வியாழன், 8 டிசம்பர், 2016

வந்தோம், பார்த்தோம், கொலை செய்தோம்

துரும்பர் அவதரித்து விட்டார். விருப்பமோ விருப்பமில்லையோ வந்துதித்து விட்டார். இனி வணங்காமல் விட முடியாது. 
அவர் வரக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாகவிருந்தன  ஊடகங்கள். அவர் வரவே மாட்டார், இலக்கங்கள் அதைத்தான் சொல்கின்றன என்று செவிப்பறைகள் தகரச் சங்கூதின. அதையும் மீறி அவர் வந்து விட்டார். ஊடகங்கள் முட்டாக்குப் போட்டுக்கொண்டு கோடியால் ஓடி விட்டன. 

இதெல்லாம் அவர்களுக்குப் பழக்கப்பட்ட விடயம். உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டு மீண்டும் நெளிந்து கொண்டு முன்னால் வருவார்கள். 

மக்களது அபிப்பிராயத்தை ஆதிக்க சக்திகளுக்கு சார்பாக மாற்றி எடுப்பதில் இவர்கள் வல்லவர்கள். மக்களது பலவீனங்களை அறிந்து அதற்கேற்ப உடுக்கடித்து உருவேற்றும் ஊடகங்களினால் தான் துரும்பர் வென்றார், ஹிலாறி தோற்றார். ஹிலாரி வென்றுவிடக் கூடாது என்று வாக்களித்தவர்களில் பலர் குடியரசுக்கட்சிக்காரரல்லர். அவருக்கு எதிரிகள் அதிகம். லிபியன் தலைவர் கடாபி கொல்லப்படட செய்தியைக் கேட்ட போது தொலைக்காட்சி முன் "We came, we saw and we killed him" என்று எகத்தாளமான சிரிப்புடன் அட்டகாசம் பண்ணியபோதே நினைத்தேன் இது உலகத்துக்கு ஆகாத ஒன்று  என்று.

அளிக்கப்படட வாக்குகளைப் பகுப்பாய்வு செய்தவர்கள் சொல்கிறார்கள் துரும்பரின் குடியரசு வாக்குத்தளம் வழமைபோல் தான் வாக்களித்திருக்கிறது. ஹிலாரியின் ஜனநாயகத் தளமே வற்றியிருக்கிறது  என்று. அதனால் தான் சொல்கிறேன் துரும்பர் வெல்லவில்லை ஹிலாரி தோற்றிருக்கிறார். அதற்கு காரணம் அவரது குடும்பமும் ஜனநாயகக் கட்சியின் மூலஸ்தானமும் தான். தொண்டர்கள் பாவம். அவர்களுக்கு ஆறுதல் கூறாமலேயே பள்ளி கொள்ளப் போன ஹிலாரியின் மீது எனக்கு அனுதாபமில்லை. 

துரும்பர் ஒரு துவேஷி என்பதில் சந்தேகமேயில்லை. துவேஷி எல்லோருள்ளும்  தான் இருக்கிறார்.  புழுங்குகிறார்கள்  சிலர் புகைகிறார்கள் சிலர் குரைக்கிறார்கள். பலர் சிரிக்கிறார்கள். துரும்பரின் குறைப்பிற்கு ஹிலாரியின் சிரிப்பிற்கும் எந்த வித்தியாசமுமில்லை. 

பெரும்பான்மையினர் மௌனமாய் இருப்பதால் தான் சிறுபான்மையினரின் விருப்புக்கள் இலகுவாக நிறைவேறுகின்றன என்றொரு புண்ணியவான் சொன்னான். இது ஒரு நித்திய உண்மை. 

துரும்பர் விடயத்தில் இது தான் நடந்தது. ஸ்டாலின், ஹிட்லர் விடயங்களிலும் இது தான். இந்த தத்துவத்திற்கு  வலது இடது என்றெல்லாம் பேதம் தெரியாது. அதி தீவிர இடதுசாரிக் கொள்கைகளால் துருவப்படுத்தப்படட வலதுசாரிகள் இப்போது வெளியே வருகிறார்கள். அவர்களை சரியான தருணத்தில் இனம் கண்டு அவர்களின் பலவீனத்தைச் சாதகமாக்கிக் கொண்டதனால் தான் துரும்பர்  வெற்றி பெற்றார். அது அவரது சாதுரியம். 

அவரது வெற்றி உலகம் முழுவதும் கொதித்துக் கொண்டிருக்கும் வலதுசாரிச் சிறுபான்மையினரை உருவேற்றியிருக்கிறது. அங்கெல்லாம் புதிய துரும்பர்கள் வருவார்கள்,  பெரும்பான்மை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும். இடது சாரிகள் தமது முற்போக்கு கொள்கைகளை ஓரிரண்டு தசாப்தங்கள் அடைகாத்து மீண்டும் வருவர். 

துரும்பரின் வரவு எதையும் வெட்டி விழுத்தப் போவதில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவரால் இலகுவில் முடியாது. வழக்கமாக இவற்றையெல்லாம் பூசி மெழுகி அதிகார வர்க்கத்தைக்  காப்பாற்றி வரும் ஊடகங்கள் அவர் பக்கம் இல்லை.  அவர் கவனம் எல்லாம் அமெரிக்கா மீதே இருக்கும். அதனால் உலகம் கொஞ்சக் காலம் சுயமாகச் சுவாசிக்கும். திணிக்கப்படட ஊன்றுகோல்களை எறிந்து விட்டு தாமாக நடக்க முற்படும். 

சமநிலையாக்கம் என்ற இயற்கையின் தத்துவப் பிரகாரமே எல்லாம்  நடக்கிறது.

Relax and enjoy!


2018ல் கதலீன் வின்னுக்கு பத்தாமிடத்தில் வியாழன்...

ஒன்ராறியோ மாகாண பொதுத் தேர்தல் 2018 இல் வரவிருக்கிறது. அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளைப்போல் feel பண்ணுபவர்களும் உடலெல்லாம் பதாகைகளோடு வலம் வர ஆரம்பித்து விடடார்கள். கடை வாசல்களில் காவற்காரைப் போல் தவமாய் தவம் கிடந்து ஆதரவு கேட்கும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான்  இருக்கிறது. 

இந்த தடவை கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என்கிறார்கள். அதற்கு காரணம்  கொள்கைகள் இல்லை. தற்போதைய ஆளும் கட்சி மீதான, அதன் தலைவர் மீதான வெறுப்பு எனச் சொல்கிறார்கள். இதைச்  சமூக ஊடகங்கள் சொல்கின்றன என்பதனால் நம்பலாம். 

ஒன்ராறியோ மாகாணத்தைக் குட்டிச் சுவராக்கியதில் மைக் ஹாரிஸுக்கு பெரும் பங்குண்டு. அதைச் சமநிலைப் படுத்தவே நான்கு தடவைகள் லிபரலுக்கு மக்கள் வாக்களித்தார்கள். பிரதமர் கதலீன் வின் ஆட்சிக்கு வந்தபோது முன்னாள் பிரதமர் டால்ரன் மக்கின்ரி தன பொதியை இவர் மீது சுமத்தி விட்டார். அதை இறக்கி வாய்க்கு முன்னரே தன பங்குக்கு அவசரம் அவசரமாகச் சில பொதிகளை ஏற்றி விடடார். மின்சாரக் கட்டனம் அதில் முக்கியமானதொன்று. அவசியமற்ற விடயங்களில் அவர் விரயம் செய்த பணத்தையும் காலத்தையும் வளத்தையும் முக்கிய விடயங்களில் செலவிட்டிருந்தால் வறிய குடும்பங்கள் இருட்டில் வாடா மாட்டா. 

எதிர்க்கட்சித் தலைவர் பற்றிக் பிரவுண் கொஞ்சம் smart ஆன மனிதர். லிபரல் படகு மூழ்கப் போகிறது என்பதைத் தூரத்திலிருந்தே அவதானித்து விடடார். அவர் பிரச்சாரம் என்று எதுவும் செய்யாமலேயே தேர்தலில் வெல்வதற்கு சாத்தியமிருக்கிறது. லிபரல் வெறுப்பு வாக்குகளே போதும். 

ஜனன கிரகங்கள் ஜாதகருக்கு சாதகமாக அமைந்தாலும் சஞ்சார கிரகங்களின் கோசார பலன்கள் எப்படி அமையுமென்பதைக் கணித்துத்தான் பலன் சொல்ல முடியும்.

பத்தில் வியாழன் பதியை விட்டுக் கிளப்பும் என்றொரு சோதிடப் பழமொழியுமுண்டு. 

பார்க்கலாம். 

காஸ்ட்றோவின் கால மரணம் 

பிடல் காஸ்ட்றோவின் மரணம் முகனூலில் எழுப்பிவரும் விவாதங்கள் கியூபாவின் சுருட்டை விடப் போதை தருவதாக இருக்கின்றன. அவற்றை வாசிக்க ஒரு நாளே போதாது.

ஈழத்தமிழரின் விடயத்தில் கியூபா நடந்துகொண்ட விதம் பிடலின் மீது வெறுப்பை உருவாக்குவது நியாயம் என்று சிலரும் அவர் கடைசிவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்ற உண்மையான பொதுவுடைமை வாதி எனச் சிலரும் பொருத்திக் கொள்கிறார்கள். காஸ்ட்றோ வின் சிங்கள சாய்வு  பொதுநலவாய நாடுகளென்ற நட்பின் காரணமா தமிழர்கள் மீதான வெறுப்பு காரணமா புலிகளின் அமெரிக்க சாய்வு காரணமா அல்லது அதிகளவு கனடியத்  தமிழர்கள்  மிளகாய்த் தூளும் ஒடியல் மாவும் கொண்டுவருமளவிற்கு அங்கிருந்து போயிலைச் சுருள்களை வாங்கித் செல்வதில்லை என்ற கோபத்தின் காரணமா  தெரியாது.

இந்த காஸ்ட்ராவின் கசப்ப்பில் உண்மையிருக்கிறதா என்பதை அறிய வேண்டுமென்பதற்காய் நானே நேரில் சென்று பார்த்தேன். சென்றது குடும்பத்துடன் தான் என்பதனையும் இங்கு அழுத்தத்தோடு பதிய வைத்துக் கொண்டு - பார்த்ததும், கேட்டதும் நிச்சயமாக காஸ்ட்றோவின் மீது - தமிழர் விரோதத்தையும்  மீறி - ஒரு மதிப்பை ஏற்படுத்தியது உண்மை.

அவர் இறுதி வரைக்கும் கம்யூனிஸ்ட்டாகவே வாழ்ந்து முடிந்ததற்கு அவர் அமெரிக்காவிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அமெரிக்காவின் உற்ற நண்பரான  முன்னாள் ஆடசியாளரின் கீழ் மக்கள் பட துன்பத்தைவிட காஸ்ட்றோவின் ஆட்சியில் மக்கள் படும் துன்பம் பெரிதல்ல. 600 க்கும் மேலான அமெரிக்க கொலை முயற்சிகளில் இருந்து அவரைக் காப்பாற்றி அவரை இதுவரை வாழ வைத்தது அவரது ஊழலற்ற ஆட்சி. ஆபிரிக்கக் கண்டத்தின் விடுதலைக்கு மட்டுமல்ல ஹெயிட்டியின் இயற்கை அழிவுகளின் போதெல்லாம் எதுவும் அலட்டிக் கொள்ளாது பெருந்தொகையில் மருத்துவ தொண்டர்களை அனுப்பியதாலும் உலக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் காஸ்ட்றோ. மாதத்திற்கு 67 டாலர்கள் சம்பளம் எடுத்துக்கொண்டு சந்தோசமாகப் பணிபுரியும் வைத்தியர்களைக் கொண்ட ஒரு நாடு - அதுவும் அமெரிக்காவின் கோடியில் இருக்கிறதென்றால் - அது காஸ்ட்றோ வினால் தான் சாத்தியமாக்க முடிந்தது.

அவர் வரித்த சித்தாந்தம் தோல்வி கண்ட போதும் அவர் தோல்வியடையவில்லை என்ற மகிழ்வோடு அவர் மறைந்திருக்கிறார்.

மகிழ்வான வாழ்வை நாமே தான் உருவாக்க வேண்டும் என்பதைகே காட்டிச் சென்ற ஒரு நல்ல மனிதர்.


இக் கட்டுரை டிசம்பர் 2016 ஈ குருவி பத்திரிகையில் பிரசுரமானது.