திங்கள், 21 செப்டம்பர், 2009

காரணம் ஆயிரம்

‘நான் ஏதாவது செய்ய வேண்டும், சுமதி. இப்படி என்னால் வாழ முடியாது.’
வனிதாவுக்கு ஓரளவு மது போதையாக இருந்திருக்க வேண்டும். அரை குறை வொட்கா போத்தலும் அருகே இருந்தது.

‘உன்ர நிலைமை புரியுது வனி. நீ வாழ்ந்தேயாக வேணும். இந்தக் குழந்தைகளை விட்டிட்டு நீ ஒண்டுமே செய்ய ஏலாது’ சுமதி வனிதாவின் குழந்தைகளை மாறி மாறிப் பார்த்தாள். அவளது கண்களில் நீர் கசிந்தது.

வனிதாவுக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன் ஸ்டீபன், எட்டு வயது. இரண்டாவது , ஜெனிபர், ஆறு வயது. ஸ்டீபன் தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தான். கண்கள் மட்டும் டெலிவிசனை விட்டு அகலவில்லை. றிமோட் கண்ட்ரோல் அவனருகில் உடைந்து கிடந்தது. அவனுக்கு ஆறு வயதிருக்கும்போது ஆட்டிசம் என்ற வியாதியிருப்பதாக மருத்துவர் அறிவித்திருந்தார்.

ஜெனிபர் ஒரு ‘ஹை’ சேரில் வைத்து பெல்ட்டுகளினால் கட்டப்பட்டிருந்தாள். அவளது வாய் கோணலாகவும் தலை தோளில் மீது சாயவிடப்பட்டது போhலவுமிருந்தது. பார்வை யன்னலினூடு வெகு தூரத்தில் குத்தி நிறுத்தப்பட்டிருந்தது. அவளை ‘குவாட்றோபிளீஜிக்’ குழந்தை என்று வைத்திய உலகம் நாமமிட்டிருந்தது.

வனிதா குசினியில் போடப்பட்டிருந்த சிறிய ‘டைனெற்’ சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கொண்டிருந்தாள். அவளது வலது கையைப் பிடித்தவாறு சுமதி அருகில் அமர்ந்திருந்தாள்.
‘என்ன குசினியிலிருந்து தண்ணீர் லீக் பண்ணுது போல. காலுக்குள் ஈரமாக இருக்குது’ சுமதி எழுந்து நின்று மேசைக்குக் கீழே பார்த்தாள். தண்ணீர் குசினிப் பக்கமிருந்து வடிந்து வந்த அடையாளம்; தெரிந்தது.

‘அது ஸ்டீபனின் வேலை. கொஞ்சம் கூட அங்கால இங்கால திரும்பேலாது. ஜெனிபருக்குச் சாப்பாடு தீத்துவதற்காக ஐந்து நிமிஷம் போகிறதுக்குள்ள அவன் குசினி பைப்பைத் திறந்துவிட்டான். தண்ணி நிறம்பி வழிந்ததால நிலமெல்லாம் ஈரம். நாளைக்கு கீழ் அப்பாட்மென்ட் காரன் சுப்பிரண்டென்டோட வரப் போறான். கொஞ்ச நாளைக்கு முதல்லதான் வந்து ‘வார்ண்’ பண்ணிவிட்டுப் போனவன்.’

‘நீ என்ன பாவம் செய்தனியோ தெரியாது. கடவுள் உன்னைப் போட்டு இப்பிடி வருத்திறார்.’
‘நான் இப்ப சேர்ச்சுக்குப் போறதில்லை. என்ரை மண்டாட்டம் ஒண்டும் கடவுளுக்கு கேட்குதில்லை. பிள்ளையளுக்காகத்தான் இவ்வளவு நாளும் பொறுத்தனான். இனியும் என்னால ஏலாது’

‘ஜேக்கப் இப்ப எங்க இருக்கிறார்? பிள்ளையளைப் பாக்க வாறேல்லையா?’

‘போன கிறிஸ்த்மஸ் வந்தவர். பிள்ளையளோட இருந்து சாப்பிட்டிட்டு போங்கோ எண்டு கேட்டன். பரிசுகளைத் தந்திட்டு அந்தாள் போயிட்டுது.

‘இந்தாளை எங்க பிடிச்சனி?’

‘எல்லாம் விதி தான். சுமதி, உனக்கு விதி, பழி, பாவம் எண்டிறதில நம்பிக்கை இருக்குதா?’

‘இருக்குது, ஏன் கேட்கிற?’

சுமதியின பதிலைக் கேட்காமலேயே வனி லிவிங் ரூமிற்குள் ஓடினாள்.

‘ஸ்டீபன் ஸ்டொப் இட். நௌ. டோன்ட் துறோ இட்’

கண் மூடித் திறப்பதற்குள் ஸ்டீபன் தன் கையிலிருந்த றிமோட் கன்ட்ரோல் பற்றறிகளை ஒன்றன் பின் ஒன்றாக டெலிவிசனை நோக்கி வீசிக் கொண்டிருந்தான். எல்.சீ.டீ. டெலிவிசனாகையால் பெரிய சத்தமேதுமில்லாது திரை மட்டும் உடைந்து நொருங்கியிருந்தது. மகனை அடிக்க ஓங்கிய கையைத் தனது தலையில் அடித்து அடித்து அலறினாள் வனி. கால்களினால் சுவரை ஓங்கி உதைத்தாள். உரத்த சத்தத்தோடு அழுதாள். பற்களை நறும்பியபடி மேசை மீது ஓங்கி கைகளினால் குத்தினாள். கெட்ட வார்த்தைகளைப் பாவித்து கடவுளையும் விதியையும் திட்டித் தீர்த்தாள். சுமதி அவளிடம் சென்று கைகளைப் பிடித்து அன்பாக அழைத்து வந்து மேசையில் அமர வைத்தாள். சுமதியால் எதுவுமே பேசுவதற்கு இடைவெளி கிடைக்கவில்லை.

‘ஐ ஆம் சொறி சுமதி. ஒவ்வொரு நாளும் விடிந்ததிலிருந்து பொழுது படும் வரை என்ர வாழ்க்கை இப்பிடித்தான்.’

‘கோப்பி ஏதும் போடவா? எனக்கும் தேவைப்படுகுது’ பதிலை எதிர்பாராமலேயே சுமதி குசினிக்குள் சென்று கேத்தலில் நீரைச் சுட வைத்தாள்.

‘சுமதி, இதையெல்லாம் நான் ஒரு வகையில் அனுபவிக்க வேண்டியவள் தான். என்ர வாழ்க்கையின்ர முன் பகுதி உனக்குத் தெரியாது. அதுதான் பழி பாவங்களில் உனக்கு நம்பிக்கை இருக்குதா எண்டு கேட்டனான்’

‘விரும்பினால் சொல்லு. பழி பாவம் செய்யக்கூடியவள் மாதிரி நீ இல்லையே. சில வேளைகளில் விதி அப்படி விளையாடியிருக்கும்.’

‘இல்லை நான் பழி பாவம் செய்தனான். ஒரு நல்ல மனிசனுடைய உயிர் போறதுக்குக் காரணமானவள் நான்’

வனிதாவின் சற்று முன்னரிருந்த கோலம் மாறிக் கோபமும் தணிந்தது சுமதிக்கு ஆறுதலாகவிருந்தது. கோப்பியைப் போட்டு இருவருக்கும் பரிமாறினாள்.

‘கோப்பி சில வேளைகளில வெறியை முறிச்சுப் போடுமெண்டு சொல்லிறவை’ சுமதியின் கேலி வனியையும் சிரிக்க வைத்தது.

‘நான் சின்னப் பிள்ளையாக இருந்தபோதே எனது சொந்த மச்சானைக் காதலிச்சனான். மன்மதன் அவருடைய பெயர். உண்மையில நல்ல வடிவான ஆள் தான்.
மற்றக் குடும்பங்களில மாதிரி இல்லாம எங்கட இரண்டு குடும்பங்களும் கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவிச்சவைதான். ஆனா நான் தான் கெடுத்துப் போட்டன். நீ சொன்னது போல விதி என்ர வாழ்க்கையோட விளையாடி விட்டுது.’

சுமதி ஒரு மர்ம நாவலை வாசிக்கும் ரசனையோடு உற்றுக் கேட்டாள்.

‘என்ர அண்ணன் என்னை இங்க கூப்பிட்டு சரியா ஒரு வருசத்தில நான் மதனை ஸ்பொன்சர் பண்ணிக் கூப்பிட்டனான். வந்து சரியா ஆறு மாசத்தில அவரைச் சாகடிச்சும் போட்டன்.’
‘ஏன் என்ன நடந்தது?’

வனிதா எழுந்துபோய் ஜெனிபரின் தலையைத் தடவிக் கொஞ்சி விட்டு வந்தாள். ஸ்டீபன் கண்களை மேலிமைகளுக்குள் சொருகிக் கொண்டு வனியை ஒரு விதமாகப் பார்த்தான். அது கோபமான பார்வையா அல்லது ஏக்கத்தோடான பார்வையா என்று புரியவில்லை.

சுமதிக்கு வனிதாவின் மர்மக்கதை ‘அடுத்த வாரம் தொடரும்’ பாணியில் இடை நிறுத்தம் செய்யப்பட்டதில் கொஞ்சமும் இஷ்டமில்லை. வனிதா யன்னலினூடு வெளியே பார்த்துக் கொண்டே தனது கதையைத் தொடர்ந்தாள்.

‘நான் இலங்கையில இருந்து வந்தவுடன் அண்ணா எனது ஏ. லெவல் றிசல்ட்டைக் கொண்டு சென்ரென்னியல் கல்லூரியில சேர்த்து விட்டான். அங்க படிக்கிறபோதுதான் இந்த ஜேக்கப்பை சந்திச்சனான். என்ர கிளாஸ் தான். அதுக்காக உடனே நானும் அவரும் கட்டிப்பிடிச்சுக் காதல் செய்தனாங்கள் எண்டு நினைச்சுவிட வேண்டாம். என்ர மனத்தில இருந்து மதனை ஒருவராலும் அகற்ற முடியேல்ல.’

‘அப்ப என்ன ஜேக்கப் உன்னைக் கடத்திக் கொண்டே போனவர்?’

‘சீ அந்தாள் அப்பிடியான ஆளில்லை. அவரும் நல்ல மனிசன்தான்.
நான் என்ர மன்மதனை விட்டு விட்டு வந்து தனிய இருந்து படிப்பில கவனம் செலுத்த முடியேல்ல. நெடுக ஜேக்கப்போட தான் இதைப் பற்றிக் கதைப்பன்.
உனக்கு காதலிச்சு அனுபவம் இருக்கோ?’

சுமதி பதிலேதும் சொல்லாது நெளிந்த விதத்தை வைத்து மிகுதியைக் கிரகித்துக் கொண்டாள்.

‘என்னவோ காதலிக்கிற ஆட்கள் தங்கட தோழர் தோழியரிட்ட தங்கட காதலைப் பற்றிக் கதைக்காட்டி அவங்களுக்கு விசர் பிடிச்சிடும். எனக்கு வந்து வாய்ச்ச வெங்காயம் ஜேக்கப்பாக இருந்திட்டுது.

ஒரு நாள் திடீரெண்டு ஜேக்கப் கேட்டான் ‘நீ உன்ர மச்சானைக் கலியாணம் கட்டப் போறியோ?’ என்டு . எனக்கு ஒரு மாதிரியாகப் போயிட்டுது. இந்தாள் என்னில வளையம் போடுதோ எண்டு நினைச்சு ‘கட்டினா அவரைத்தான்’ எண்டு சொன்னன். ஜேக்கப் என்னோட தப்பாகத்தான் பழகி வருகிறானோ எண்ட சந்தேகமும் எனக்குள்ள முளைச்சது. ‘ஜேக்கப்’ என்னோட வேற எண்ணத்தோட பழகினா இப்பவே எங்கட நட்பை முறிச்சுப் போடுவம்’ எண்டு அவனிட்ட முகத்தில அடிச்ச மாதிரிச் சொல்லிப் போட்டன். அதுக்கு அவன் சொன்ன பதில் ஆச்சரியமாக இருந்தது.

அவன் சொன்னான். ‘வனி இந்த நாட்டில, ஏன் பொதுவாக மேற்கு நாடுகளில சொந்த தாய் மாமன் மாமி பிள்ளைகளைக் கலியாணம் கட்ட அனுமதிக்கிறேல்ல. காரணம் சில வேளைகளில பிறக்கிற பிள்ளைகள் அங்கவீனமாகவோ அல்லது பிரச்சினைகளோடயோ பிறக்கலாம். அதை யோசிச்சு கல்யாணத்தைச் செய். எனக்கு உன் மேல கிறேசி இல்ல. நல்ல நண்பியெண்ட முறையில சொல்லிறன் அவ்வளவுதான். அதுக்குப் பிறகு கொஞ்ச நாட்களாய் அவன் என்னைச் சந்திக்கவேயில்ல’

மர்மக் கதையின் வில்லனாக நினைத்திருந்த ஜேக்கப் திடீரென்று நல்லவனாக மாறியது சுமதிக்கு அச்சத்தையே ஊட்டியது. ஏற்கனவே ‘கதை நேரம்’ ஓவர் டைமில் போய்க்கொண்டிருக்கிறது.

‘பிறகு?’ சுமதியே அடுத்த அத்தியாயத்தையும் தொடக்கி வைத்தாள்.

‘ஜேக்கப் சொன்ன நாளிலிருந்து எனக்குள்ள அது ஒரு போராட்டத்தையே உருவாக்கி விட்டுது. ஜேக்கப் என்ர நன்மைக்காகத்தானே சொன்னவன். அவனை நான் ஏன் கோபிக்க வேணும்?.

ஒரு நாள் நானே வலிந்து போய் அவனிடம் மன்னிப்புக் கேட்டேன். ஆனால் அவன் சொன்ன விடயம் என்னைத் தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே வந்தது. ‘உண்மையில் பிறக்கப் போகும் குழந்தைகள் அங்கவீனமாகப் பிறந்து விடுமோ எண்ட சந்தேகம் எனக்குள்ள குழப்பத்தை ஏற்படுத்திப் போட்டுது. நித்திரை வருவதுமில்லை. படிக்கவும் முடியேல்ல.
என்ர பரிதாப நிலையைப் பாத்து என்ர அண்ணா ஒரு சாத்திரியிட்ட என்ர சாதகத்தைக் காட்டிக் கேட்டான். கோதாரி விழுந்த சாத்திரியும் அதை உண்மையாக்கி விட்டுது. அதுக்குப் பிறகு எங்கள் ஒருவருக்கும் மன்மதனைக் கலியாணம் செய்வதில் விருப்பமில்லாமல் போயிட்டுது.’

‘அப்ப மன்மதன் இங்க வந்திட்டாரோ?’

‘அவர் வந்திட்டார். அவர் கலியாணம் முடியு மட்டும் அவருடைய நண்பரொருவரோடுதான் தங்கி இருந்தவர். அவரை அண்ணா கூப்பிட்டு மெதுவாக விஷயத்தைச் சொல்லிப் போட்டான்’

‘பாவம் அந்தப் பெடியன்’

‘உண்மைதான் சுமதி. நீயெண்டா இதை எப்பிடிக் கையாண்டிருப்பாய்?’

‘முடிவெடுக்கிறது கஷ்டம் தான். பிறகு என்ன நடந்தது?’ கதையின் கடைசிப்பக்கத்தைப் பார்த்துவிட்டு அவசரமாக வீட்டுக்குப் போவதில் சிரத்தையாயிருந்தாள் சுமதி.

‘வேறென்ன. கடிதம் ஒண்டை எழுதி வைச்சுப் போட்டு மதன் சப்வே ட்றெயினுக்கு முன்னால பாய்ஞ்சு தற்கொலை செய்து போட்டார். நான் அழுததைவிட ஜேக்கப்தான் அதிகம் அழுதான். இந்த நிலைக்குத் தானே காரணமெண்டு அவன் நினைச்சிருக்கலாம். அது உண்மையில்லை. எனக்கு வலிமை குறைந்த மனம். நான் பலவீனமானவள். அது தான் காரணம்.

அந்தக் குற்றத்தால ஜேக்கப் என்னைக் கலியாணம் செய்வதென்று அண்ணாவைக் கேட்டான். அவன் செய்த தியாகத்துக்காக நானும் மதம் மாறி அவனைக் கலியாணம் கட்டிக் கொண்டன்.
ஆனால் விதியைப் பாத்தியா? சாத்திரி சொன்னது ‘உன்ர பிள்ளைதான் அங்கவீனமாகப் பிறக்குமெண்டு. அது மதனின்ர பிள்ளையேண்டு சாத்திரி சொல்லேல்லத் தானே!
‘இப்ப சொல்லு இது விதியா? பழி பாவமா? எனக்காக ஏன் இந்தக் குஞ்சுகளைக் கடவுள் தண்டிக்க வேணும்?’

‘நீ இப்பிடிக் கஷ்டப் படேக்க ஏன் ஜேக்கப் உன்னையும் பிள்ளையளையும் விட்டிட்டுப் போனான். கொஞ்சமும் இரக்கமில்லாத மனம் அவனுக்கு’ சுமதி பொரிந்து தள்ளினாள்.

‘இல்லை சுமதி. அவன் பாவம். அவனை நானோ அல்லது என்னை அவனோ காதலிக்கேல்ல. எங்களது ஒரு மரேஜ் ஒவ் கொன்வீனியன்ஸ்’ அவ்வளவுதான்.
கடவுள் மீதும் விதி மீதும் இருந்த ஆத்திரம் எல்லாத்தையும் நான் ஜேக்கப் மேல தான் கொட்டுவன். நான் தினமும் வீட்டுக்க இருந்து இந்தப் பிள்ளைகள் படுகிற வேதனையைப் பார்த்துப் பார்த்து டிப்பிறெஷனில் இருக்கிறபோது ஜேக்கப் வேலையால களைச்சு விழுந்து வருவாhன். நான் அவன் மேல சீறிப் பாய்வன். பல தடவைகள் நானே அவனை அடிச்சிருக்கிறன். அவன் திருப்பித் தொட மாட்டான். எவ்வளது துன்பங்களைத் தாங்கியும் அவன் என்னையோ பிள்ளைகளையோ விட்டு விட்டு போக மாட்டான்.ஒரு நாள் தும்புக்கட்டையால அடிச்சு ‘நீ ஒரு ஆனான ஆம்பிளையா இருந்தா இப்பவே இந்த வீட்டை விட்டுப் போடா. திரும்பி வராத நாயே’ என்று கலைத்து விட்டேன்.’

சுமதிக்கு வனிதாவில் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. முகம் கடு கடுப்பானது. வனிதா சிரித்தாள்.

‘நீ கோபப் படுகிற. எனக்கு விளங்குது. ஒரு நல்ல காதலனைக் கொண்டு போட்டு ஒரு நல்ல புருஷனையும் கலைச்ச நான் ஒரு வே…மகள் எண்டு நினைப்ப? இல்லையா?’

‘நீ அதை விடக் கேவலம்’

‘மே பி…யூ ஆர் றைட். ஆனா எனக்கு வேற நல்ல வழி தெரியேல்ல. நான் செய்த பிழைக்கு ஏன் அந்த நல்லவன் தினமும் துன்பத்தை அனுபவிக்க வேணும்? அவன் எங்காவது நிம்மதியாக வாழவேணும். எனக்காக அவன் செய்த தியாகம் போதும். என்னையும் இந்தப் பிள்ளையளையும் பார்த்துப் பார்த்து அவன் சதா செத்துக் கொண்டிருந்தான். ஒருவனைத்தான் கொண்டு போட்டன். மற்றவனையாவது வாழ வைக்கிறதுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை சுமதி.

ஒவ்வொருத்தரின்ர வாழ்க்கையும் எப்பிடி அமையவேண்டுமெண்டதுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால்…சுமதி…’

சுமதி அழுகையை நிறுத்த முடியாது ஓடிக்கொண்டிருந்தாள்.

09.09.09

தினமணி தலையங்கம்

வலையில் 'பிடித்தது'


இலங்கைப் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் என்பவருக்கு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கு, ஆசிய மனித உரிமைக் கழகம் கண்டனம் தெரிவித்தது. உலகப் பத்திரிகை தினத்தன்று பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த இலங்கைத் தமிழரின் பெயரையும் குறிப்பிட்டு, உலகம் முழுவதும் பத்திரிகைகளின் வாய்மூட நடத்தப்படும் அத்துமீறல்கள் குறித்துப் பேசினார். இந்தியாவில் சில பத்திரிகைகள் தலையங்கம் எழுதின. அத்தோடு முடிந்துபோனது.
அவர் செய்த குற்றம் என்ன? இலங்கை அரசைக் கண்டித்து "நார்த் ஈஸ்டர்ன் ஹெரால்டு' என்ற ஆங்கில இதழில், அவர் கட்டுரை எழுதியதுதான் மிகப் பெரிய குற்றம். இதற்காக 2008 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, தற்போது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகளுக்குத் தண்டிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அவர் மீது இன்னொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது. இலங்கை அரசு 2006-ம் ஆண்டு கொண்டுவந்த நெருக்கடி கால ஒழுங்காற்றுச் சட்டத்தை மீறி நடந்துகொண்டதுடன் தீவிரவாத அமைப்புகளுக்குத் தனது பத்திரிகை மூலமாக ஆதரித்து நிதியுதவி திரட்டியும் தந்தார் என்பதுதான் இந்தக் குற்றச்சாட்டு.
அவர்கள் தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிடுவது விடுதலைப் புலிகளைத்தான். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு ஒரு பத்திரிகை மூலம் நிதிதிரட்டும் அவசியம் இருந்ததேயில்லை என்பதை உலகம் அறியும். இலங்கை அரசும் அறிந்ததுதான். இருந்தும் ஏன் இந்த இட்டுக்கட்டுதல்?
ஆசிய மனித உரிமைக் கழகம் தெரிவித்துள்ள கருத்தை எண்ணிப் பார்த்தால், அது மிகச் சரியானது என்பதை எவரும் ஒப்புக்கொள்வர். அந்த அமைப்பு தெரிவித்துள்ள கருத்து இதுதான்:
""இந்தத் தீர்ப்பு எங்களுக்கு ஆச்சரியம் தரவில்லை. அவர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாள் முதலாகவே நாங்கள் இதனை அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்று சொல்லி வருகிறோம். திசைநாயகம் எழுதிய கட்டுரையோ அவர் மீது சுமத்தப்பட்ட குற்றமோ இலங்கை அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆனால், இலங்கை அரசு இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, இதே கதிதான் உங்களுக்கும் என்று இலங்கையில் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டுவிட்டோம் என்று சொல்லும் புதிய சூழ்நிலையில், அங்கு உள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் சமிக்ஞை தந்துள்ளது. அதுதான் இந்த வழக்கு மற்றும் தண்டனையின் முக்கிய நோக்கம்''.
இதுதான் உண்மை. இலங்கையில் உள்ள எல்லா பத்திரிகைகளும் அரசின் அடிவருடிகள் அல்ல. சிங்களர்கள் நடத்துகிற பத்திரிகைகளும், சிங்களப் பத்திரிகையாளர்களும் இலங்கைத் தமிழர்கள் மீதான அத்துமீறல்கள் குறித்து எழுதி வருகின்றனர். அவர்களும்கூட அச்சத்தில் வாய்மூடிக் கிடக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதுதான் இந்த வழக்கு மற்றும் தீர்ப்பு சொல்லும் சேதி.
இலங்கைத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் செல்வதற்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன அல்லது சாதகமாகச் சொல்லக்கூடியவர்கள் மட்டுமே அனுப்பப்படுகிறார்கள். இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர்களும் தட்டிக் கேட்கிற தலைவன் இல்லாத வீட்டில் பதறிக்கிடக்கும் பிள்ளைகளாக இருக்கிறார்கள். அங்கே நடக்கும் பிரச்னைகளை வெளியுலகுக்குக் கொண்டுவரக்கூடிய வாய்ப்பு உள்ளவை சிங்கள ஊடகங்கள் மட்டுமே. இனி அவர்களும் இலங்கைத் தமிழர் விஷயத்தில் அடக்கிவாசிக்கவேண்டிய நிர்பந்தத்தை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பத்திரிகையாளர் என்பவர் எழுத்துப் போராளி. அவர் ஆயுதமே எழுத்துதான். "ஒரு கருத்தை என் மனம் ஏற்றது என்றால் அதை எடுத்துரைப்பேன்; எதிர்த்து எவர் வரினும் அஞ்சேன்' என்பதுதான் ஒரு பத்திரிகையாளரின் அறம். அதைச் செய்யத் தவறிய பத்திரிகையாளர்தான் சமூகத்தில் தார்மிகக் குற்றவாளி. ஆனால், இலங்கையில் தன் எழுத்துக்கடமையைச் செய்த ஒரு பத்திரிகையாளருக்கு, இவ்வளவு பெரிய தண்டனை அநியாயமானது. ஆனால், தமிழகத்தில் இந்த இலங்கைத் தமிழனுக்காக, அட! ஒரு சக பத்திரிகையாளருக்காக, எந்தவொரு பெருங்குரலும் எழவில்லை. இந்தத் தீர்ப்பைக் கண்டிக்கவில்லை. இலங்கை அதிபர் ராஜபட்ச பொதுமன்னிப்பு வழங்க முடியும், அவரை விடுவிக்க முடியும். இங்குள்ள ஊடகங்கள் அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரவில்லை. பாவம் அவர், தாயகம் இல்லாப் பிள்ளை தாயில்லாப் பிள்ளைதானே!
இது அந்த நாட்டு விவகாரம் என்று சொல்வது கேட்கிறது. ஆனாலும், ஒரு சிறு அச்சம். இலங்கைத் தமிழர் பிரச்னையை ஆதரித்தும், ராஜபட்சவைக் கடுமையாக எதிர்த்தும் எழுதுகிற பத்திரிகையாளர்களை, தங்கள் நாட்டுத் தீவிரவாதிகளுக்கு உடந்தை என்று இலங்கை அரசு வழக்குப் பதிவு செய்து, சர்வதேசக் குற்றவாளியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கேட்கத் துணிந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
இந்தக் கற்பனை "ரொம்ப ஓவர்' என்று சொல்லலாம். ஆனாலும், யானை உறங்கினால் பூனைகளும் ஏறிவிளையாடும் கரும்பாறையென்றே!