்றய வாசகனுக்கு அந்நியமாக இருப்பதற்கு ஒரு காரணம் அவனது மொழிப்புலமை பற்றாக்குறையே. சுவாமிகளின் எளிய, இலகுவான, காடசிப்படிமத்தைப் பின்புலமாகக் கொண்ட குறு வசனங்களாற் கட்டியமைக்கப்படட விவரணை சங்க இலக்கியங்கள் மீது இளைய தலைமுறையினருக்குப் போதையேற்றும் வகையில் அமைந்துள்ளது.

தமிழிசையின் இன்றய வடிவத்தை பண்டைய தமிழிசையோடு மட்டுமல்ல மேற்கத்தைய இசை வடிவங்கள், வட இந்திய இசை வடிவங்களோடு ஒப்பிட்டு தமிழிசையே இவையெல்லாவற்றிற்கும் முன்னோடி என முடிபு செய்கிறார். அத்தோடு இன்றய வயலின் இசைக் கருவியின் மூலம் மேற்கு நாடுகளல்ல, கூர்ம வீணை தானென்றும் இசைக்கருவிகளின் பாவனை சால்தியா, மெசோபொட்டேமியா போன்ற இடங்களுக்கு தமிழ்நாட்டின் வாணிபப்பரம்பலோடு சென்றடைந்திருக்க வேண்டும் எனவும் சுவாமிகள் கருதுகிறார்.

யாழ் நூல் சாதாரண வாசகனுக்கு தமிழின் பெருமையை உணர்த்தும் பொருட்டு எழுதப்படவில்லை, மாறாக அது தமிழிசை பற்றி ஆய்வு செய்பவனுக்காக எழுதப்பட்டது எனவே கருத வேண்டும். ஆனால் இத்துணை விடயங்களையும் சுவாமிகள் சங்க இலக்கியங்களை அகழ்ந்து தோண்டியே கண்டறிந்திருக்கிறார் என்ற வகையில் அதை  அவர் தமிழுக்குச் செய்த மிகப்பெரும் பங்களிப்பாகவே நான் பார்க்கிறேன். அதே வேளை தமிழிசை பற்றிய முதலாவது ஆய்வு தஞ்சை ஆபிரகாம் பண்டிதரால் எழுதப்பட்ட கருணாமிர்த சாகரம் என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.

சுவாமிகள் சுமார் பதினான்கு ஆண்டுகள் அயராது உழைத்து யாழ் நூலை  1947 இல் வெளியிட்டார். சுவாமிகளின் திறமையை நன்கறிந்த டாக்டர் உ.வே.சாமிநாதையர் பல வழிகளிலும் இந்நூல் வெளிவரக் காரணமாகவிருந்தார். மிகவும் சுகவீனமுற்றிருந்த நிலையிலும் இந்நூலை வெளியிட்டபின்னர் சில நாட்களில் சுவாமிகள்  இயற்கையெய்தினார்.

யாழ் நூலின் இரண்டாவது பதிப்பை கரந்தை தமிழ்ச் சங்கம் 1974 இல் வெளியிட்டது. மூன்றாவது பதிப்பை 2003 ஆம் ஆண்டு கனடாவிலிருந்து 'மறுமொழி ஊடக  வலையத்தின்' மூலம் வெளியிடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்நூலை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யும் பொறுப்பை கனடா விபுலானந்தர் கழகம் ஏற்றிருக்கிறது என்பது பெருமைக்குரிய விடயம்.

யாழ் நூலின் பெருமையை உலகம் கண்டு வியக்கும் போதுதான் சுவாமிகளின் பெருமையைத் தமிழுலகம் அறியவும் போற்றவும் செய்யும்.

(இக்  கட்டுரை கனடிய தமிழர் பேரவையின் 2017 பொங்கல் விழா மலரான 'The Voice' இல் பிரசுரமானது)
















கருத்துகள் இல்லை: