ஞாயிறு, 24 ஜூலை, 2016

இவரும் அவர்தானா?



எதிரிகளால் வரும் ஆபத்துக்களை விட எதிர்பாராமல் நண்பர்களிடமிருந்து வரும் ஆபத்துக்களே அதிகம் என்று பலரும் பல தடவைகள் அனுபவித்து எழுதியிருக்கிறார்கள். இதில் அழுது கொட்டுவதற்கு
எதுவுமில்லை.

அரசியலில்  இது இன்னும் மோசம். உண்மையில் அரசியல்வாதிகள்  மட்டும்தான் உலகத்திலேயே ஒற்றுமையானவர்கள். தங்கள் தேவைகளுக்காகவும் நன்மைகளுக்காகவும் கட்சி, மத, இன வேறுபாடுகளின்றி ஒற்றுமையாகச் செயற்படுபவர்கள் (உதாரணம் தமக்குத் தாமே சம்பள உயர்வு கொடுத்துத் தள்ளுவது).

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இடது சாரி வலது சாரி நடுவிலான் என்றெல்லாம் கோஷங்களோடும்
கொள்கை முழக்கங்களோடும் ஊர்வலம் வந்து அப்பாவி மக்களை நம்ப வைத்து ஆசனத்தில் அமர்ந்தவுடன் - "யார் நீ , எதற்கும் அலுவலகத்தில் மனுவைக் கொடுத்துவிட்டுப் போ பின்னர் பார்க்கலாம்"- என்ற சுபாவம் வந்து தொலைத்து விடுகிறது. இது நம்ம சமூகத்தில் மட்டும் நடைபெறுவதல்ல  என்பது கொஞ்சம் ஆறுதலாகவிருக்கலாம்.

தென் நாட்டில் துரும்பர் அவதாரம் எடுக்கப் போகிறார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிடட நிலையில் நம்ம நாட்டில் 'இது 2016' என்று நாமம் போட்டுக்கொண்டு வந்த இளவரசர் சமீபத்தில் போட்ட குண்டு
எனது செவிப்பறையைத் தாக்கியிருக்கிறது.

ஹார்ப்பரசரோடு ஒப்பிடுகையில் இவரது வெளிநாட்டுக்கு கொள்கையில் பல மாற்றங்கள் நிகழும்,
உலகில் போர்கள் தணிந்து மக்கள் தம்மைத் தாமே தூக்கி நிறுத்திக் கொள்ள, ஆசுவாசப் படுத்திக் கொள்ள ஒரு இடைவெளி கிடைக்கும் என்று நம்ப வைக்கப் பட்டவர்கள் 'என்ன இவரும் அவர் தானா?' என்று மூக்கில் விரலையே வைக்கிறார்கள்.

சிவப்பு சட்டைகளைப் போட்டுக்கொண்டு மனித உரிமைகள் பற்றிப்  பேசுபவர்களது நிஜ வாழ்க்கை  நீலச்  சட்டை போட்டுக் கொண்டு இனவாதம் பேசுபவர்களது வாழ்க்கையை விட மோசமானது என்ற எண்ணம் உங்களிடமும் இருக்கிறது என்றால் - நானும் உங்களினம்.

நம்ம நாட்டு இளவரசர் உலகத்துக்கு இப்படி எல்லாம் இம்சையரசராக மாறுவாரென்று நான்
நினைத்திருக்கவில்லை.

ஈராக்கிலிருந்து மூன்று நான்கு போர் விமானங்களை மீளப்பெற்றுவிட்டு 200 காலாட் படைகளை அனுப்பி
வைத்தது ஒரு அமைதி விரும்பி செய்யும் கடமையல்ல.

ரஷ்ய எல்லை நாடுகளில் நேட்டொ குவிக்கும் படைகளில் ட்ரூடோவின் படைகள் முன்னணி வகிக்குமாம். சவூதி கொலையரசர்களுக்கு கோடி கோடியாக ஆயுதங்களை வழங்கியமை அப்பட்டமான
நபும்சகத்தனம்.

பல வருடங்களுக்கு முன்னர் ஊரிலிருந்து வந்தவர் ஒருவர் சொன்ன கதை இது.

ஒருவருக்கு ஒரு இயக்கத்தில்  சேர விருப்பம். உள்ளூர் ஆள்பிடி காரரை அணுகி யபோது  'நீ  ஒரு  நோஞ்சான் உன்னை ஒரு இயக்கமும் சேர்க்காது ' என்று சந்தியில் வைத்து அவமானப் படுத்தி விடடார் அந்த ஆள்பிடி காரர். மனம் குழம்பிப் போன வீரவான் 'கொஞ்சம் பொறு நான் யாரெண்டு காட்டிறன்' என்று வீட்டுக்குப் போய்  கோடரி ஒன்றைக் கொண்டு வந்து சந்தியில் நின்ற ஒரு முதியவரைக் கொத்திக்
கொலை செய்து விட்டு 'இப்போ நான் வீரனில்லையா'? என்று கேடடாராம்.

இது ஒரு செவி வழிக்கதையாகவே  எனக்குத் தெரிந்திருந்தது. அன்றய சூழழில் இப்டியொரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பிருந்தது என்பது மட்டும் உண்மை.

ட்ரூடோவின்  நகர்வுகளை பார்க்க இந்த நோஞ்சானின் கதை தான் நினைவுக்கு  வந்தது. 'நானும் ரவுடி
தாண்டா' என்று வடிவேலு போலீஸ்காரரிடம் தன்னைக் கைது செய்யும்படி கெஞ்சுவதைப் போல இருக்கிறது ட்ரூடோவின் நடவடிக்கைகள்.

எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் அதையும் மீறி உலக சமாதானத்தைக் கொண்டு வருவதும் ஒரு வகை வீரம் தான்.

1964 இல் பல எதிர்ப்புகள் மத்தியிலும் அமெரிக்க குடியுரிமைச் சட்ட த்தில் (Civil Rights Act) கையெழுத்திட்டு நிறப்பிரிகைச் சடடத்தை இல்லாதொழித்த ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன்  போன்றவர்களைத் தான் நான் வீரர் என்று சொல்லுவேன்.

ஒவ்வொரு வாரமும் ஆளில்லா விமானத்தை ஏவுவதன் மூலம் பெண்களையும் குழந்தைகளையும்
கொன்றுவிட்டு உலக சமாதானத்துக்கான நோபல்பரிசைப் பெற்றுக்  கொண்ட பராக் ஒபாமா ஒரு வீரர் அல்ல.

ஹார்ப்பரை வெறுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அது நடிக்காமையின் விளைவு. ட்ரூடோவைப்  பலர் விரும்புவதற்குக் காரணம் அவர் சிறந்த நடிகனாக இருப்பதனால் எனவும் பார்க்கலாம்.

உள்நாட்டில் நிலைமை சீராக இருக்க வேண்டுமானால் வெளியுறவுக் கொள்கை நன்றாக இருக்க வேண்டும்.

இதை புரிந்துகொள்ள ஒருவர் ஐன்ஸ்டினாக இருக்க வேண்டுமென்பதில்லை.

உலகின் இன்றய நிகழ்வுகள் பேரழிவுக்கான கட்டியத்தைக் கூறுபனவாகவே இருக்கின்றன.

அமெரிக்காவில் துரும்பரின் வருகை வெள்ளை அதிகாரத்தின் மீளெழுச்சியின் அறிவிப்பு. நீண்ட
காலமாகக் கைவிடப்படட சாமான்ய வெள்ளையரின் சுனாமியைத் திசை திரும்பியவர் தான் துரும்பர். அதில்அடிபடப்  போவது வெள்ளையரல்லாதோர் தான்.

கிளின்ரன் ஒபாமா போன்றோரைப்  பாவித்து தமது இலாபங்களை பெருக்கிய பெரு வணிக நிறுவனங்களின் உலக மயமாக்கலினால்  சோபை இழந்துபோன அமெரிக்காவை மீட்டெடுக்கப் போவதாக உருக்கொண்டிருக்கும் துரும்பரை  இந்தத் தடவை யாராலும் நிறுத்த முடியாது. என்றுதான்
படுகிறது.

உலகெங்கும் வெள்ளை வெறி 'உரு' க்கொண்டு வருகிறது. பிரித்தானியாவின் உடைவு இந்தப் பெரு
விளையாட்டின் ஒரு அங்கம் தான்.

''பின் லாடனுக்கு ஆள் சேர்த்துக் கொடுப்பது அமெரிக்கா தான்' என்று பேராசிரியர் நோம் சோம்ஸ்கி ஒரு தடவை சொல்லாயிருந்தார்.

இப்போது இஸ்லாமிய பயங்கரவாதம் வெள்ளை வெறியினருக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கிறது. துரும்பருக்கு வெற்றிக்கு அதுவேதான் காரணமாகவிருக்கப் போகிறது.

புஷ் ஆட்சியை விட கிளின்ரன் ஆட்சியின் போது தான் அதிக உலக நாடுகளில் குண்டுகள் போடப்படடன. அதிக எண்ணிக்கையில் கறுப்பர்களைச் சிறையில் தள்ளியது கிளின்ரன் அரசு தான். அடுத்த கிளின்ரன் ஆட்சிக்கு வந்தாலும் 'ஆளப்' போவது பில் கிளின்ரன் தான் என்கிறார்கள். அவர் வணிக முதலைகளின் சேவகர்.

துரும்பருக்கும் கிளின்ரனுக்கும் போட்டி வரும் போது 'நானும் நோஞ்சானில்லை' என நிரூபிப்பவர்களால் தான் அதிக வெள்ளை வாக்குகளை எடுக்க முடியும். அதற்காகவே எங்கோ ஒரு அப்பாவி  நாடோ தலைவரோ, மக்களோ அழிக்கப்படலாம்.

துரும்பர் நிறைய சவுண்ட் கொடுக்கிறார். அவர் கைகளில் கோடரி இல்லை.

எனக்குப் பயம் சிரிப்பவர்கள்  மீதுதான்.

இக்கட்டுரை கனடாவிலிருந்து வெளிவரும் ஆடி மாத 'ஈ குருவி' பத்திரிகையில் பிரசுரமானது. இங்கு சில திருத்தங்களுடன் மறு பிரசுரமாகிறது.

வெள்ளி, 1 ஜூலை, 2016

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
செவ்வாற்றுக் கடமை

சென்ற வாரம் செவ்வாற்றில் இரண்டு திருவிழாக்கள் கொடியேறின.

நான் சொல்வது இசுக்காப்ரோவின் ரூஜ் றிவர் பகுதியை. (பிரஞ்சு மொழியில் ரூஜ்=சிவப்பு).

செவ்வாறு தமிழ்க் கனடியர்களின் தலைநகரம் என்பதில் சந்தேகமில்லை. கனடாவின் மூன்று நிலை அரசியல் கட்சிகளும் , வாதிகளும்  இதைத் தெரிந்தும் புரிந்தும் வைத்திருக்கின்றன என்று தான் -உங்களைப் போல - நானும் நம்ப விரும்புகிறேன்.

அதிகம் அரசியல் மயப்படுத்தப்பட்ட தமிழர்கள் வாழும் இடம் செவ்வாறு என்பதால் நடந்த திருவிழாக்கள் பற்றிய விவரணம் தேவையில்லை. எல்லாமே எப்போதோ -திட்டமிட்டப்டி - முடிந்த காரியம்.

இது தமிழர்களின் வாழிடம். தமிழரே வெற்றியைத் தீர்மானிப்பவர்கள் என்பது உண்மையாகிய பின் கட்சிக்கா அல்லது வேட்பாளருக்கா வாக்களிப்பது  என்ற விவாதம் - தர்க்க ரீதியாக இருப்பினும் - எடுபடாது.

இந்த அனுமானத்தில் மூன்று பிரதான கட்சிகளும் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தலாமென்றும் போட்டி வரின் ஜனநாயக முறையில் கட்சியின் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது, தலைவர்களாலும் அறிவிக்கப்பட்டது. இங்கு தலைவர்கள் என்பது கட்டாயமாகக் கட்சித் தலைவர்களைக் குறிக்கவேண்டுமென்பதில்லை.

முந்நாட்களில் இந்த ஜனநாயக நடைமுறை பல தடவைகள் கட்சித் தலைமைகளால் எகத்தாளமாக மீறப்பட்ட வரலாறு உண்டு. உழைப்பாளிகளின் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியும் இந்த ஜனநாயக மீறலைச் செய்தது.

இந்தத் தடவை முற்போக்கு பழமைவாதக் கட்சி ஜனநாயக மீறலைச் செய்துவிட்டது என அக்கட்சி வேட்பாளராக முனைந்து ஏமாற்றமடைந்த தமிழர் தியோ அன்ரனியும் இதர பல தமிழர்களும் குமுறுகிறார்கள். அவர்களின் குமுறல் நியாயமானதா என்பது பற்றி முகநூல் மற்றும் ஊடகத் தெருக்களில் பக்கவாட்டுத் திருவிழாக்கள்  பல நடைபெறுகின்றன.

முற்போக்கு பழமைவாதக் கட்சியிந் தலைவர் பற்றிக் பிறவுண் மீது எனக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. அதி பழமைவாத புற எல்லையிலிருந்த துருப்பிடித்த கட்சிக்கு ஓரளவு முற்போக்கு முகம் கொடுத்தவர் பிறவுண். அவருடைய தந்தையார் ஒரு புதிய ஜனநாயகக் கட்சிக்காரர் என்பதால் அவர் மீது கொஞ்சமாவது  முற்போக்குத் தூசி படிந்திருக்கும். அதையும் விட ஒரு துடி துடிப்பான செயல் வீரர். மெருகு படுத்தப்பட்ட மேற்தட்டு பழமைவாதம் அவரிடம் இல்லை. பலத்த எதிர்பார்ப்புகளையும் முறியடித்து அவரைத் தலைவராக்கியதில் தமிழருக்குப் பெரும் பங்குண்டு என்பதை உணர்ந்தவர், அடிக்கடி பிரதான மேடைகளிலும் சொல்லிக காட்டுபவர்.

இந்த தடவை அவரது கட்சி வேட்பாளர் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்படுவார் என  அவர் அறிவித்தவர் என்ற விடயம் முறையீட்டாளர்களால் மீண்டும் மீண்டும் முழங்கப் படுகிறது.

செவ்வாற்று வேட்பாளர் தெரிவில் அவர் தடுக்கி விட்டார் என்பவர்களும் தடுக்கி விழுத்தப்பட்டார் என்பவர்களும், கட்சித் தலைவர் கட்சிக்கு எது தேவையோ அதைச் செய்திருக்கிறார் என்பவர்களுமாகத் தமிழர் பிரிந்தே போய்விட்டார்கள்.

அவரது தெரிவு - கட்சியி தெரிவு - றேமண்ட் சோ. றேமண்ட் சோ தமிழருக்குப் புதியவர் அல்ன்லர். ஆனால் தமிழரல்லர். ஆயிரத்துக்குமதிகமான வாக்குகளைத் தயார் செய்துகொண்டு போட்டிக்காக ஜனநாயகக் களத்தில் இறங்கி நின்ற தமிழரைப் புறம் தள்ளி  விட்டு றேமண்ட் சோ களமிறக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நடைமுறை தவறு எந்று குரலெழுப்புபவர்கள் பலர். அது தமிழர் ஒதுக்கப்பட்டார் என்பதற்காகவா அல்லது ஜனநாயகம் ஒதுக்கப்பட்டது என்பதற்காகவா எந்பது குறித்த விவாதம் இரண்டாம் பட்சம்.

வேட்பாளர் தெரிவில் கட்சித் தலைமைகள் தலையிடக்கூடாது என்பதுவே எனது வாதம்.

இந்தத் தடவை லிபரல்களின் கோட்டையான ரூஜ் றிவரை நீலமாக மாற்றிவிட வேண்டுமென்பதுதான் கட்சியினதும் தலைவரினதும் நோக்கம் என்றும் அந்த வெற்றியைத் தேடித் தர வல்லவர் றேமண்ட் சோ மட்டுமே என்றும் கட்சித் தமிழர்கள் அடம் பிடிக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் றேமண்ட் சோ வெற்றி பெறின் மானில அரசில் ஒரு தமிழரை அமர்த்தும் வாய்ப்பை வலுக்கட்டாயமாகப் பறித்த குற்றம் கட்சிக்கும், தலைமைக்கும், கட்சித் தமிழருக்கும் சாரும்.

பழமைவாதக் கட்சி தமிழரிடம் வேரூன்றுவதற்கு நிறைய வருடங்கள் பிடித்தது. பல தமிழர்களின் உழைப்பின் பெறுபேறு அது.

தியோ அன்ரனி விடயத்தில் கட்சி இழைத்தது தவறு என நம்பும் தமிழர்கள் - தியோ அன்ரனியை வெறுப்பவர்கள் கூட - அதிகம். கட்சியும், அதன் நம்பிக்கை நாயகனான பற்றிக் பிறவுணும் தமிழருக்குத் துரோகம் செய்துவிட்டதாகவே அவர்கள் பார்க்கிறார்கள்.

இந்தத் தடவை றேமண்ட் சோ வென்றாலும் சரி தோற்றாலும் சரி தமிழர்களின் வெஞ்சினத்திலிருந்து கட்சி விடுபட பல ஆண்டுகள் பிடிக்கலாம்.

இது ஒரு இடைத் தேர்தல் மட்டுமே. இதில் கட்சி ஒரு தமிழரை நிறுத்தி அவர் தோற்றிருந்தாலும் கட்சிக்கும் தலைவருக்கும் அது வெற்றியே தான்.

தமிழருக்கு சந்தர்ப்பம் கொடுத்த நன்றிக்காக அடுத்த மானிலப் பொதுத் தேர்தலில் தமிழர்கள்  பழமைவாதக் கட்சிக்கு - இதர தொகுதிகளிலும் வாக்களிக்க முன்வருவார்கள்.

இந்த தடவை றேமண்ட் சோ வைச் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்பதால் தொகுதிக்கோ அல்லது பழமைவாதக் கட்சிக்கோ எந்தவித பலனுமில்லை.

றேமண்ட் சோவின் தெரிவில் கட்சி எடுத்த முடிவு சரியானது என வாதிடும் கட்சித் தொண்டர்களும் முன்னாள் வேட்பாளர்களும் (தமிழர்களை மட்டுமே சொல்கிறேன்) தேவை கருதிய ஒத்தோடல் வகையறாக்களே.

அடுத்த தேர்தலில் இந்தத் தொகுதியிலோ அல்லது வேறெந்தவொரு தொகுதியிலோ வேட்பாளர் தெரிவின்றி ஒரு தமிழரல்லாதார் களமிறக்கப்படும் போது அதில் போட்டியிடும் தமிழரில் ஒருவராக இத் தொண்டர்களில் ஒருவர் இருக்க நேரிடலாம். யார் கண்டது.

இந்த வேட்பாளர் தெரிவுகளின் பின்னணியில் இருக்கும் பரிந்துரைகள், கை முறுக்கல்கள், முதுகு சொறிதல்கள் போன்ற இன்னோரன்ன நடவடிக்கைகள் புதியனவையோ அல்லது தமிழரிடம் மட்டுமே உள்ள குணாதிசயங்களோ அல்ல.

செவ்வாற்றுக்கு ஒரு வரலாறுண்டு. தமிழர்களின் வாக்குப் பலத்தை உலகெங்கும் பறை சாற்றிய பலமும் அதற்குண்டு.

வாய்ப்பைக் கொடுக்காது வாக்கைப் பெற நினைப்பதை (நந்றி: வாசு சங்கரப்பிள்ளை) அது மன்னிக்காது.

செவ்வாறு தமிழர் குடிசையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். நொந்துபோயிருக்கும் ஈழ வடுக்களுக்கு அதுதான் மாளிகை.

சிவதாசன் ஜூன் 2016




*********
கூட்டுக் கட்டுரை

என்னைக் கேட்டால் - பழமைவாதக் கட்சி தவறிழைத்திருக்கிறது. இதனா ல் அவர்கள் தமிழரின்  பெருங் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதன் விளைவுகள் இந்த இடைத் தேர்தலையும் தாண்டி பல தமிழர் வாழும் பகுதிகளிலும் பாதிப்புகளை உருவாக்க வாய்ப்புண்டு.

றேமண்ட் சோ இந்தத் தேர்தலில் தெரிவானால் ஒரு தமிழர் மானில அங்கத்தவாரக வரும் சந்தர்ப்பம் பறிக்கப்பட்டு விடும் எந்ற ஒருவித கசப்பான உணர்வு மக்கள் மத்தியில் வேரூன்றிவிடும்.

றேமண்ட் சோ வேட்பாளாராக வேண்டுமென்ற எண்ணத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தால் அது கட்சியின்  தந்திரம். தியோ அன்ரனி வேட்பாளராகக் கூடாது என்பதற்காக முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அது தமிழரின்  மந்திரம்.

இது அரசியல்
நமக்கேன் வம்பு?




ஷான் & ஜயா சந்திரசேகர் கலைக் குடும்பம்






இன்று ஒரு மகத்தான நாள். தற்செயலாக மார்க்கம் நகரிலுள்ள ATN கலையகத்துக்குப் போகக் கிடைத்தது. அதன் உரிமையாளர் ஷான் எனக்கும் என்னுடன் வந்த இரு நண்பர்களுக்கும் (குலா செல்வத்துரை, சிறிதரேன் துரைராஜா) தன் கலையகம் முழுவதையும் நேரில் அழைத்துச் சென்றுகாட்டினார். வட அமெரிக்காவிலேயே குறிப்பிட்டுச் சொல்லத்தக்க புதிய தொழில்னுட்பங்களை உள்வாங்கிய futuristic வடிவமைப்பு. ஏறத்தாழ 140 பேர் பணி புரிகிறார்கள்.

ஷான் சந்திரசேகரும் அவரது மனைவி ஜயா சந்திரசேகரும் ஒரு சிறிய எடிட்டிங் அறையினுள் பணியாளருக்கு அருகிலிருந்து சிறு திரையொன்றைக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தார்கள். கண்ணாடிச் சுவருக்குள்ளால் எங்களைக் கண்டதும் எழுந்து வந்து வணக்கம் சொல்லி வரவேற்று (நான் முன்னர் ஒருபோதும் அவரிடம் பேசியிருந்ததில்லை ஆனால் என்னுடன் வந்த குலா செல்லத்துரையை அவருக்குத் தெரியும்) உள்ளே அழைத்தார். மனைவியாரும் எழுந்து நின்று கரம் கூப்பி வணக்கம் சொன்னார்.

நாங்கள் நிகழ்ச்சியொன்றின் ஒளிப்பதிவிற்காக அவசரமாகச் சென்று கொண்டிருந்தோம். அதுவும் அவருக்குத் தெரியும். அப்படியிருந்தும் நீங்கள் அவசியம் இந்த ஒளிப்பதிவைப் பார்த்தேயாக வேண்டும். இது வேறெங்கும் கிடைக்காத பதிவு என்றார்.

சின்னதொரு எடிட்டிங் திரையொன்றில் சிவாஜி கணேசன் படப்பிடிப்பு ஒன்றிற்காக ஒத்திகை போட்டுக் கொண்டோ அல்லது இடைவேளையில் இளைப்பாறிக் கொண்டோ இருந்தபோது ஷான் அவரைப் பிடித்துக்கொண்டார் போலும். இப்போதய வயதைவிட அரை வயதுத் தோற்றத்துடன் சிவாஜியைப் பேட்டி கண்டு கொண்டிருந்தார்.

அப்போது, வெளி நாட்டுத் தமிழருக்கு (இந்தியருக்கு?) என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பது போன்றொரு (?) கேள்வியைச் ஷான் கேட்டிருக்க வேண்டும். சிவாஜி ஆங்கிலத்தில் பதிலளிக்க முனைந்தபோது ஷான் 'நீங்கள் தமிழிலேயே பதில் சொல்லுங்கள்' அன்போடு கேட்டுக்கொள்ள 'அங்கேயும் தமிஸ் பேசுவாங்களா?' என்ரூ சிரிப்போடு சிவாஜி பேச ஆரம்பித்தார். ஒரு வித தயாரிப்பமில்லாது மழையாக வந்த அவரது கூறும் பேச்சு ஒரு வகையில் 'மனோகரா' வசனத்துக்கும் 'தேவர் மகன்' வசனத்துக்கு இடைப்படட தொனி. எந்தவித மிகைப்பாடும் இல்லாத சினிமா கலக்காத சுத்த தமிழ். அவரின் உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்து வந்த அந்த சிங்காரத் தமிழைக் கேட்டுக் கொண்டிருக்கவேண்டும் போலிருந்தது. தமிழ் மீதும் தமிழர் மீதும் தான் வாழ்ந்த மண்ணின் மீதும் அவர் காட்டிய பாசம் என்னக்குப் போதையையே ஏற்றியது. சிவாஜியின் இழப்பை இப்போதுதான் நான் மனப்பூர்வமாக உணர்ந்தேன். கண்கள் பணிக்கவாரம்பித்தன.

எங்கள் நிகழ்ச்சி பதிவு முடிந்ததும் மீண்டும் தான் பணியை இடை நிறுத்திக்கொண்டு ஷான் எங்களை அழைத்துச் சென்று தான் கலையகம் முழுவதும் காட்டினார். அவருடைய தந்தையார் முதற்கொண்டு சகோதரி (பத்மா சுப்பிரமணியம்) சகோதரர்கள், அவரது பத்து வயதில் எடுத்த திரைப்படத்துக்கான விருது என்று பல வரலாற்றுப் பதிவுகளை ஒளிப்படங்களாக வைத்திருந்தார்.

அதில் ஒரு படம் முதற் கணிப்பில் இன்னுமொரு 'படம் காட்டும்' படம் அல்லது நம்மவர் தம் அலுவலக சிம்மாசனத்துக்குப் பின்னால் மாட்டும் படம் என்றே கணித்திருந்தேன். அப்படத்தில் ஷானுக்கு வலது பக்கத்தில் முன்னாள் கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் இடது பக்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நின்றுகொண்டிருந்தனர். மோடியின் வலது கை ஷானின் இடது தோளைபி பற்றியிருந்தது. மூவரும் சிரிப்பில் ஆழ்திருந்தபோது கமரா இமையை மூடிவிட்டது போலும்.

அப்படத்தை மட்டும் சுட்டிக் காட்டி ஷான் சொன்னார் "இது ஒரு ironic moment. தான் இந்தியாவில் பிறந்திருந்தும் தன்னை ஒரு இந்திய பிரதமருக்கு 'இவர் ஒரு மிகச் சிறந்த கனடியர்' என்று கனடிய பிரதமர் அறிமுகப்படுத்தினார்" என்று சொன்னபோது மோடி சொன்னாராம் 'அப்போ அவரை மீண்டும் இந்தியாவின் உடைமையாக்கப் போகிறேன்' எங்ரவாறு மோடி சொன்னதாகவும் அதற்குப் பதிலளித்த ஹார்ப்பர் "தேவையான அளவு யுரேனியத்தை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் ஷானை நாகங்கள் விட்டுவிட மாட்டோம்"

ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்பதில் முதல் தடவையாக நம்பிக்கையை இழக்கச் செய்துவிட்டார் ஷான்.

கரந்துறைந்து வாரி வழங்கும் பாரியாக ஷான் இருந்ததற்கான வெகுமதிதான் இந்த ஹார்ப்பரின் பரிசு.

உங்களுக்காக இலவச வானொலியைத் தருகிறேன் (sirius XM), இலவசமாக ஒளிப்பதிவு செய்து சமூகத்தை முன்னேற்றும் எந்தப் பணிகளுக்கும் இந்தக் கலையகத்தின் எந்தப் பகுதியையும் இலவசமாகத் தருகிறேன். வாருங்கள் என்கிறார்.

கடவுளின் கருணையால் நிரம்ப உழைத்து விட்டேன். இனித் திருப்பிக் கொடுக்கும் காலம் என்கிறார். அவை உதட்டிலிருந்து வந்த வார்த்தைகளென நான் நம்பவில்லை.

நான் கடந்து வந்த பாதையைப் பார்க்கும்போது ...வலிக்கிறது. ஒப்பிடாமலிருக்க முடியவில்லை.