சனி, 15 செப்டம்பர், 2018

திருக்குறள் - மொழி மாற்ற வரலாறு


திருக்குறள் - மொழி மாற்ற வரலாறு 


சமீபத்தில் முக நூலில் ஒரு பதிவு வந்தது. ' கட்டாயம் பார்க்கவும்' குறிப்போடு வந்த இப் பதிவைத் தாண்டிப் போக முடியவில்லை.

அதில் ஒரு அறிவாளி பேசிக் கொண்டிருந்தார். நல்ல பேச்சு வன்மை மிக்கவர். விடயம் இதுவரை தமிழருக்குத் தெரியாத ஒன்று. பூடகமாக நகர்த்திச் சென்ற அவரது பேச்சு பிரசார வாடையுடன் இருந்தது.

சாரம் இதுதான்.

"ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றியதும் இங்குள்ள பிராமணர்கள் 'தேவ பாஷை' என்ற காரணத்தைக் காட்டி சகலவிதமான சமஸ்கிருத சுவடிகளையும் ஆங்கிலத்திலும், அதன் வழியாகப் பிற மொழிகளிலும், மொழிபெயர்த்து விட்டார்கள். ஆனால் 'நீஷ' பாஷையான தமிழ் (திராவிட) சுவடிகளை மட்டும் தீயிட்டுக் கொழுத்தும்படி உத்தரவிட்டார்கள். அந்தக் காலத்தில் சென்னையில் பணி புரிந்த F.W.Ellis என்பவர்தான் திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்" என்று அவர் கூறுகிறார்.

இந்தப் பதிவுக்கு மறு பதிவிட்டிருந்த இன்னுமொரு முகநூல் நண்பர் "எனக்குத் தெரிந்த வரையில் திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது ஜி.யு. போப்  என்பவர் தான்" என்று குறிப்பிட்டிருந்தார்.

எனவே இது பற்றிய விசாரணையை மேற்கொண்டு தீர்ப்பு வழங்குமாறு நான் கூகிளாண்டவரிடம் இப் பெரும்பணியை ஒப்படைத்தேன்.

அவரது தீர்ப்பு இதுதான். வேறு ஆண்டவர்கள் வித்தியாசமான தீர்ப்புக்களையும் தரலாம். விரும்பினால் 'notwithstanding clause' ஐப் பாவித்து அப்பாலும் நகரலாம்.


  1. ஒரு சாமான்யவனின் ஒழுக்க, அற நெறிமுறைகள் பற்றி திருவள்ளுவர் எனப்படும் தத்துவ ஞானியால் கி.மு. 1-3ம் நூற்றாண்டில்  எழுதப்பட்டதாகக் கருதப்படுவது திருக்குறள்.
  2. எந்த மதங்களையும் முன்னிறுத்தாது எழுதப்பட்டது.
  3. உலகில் அதிக அளவு மொழி மாற்றம் செய்யப்பட்ட நூல்களில் , பைபிள், குரான் ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது நிலையில் உள்ளது. 
  4. 2014 ம் ஆண்டு வரையில் 82 உலக மொழிகளில் பதிக்கப்பட்ட திருக்குறள் ஆங்கில மொழியில் மட்டும் 57 விதமான பதிப்புக்களைப் பெற்றுள்ளது.
  5. முதன் முதலாக இந்த நூல் Constantius Joseph Beschi என்பவரால் 1730 இல் இலத்தின் மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டதன் மூலம் ஐரோப்பியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த மொழி மாற்றம் முழுமையானதாகவிருக்கவில்லை. 'அறம்' , 'பொருள்' என்ற இரு அதிகாரங்களை மட்டுமே பெஸ்கி மொழி மாற்றியிருந்தார். 'இன்பம்' கிறிஸ்தவ மதப்பிரசாரகர்களுக்கு ஒவ்வாது எனக் கருதப்பட்டு அது மொழி மாற்றப்படவில்லை.
  6. 1767 இல் பெயர் தெரியாத ஒருவரால் திருக்குறள் பிரஞ்சு மொழியில் மாற்றம் செய்யப்படடாலும் அது பதிப்பிக்கப்படவில்லை.
  7. 1800 இல் August Friedrich Caemmerer என்ற டேனிஷ் மத போதகர் ஜெர்மன் மொழியில் மாற்றம் செய்திருந்தார்.
  8. முதலாவது பிரஞ்சு மொழியிலான திருக்குறள் 1848 இல் Monsieur Ariel என்பவரால் செய்யப்பட்டது. அதுவும் மூன்று அதிகாரங்களையும் கொண்டதல்ல.
  9. 1865 இல் Karl Graul என்பவரால் ஜெர்மன் மொழியில் மாற்றம் செய்யப்பட்டாலும் அவரது திடீர் மரணம் பணியை இடை நிறுத்தி விட்டது.
  10. முதலாவது ஆங்கில மொழி மாற்றம் Francis Whyte Ellis என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவரால் மொழி பெயர்க்கப்பட்டது 120 குறள்கள் மட்டுமே. 
  11. 1840 - 1852 இடையில் W. H. Drew என்பவர் முதலிரண்டு அதிகாரங்களையும் ஆங்கில உரைநடையில் மொழிபெயர்த்தார். அத்தோடு பரிமேலழகரது தமிழ் உரையையும் ராமானுஜ கவிராயரது விரிவுரையையும் ட்ரு அத்தோடு இணைத்திருந்தார். இங்கும் 630 குறள்களை மட்டுமே ட்ருவினால் மொழிபெயர்க்க முடிந்தது. மீதி யாவற்றையும் John Lazarus எனப்படும் சுதேச மத போதகர் தான் மொழி மாற்றம் செய்தார்.
  12. திருக்குறளின் முதலாவது முழுமையான மொழி மாற்றத்தை 1886 இல் G. U. Pope என்பவரே செய்தார். இதன் பிறகு தான் திருக்குறள் உலகின் பிற மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதில் தகவல்  பிழைகள் ஏதுமிருந்தால் சுட்டிக் காட்டவும். ஆண்டவரிடம் மீண்டும் சமர்ப்பிக்கிறேன். ;)

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

Crazy Rich Asians (Chinese) - Movie Review


இந்தப் படத்தை நேற்று குடும்பத்தோடு சென்று பார்த்தேன். அதை பற்றி எழுதவேண்டுமென்றளவிற்கு அது என்னைப் பாதித்திருக்கிறது. அப் பாதிப்பிற்குப் பல பரிமாணங்களுண்டு - ஒன்று அரசியல்.

இது ஒரு முற்று முழுதாக சீன நடிகர்களைக் கொண்டு - சரி 99% சீன நடிகர்களைக் கொண்டு - தாயாரிக்கப்பட்ட ஹொலிவூட் படம். எப்படி Black Panther முற்று முழுதாக ஆபிரிக்க-அமெரிக்க நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்படடதோ அந்தளவுக்கு  ஹொலிவூட்டில் வெள்ளையரல்லாத ஒரு இனத்தை வைத்து வெள்ளையரல்லாத நடிகர்களால் நடிக்கப்பட்ட படம். அந்த வகையில் இப் படம் அவர்களுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறது.

இப் படத்தைப் பற்றி சில எதிர்மறையான விமர்சனங்களும் வந்திருந்தன. அதை பற்றிப் பின்னர் பார்க்கலாம்.

இப் படம் ஆரம்பத்தில் Crazy Rich Chinese எனப் பெயரிடப்படவிருந்ததாகவும் பின்னர் சந்தைப்படுத்தல் / வியாபாரம் / அரசியல் காரணமாகப் பெயர் மாற்றப்பட்டதாகவும் ஒரு கொசுறு உண்டு.

படம் கெவின் குவான் என்ற சிங்கப்பூரிய- அமெரிக்கரால் எழுதப்பட்ட Crazy Rich Asians என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. நியூ யோர்க்கைச் சேர்ந்த ஒரு சீன வம்சாவழிப்  பெண் பேராசிரியர் ஒருவர் அவளது  காதலனின் நாடான செல்வந்த சிங்கப்பூருக்கு அவனின் உறவினனர்  ஒருவரின் கல்யாணக் கொண்டாட்டத்துக்குப்  போகிறாள். அங்கு சென்றபோது தான் அவள் தனது காதலன் அதி பெரும் செல்வந்தக் குடும்பத்தின் ஒரே வாரிசு என்பதையும் அங்குள்ள சீன செல்வந்தர்கள் செல்வக் கொழுப்பில் வாழ்வதையும் அறிகிறாள். ஆனால் அவளோ ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து தந்தையார் கைவிடப்பட்டு தாயாரால் உருவாக்கப்பட்ட ஒரு சாதாரண பெண். அந்தஸ்த்துக்கும் காதலுக்குமிடையான போர். வில்லன், வில்லி, தோழன், தோழி, காமெடியன் ஆகிய அத்தனை தமிழ்த் திரைப்படப் பொருளடக்கங்களும் இங்குமுண்டு. ஒரு romantic comedy genre என்று சொல்லலாம். இறுதிக் கட்டத்தில் சோகம் பிச்சுக் கொண்டு வரும். முடிவைச் சொல்ல மாட்டேன்.

இப்படியான ஒரே கதையைப்  பல தமிழ்ப் படங்களில் பார்த்த feeling உங்களுக்கு வரும். ஆனால் அதுவல்ல இந்த விமர்சனத்தின் நோக்கம்.

படம்  இப்படியான மேற்கோளுடன் ஆரம்பிக்கிறது.

'China  is a sleeping giant. Let her sleep, for when she wakes she will move the world.' - Napoleon Bonaparte 

இந்தப்படம் உலகுக்கு, குறிப்பாக மேற்கு நாடுகளுக்கும் உலகளாவிய சீன வம்சாவழியினருக்கும் வெவ்வேறு செய்திகளைச் சொல்கின்றது. இதில் அரசியல் பின்னணி இருக்கிறது. இந்த நெப்போலியனின் மேற்கோள் ஒரு எச்சரிக்கை மணியோசை. 

இப் படத்தை Warner Brothers நிறுவனம் தயாரித்திருந்தது. Black Panther ரைத் தவிர  யூத இன அல்லது வெள்ளையின மக்களின் வாழ்வு கலாச்சாரங்களைக் கொண்டாடும் படங்களையே ஹொலிவூட் தயாரித்து வந்திருக்கிறது. முழுமையாக வெள்ளையரல்லாத பாத்திரங்களைக் கொண்டு ஹொலிவூட் படங்களைத் தயாரித்து மேற்கத்திய நாடுகளில் வணிக ரீதியாக வெற்றி பெறுவது கஷ்டம். இப் படத்தின் தயாரிப்பும் ஏகப்படட எதிர்ப்பின் மத்தியிலேயே நிறைவேறியிருக்கிறது. இதன் பின்னணியில் முழு சீன இனத்தின் உழைப்பும் ஒருமைப்பாடும் இருப்பது தெரிகிறது. நவீன சீனாவின் புதிய உலக ஒழுங்கின் பெரும் கட்டளைக் கோவையின் ஒரு sub routine தான் இது என்பது என் கணிப்பு.


இப் படம் மேற்குலகுக்குச் சொல்லும் செய்தி. உங்களைவிட நாங்கள் ஒரு காலத்தில் செழிப்பான கலாச்சாரத்தோடும் செல்வச் செழிப்போடும் வாழ்ந்தவர்கள். நாங்கள் இழந்த அந்த பொற்காலத்தை மீட்டுக் கொண்டுவிட்டோம். [இதற்குள் ஒரு உப கதை : ஒரு காலத்தில் பலமாக இருந்த சீனாவைப் பிரித்தானியர் அபினி யுத்தத்தினால் தான் (Opium War) வெல்ல முடிந்தது. சீனர்களின் பலவீனம் போதையும் சூதாட்டமும் என்பார்கள். ]  சிங்கப்பூரின் ஒரு செல்வந்தரின் வீடு ஒன்றைக் காட்டும்போது அதைச் சுவர்க்க புரியாககே காட்ட எடுக்கப்பட்ட முயற்சியும் பொருட் செலவும் தேவை கருதியது தான். இன்று மேற்கத்தியர்களுக்கு இருக்கக்கூடிய அதியுயர் பெருமை பக்கிங்ஹாம் மாளிகை எனின் இது அதைவிடப் பன்மடங்கு பிரமாண்டமானது அது. அது செயற்கையான பளிங்கு மாளிகையேயேயாயினும் அங்கு நடமாடிய பாத்திரங்களின், அக் கொண்டாட்டங்களின் பின்னணியில் ஒரு செய்தி இருக்கிறதை உணர முடிகிறது. அது தான் We are back...என்பது.

அத்தோடு இப்படம் உலகச்  சீன இனத்தாருக்கு, சீன வரலாறு கலாச்சாரங்களைத் தெரியாது வாழும் மேற்கத்தைய கலாச்சார வெள்ளத்தில் அடிபட்டுப் போய்க்கொண்டிருக்கும் இரண்டாம், மூன்றாம், நாலாம் தலைமுறைகளுக்கு ஒரு செய்தியையும் சொல்கிறது. 'நீங்கள் பெருமைப்பட்டுக் கொண்டாடுமளவுக்கு உங்களுக்கு ஒரு கலாச்சாரப் பாரம்பரியமிருக்கிறது. தயவு செய்து மீண்டு வாருங்கள். இந்த அறைகூவலைச் செவ்வனே செய்திருக்கிறது இப் படம். பாத்திரத் தேர்வுகள் முதல் ஆடையணி, அலங்காரம், படாடோபம், அழகு, கவர்ச்சி, இளமை, டாம்பீகம் என்று எதையுமே விட்டு விடவில்லை. திரைக் கதையின் வரிகள் சீன கலாச்சாரத்தின் செழுமையைப் பேசும் அதே வேளை அமெரிக்க கலாச்சாரத்தை ஒப்பீடடளவில் இகழ்வதும் இப் படத்தின் நோக்கத்தை வெளிக்காட்டுவதாக அமைகிறது. இளைய தலைமுறையினருக்கு நவீன இளைஞர்களுக்கும் பண்டைய முதியவர்களுக்கும் தம் இனத்தின் மீதான ஈர்ப்பை இப் படம் அதிகரிக்கச் செய்கிறது. 

இப் படத்தை  99% Asians என்று ஆரம்பத்தில் சொன்னேன். 'இந்திய' இனமாக அடையாளம் காணப்படும் எமக்கு ஒரு sore point இப் படத்தில் உண்டு. இந்த செல்வந்த சீன வீடுகளின் காவலாளிகளாகவும் வாகன தோட்டிகளாகவும் கீழ் மட்டமெனக்  கருதப்படும் வேலைகளை பார்ப்பவர்களாக இந்தியர்கள் / தமிழர்கள் சித்தரிக்கப் படுகிறார்கள். யதார்த்தமும் அதுவேயானாலும் மேற்கத்தைய ரசிகர்களுக்கு நாம் மூன்றாம் பட்சமாகவே காட்டப்படுவோம். வீட்டுக்காரி வெள்ளைத் தோலுள்ள சிமிதாவாகவும் வேலைக்காரி கறுப்புத் தோலுள்ள காத்தாயியாகவும் பாத்திரம் படைக்கும் தமிழர்கள் இருக்கும்போது நான் சீனரைக் குறை சொல்ல முடியாது. ஆனால் அந்த 1% Asians இற்காகவேனும் யாரும் படமொன்று தயாரிக்க வேண்டும். 

மன்னிக்க வேண்டும் ஒரு தவறு. இதில் ஹீரோவாக வருபவர் ஒரு அரை வெள்ளையினத்தவர், Henry Holding. Nick Young என்ற திரைப் பெயரில் நடிக்கும் இவரது தாயார் ஒரு மலேசியர்  தந்தையார் ஒரு ஆங்கிலேயர். அதனால் 98.5% சீனர்கள் நடித்தது என்பதுவே சரி.



மூவேந்தர்க்களைச் சொல்லி திராவிடம் வளர்ந்தது. திராவிடத்தைக் காட்டி தமிழரசு (கட்சி) வளர்ந்தது. தமிழரசின் நிழலில் இயக்கங்கள் வளர்ந்தன. இயக்கத்தின் பெயர் சொல்லி புலம் பெயர் தமிழர் வளர்ந்தனர். பெருமை தரும் வரலாறும் ஒரு வகையில் சொல்லப்பட வேண்டியதே என்பதை இப் படம் எனக்கு சொல்லித் தந்ததாகவே நான் பார்க்கிறேன். 

போய்ப் பாருங்கள்.






திங்கள், 30 ஜூலை, 2018

மாயப் பெட்டி


மாயப் பெட்டி 

அறை - 1

நீண்டநாட்கள் மறைந்திருந்த அந்த nostalgia சங்கடம் கடந்த சில நாட்களாகத் தொல்லை தரத் தொடங்கி விட்டது. பல ஒளித்தட்டுக்கள் (ஒலியும் தான்)அடங்கிய பெட்டியொன்று ஒருநாள் என் மேசையில் குந்திக்கொண்டிருந்தது.

விடயம் இதுதான். எனது நீண்டகாலத் தேட்டமும் இரண்டாவது மிக விருப்பமானதுமான (முதலாவது தமிழ், இலக்கியம், எழுத்து) electronic hobby and serious stuff பலதுக்கு இறுதி விடை கொடுத்து அனுப்பியது என் மனைவிக்கு நல்ல  சந்தோசம். தட்டுகள் நிறைந்த புத்தகங்களுக்கு இன்னும் விதி வந்து சேரவில்லை. இப்போதைக்கு மகிழ்ச்சி. மனைவிக்கு தமிழ் தெரியாவிடடாலும் அவளும்  ஒரு புத்தகப் பிரியை என்பதாலும் இருக்கலாம்.

பெட்டிக்குள் இருந்தவையம் எனது நீண்டகாலத் தேட்டமான ஒலி, ஒளித் தட்டுக்கள். அவற்றுக்கும் பிரியாவிடை கொடுக்கும்படியான வேண்டுகோள் ( அல்லது பணிவாக உத்தரவு) தான் அந்த மாயப் பெட்டி.

1983 இல் கனடா வந்ததிலிருந்து நான் எழுதிய, பேசிய நண்பர்களோடு குலாவிய சமூக, இலக்கிய அரட்டல்களை அவ்வப்போது பதிவு செய்து சேமித்து வைத்தவையே அந்தப் பெட்டியில் இருந்தவை. இவற்றில் எனது இலக்கிய , அரசியற் கிறுக்கல்கள் முக்கியம் பெறாவிட்டாலும் பல நண்பர்கள், படைப்பாளிகள், சுற்றத்தில் இருக்கவேண்டும் என நான் நினைக்கும் சில மனிதர்கள் என்று பலரை உள்ளடக்கிய புகைப்படங்கள் மிகவும் பூதாகாரமாக எழுந்து எனது கரங்களைக் கட்டி விட்டன. அவற்றை குப்பைக்குள் சேர்த்துவிடுவதில்லை என்று தீர்மானித்து விட்டேன்.  அது மட்டுமல்ல அப்படங்களில் உள்ளவர்களில் பலர் அகாலமாகப் பிரிந்து விட்டார்கள்.  அந்தப் படங்கள்  ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கதை இருக்கிறது. என் பிரிவிற்கு முன்னர் அவற்றைத் தமிழ்ச் சமூகப் பொது வெளியில் உலவ விட வேண்டும் என்பதே என் பெரு விருப்பு.

ஞாயிறு, 27 மே, 2018

'இனப்படுகொலை நாட்களில்' நூல் வெளியீடு

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
மாமுலனின் 'இனப்படுகொலை நாட்களில்' நூல் வெளியீடு 
ரொறொண்டோ மே 27, 2018

 மாமூலன் / வின்சன்ட் போல் / வரன் / ரஃபேல்  என்ற பல் வாடி நண்பரின் நூல் 'இனப்படுகொலை நாட்களில்: குரலற்ற பத்தி எழுத்துக்கள்' என்ற நூல் இன்று அரங்கேறியது. சங்கப்  பலகையை சு.மு. என்கின்ற சுவிஸ் முரளி கொண்டு வந்தார். நானும் மூர்த்தியும் (கனடா / ரொறொண்டோ/ மொஸ்கோ / சிங்கப்பூர்) நூலைப் பலகையில் ஏற்றினோம். 

மண்டபம் நிறைந்த கூட்டம். நீண்ட காலமாகச் சலிச்சுப் போயிருந்த இலக்கிய முகங்கள் பல சிரித்ததைக் கண்டது சந்தோஷமாயிருந்தது. 

நானும் மூர்த்தியும் அரை / அரை மணித்தியாலங்கள் பேசவேண்டும் என்பது முரளியின் கட்டளை. மூர்த்தி உசுப்பியும் நான் சொதப்பியும் பலகையைத் தள்ளிக் கரை சேர்த்துவிட்டோம். 

புத்தகம் ஈழத்தமிழரின் இனப்படுகொலை காலத்தில் அது தளம் கொண்டிருந்த ஒரு நிலத்தில் இருந்துகொண்டு இயலாமையில் வெளிக்கொணர்ந்த ஒரு வகைக் குமுறல். 2009 மே மாத்ம் முதல் அக்டோபர் வரை அக்குமுறல் ஒலித்திருக்கிறது. 

தமிழர் வாழ்ந்த இடமெல்லாம் ஈழப்போராட்டம் தளம் கொண்டிருந்தத்து. இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த ஒவ்வொரு தளமும் அதிர்ந்து கொண்டிருந்தன. அவற்றில் வாழ்ந்த ஒவ்வொரு தமிழனும் குமுறிக் கொண்டுதான் இருந்தான். வரைபடக் கருவி போல ஒவ்வொரு தமிழனின் கரத்திலும் பேனா பொருத்தப்பட்டிருக்குமானால் காகிதம் கிழிந்தே போயிருக்கும். அப்போது மாமூலன் கரத்தில் ஒரு பேனா மட்டுமல்ல வாயினுள் உரமான நாக்கும் இருந்தன.

அவை எழுதியும் பேசியும் கிழித்தவற்றை முரளிதரன் ஒட்டித் தந்ததுதான் இந்த நூல்.

மாமூலனை எனக்கு கிட்டத்தட்ட 15 வருடங்களாகத் தெரியும். நண்பர் திலிப்குமார் அறிமுகம் செய்து வத்தவர். பாரிஸ் நகரில் கலை இலக்கியச் சந்து வாழ்வை விட்டு வந்தவர். பழகுவதற்கு இலகுவானவர் என்று சொல்ல முடியாது ஆனால் புரிந்தவர்களால் அவரது நட்பை உதறித் தள்ளிவிட முடியாது. குடைந்த ஆனால் நஞ்சில்லாத திருப்பாற்கடல். இனப்படுகொலை அவரை மீண்டும் குடைத்திருந்தது. சமரசம் செய்ய மறுக்கும் உள்ளம் அமைதியாவதற்கு நீண்ட காலம் எடுக்கும்.

அவரது இயல்பைச் சொல்லி நூலைப் பற்றிச் சொல்வதில் ஒரு தர்க்க நியாயம் இருக்கிறது. அவர் ஒரு எம்.ஏ. பட்டதாரி, தமிழ் மீது அளவிலாக் காதல் கொண்டவர். திட்டித் தீர்த்தாலும் தமிழர் மீதும் அப்படித்தான்.

இன்னூலில் அவர் எழுதிய கட்டுரைகள் பல இந்த அளவிலாக் காதலின் பால் ஏற்பட்ட வெப்பியாரத்தின் சில வடிவங்களே. அவை எழுத்திலும் ஒலியிலும் வராவிடில் எங்கள் வார இறுதி வாடிகளில் சுவர்களில் மோதிக்கொள்ளலாம். எப்படியாயினும் அவை வந்தேயாகும். 

இனப்படுகொலைக் காலத்தில் அவர் பார்த்த, கேட்ட, ஊகித்த விடயங்கள் இங்கு பல கட்டுரைகளிம் முகம் காட்டுகின்றன. அந்த விடயங்களை அவர் தரவுகளாக முன்வைத்த பிறகு அவற்றின் மீதான விமர்சனங்கள் நிழலாகத் தொடரும். மாமூலனைத் தெரிந்தவர்களுக்கு இந்த விமர்சனங்களே முக்கியம். வரலாற்று மாண்வனுக்கு அவர் தரும் தரவுகள் முக்கியம். 

இந்த நூலை அவர் வரலாற்று மாணவனுக்காக எழுதவில்லை. இத ஒரு வரலாற்று நூல் என்றும் அவர் சொல்லவில்லை. இது ஒரு கால முத்திரை குத்தப்பட்ட, காலப் பேழையில் அடைக்கப்பட்ட ஒருவரின் கதறல்கள். இன்னொரு காலத்தில் கேட்பவருக்கு இது ஒரு வரலாற்றுத் துளி.

எனக்குத் தெரிந்த ஒரு வரலாற்று மாணவி (முனைவராவதற்கான் படிப்பை இங்குள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் கற்றுக் கொண்டு வருபவர்) இந்த இனப்படுகொலை நாட்களில் கனடாவின் பிரதான ஊடகங்கள் எப்படியான செய்திகளை வெளியிட்டன. அவை இனத் துவேசத்தினால் மாசு படுத்தப்பட்டனவா? என்கின்ற ஆய்வைச் செய்து வருகிறார். வீதி மறிப்புப் போராட்டம் கனடாவிற்குப் புதிதாக இல்லை எனினும் சில பெரும் சமூக ஊடகங்கள் அதற்குப் பயங்கரவாதப் பரிமாணத்தைக் கொடுத்தன. ஒரு வரலாற்று மாணவன் கற்கைத் தேடுகையில் தரவுகள் மாசுபட்டவையாக இருக்க முடியாது.

மாமூலனின் இன்னூலில் விசேடம் என்னவென்றால் அவர் தனது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தும் போது அவற்றின் நிழல்களாக வந்தவையே தரவுகள். அவை உண்மைக்குப் புறம்பானவையாக இருக்க முடியாது ஏனெனில் அவர் வரலாறு எழுத முனையவில்லை.  

ஈழப்போராடடத்தின் இறுதிச் சாட்சியம் என்று எதையும் உத்தரவாதத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எனது கண்களில் இதுவரை படவில்லை. வந்துள்ள பல anecdotal என்ற செவி வழிச் செய்திகளின் பதிவுகளாகவே உள்ளன.

புஸ்பராஜனின் 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' எமது போராட்ட வரலாற்றின் ஒரு காலக் கூற்றைச் சொல்லியது. சுந்தரம், அய்யர், சாத்திரி, யோ கர்ணன் என்று பலர் தங்கள் காலப் பதிவுகளை மேற்கொண்டார்கள். இவை எல்லாம் ஒரு வகையில் வரலாற்றுச் சிதறல்கள் எனவே கொள்ளலாம். வரலாற்று மாணவனுக்கு இவை போதாது. இவை ஒரு perspective என்ற ஒப்பு நோக்குதலுக்கு உதவி புரியலாம்.

சமீபத்தில் வந்த மூன்று நூல்கள் இரண்டு வேறு விதமான ஒப்பு நோக்கலை  எனக்குத் தந்தன. The Sesons of Trouble by Rohini Mohan , The Road to Mulli Vaaikkal by Kamal Gunaratne and The Long Watch by Ajith Boyagoda. இவை மூன்றும் தனித்துவமானவை.

ரோகினி Mohan  ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர். முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த ஒரு தமிழ்ப் போராளிப் பெண்ணையும் கொழும்பிலிருந்து ஒரு தமிழ் இளைஞரையும் பாத்திரங்களாகக் கொண்ட நாவலாக இந்நூலைப் படித்திருந்தாலும் மறைமுகமாக இது ஒரு வரலாற்றுத் துகள் தான். ஒரு வகையில் பாத்திரங்களின் சுய விசாரணைகளின் தொகுப்பு. தீர்ப்பு வாசகரிடம் விடப்படுகிறது.

அஜித் பொயாகொட வின் நூல் ஒரு சிங்கள கடற்படை அதிகாரி புலிகளினால் நீண்ட காலம் சிறைவைக்கப்படட காலத்தின் அனுபவங்களின் விவரணை. போராடடத்தின் மீதான நியாயத்தை தன மக்களுக்குச் சொல்வதான  கதை. தன் மக்களின் சார்பான சுய விசாரணை.

கமால் குணரட்ன ஒரு சிங்கள இராணுவ டிவிஷன் கொம்மாண்டர். போரின் இறுதிக்கு கட்டம் அவர் கால்களிலேயே கிடந்தது என்கின்ற அளவுக்கு குறிப்புகளை முன்வைக்கிறார். அவருடைய பார்வை முற்றிலும் 'நான் ஒரு தேசிய பாதுகாவலன்' என்கின்ற தோரணையில் இருந்தாலும் சிங்கள இனவாதம் அவர் குறிப்புக்களில் நிழலாகப் பின் தொடர்ந்தது.

எந்தவிதமான வரலாற்றுக்கு குறிப்புக்களும் பாராபட்சமற்று எழுதப்படும்போது எதிர்குரல்கள் எழுவதைத் தவிர்க்க முடியாது. அதுவேதான் வெற்றியும் கூட. இல்லாவிடில் அது வெறும் பிரச்சார வெளியீடே .

இவையெல்லாம் ஈழத்தைத் தளமாகக் கொண்டவை. ஈழப்  போராட்டம் ஈழத்தை  மட்டும் தளமாகக் கொண்டிருக்கவில்லை. தமிழர்கள் உலகின் எந்தெந்த நாடுகளில் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் எமது போராடடம் தளம் கொண்டிருந்தது. எனவே அந்தந்த நாடுகளிலும் வரலாற்றுத் துணுக்குகள் உண்டு.

மாமுலனின் 'இனப்படுகொலை நாட்களில்' அப்படியான ஒன்று.

2009 மே  இலிருந்து அக்டோபர் வரை என்று தலைப்பிட்டிருந்தாலும் ரொறொண்டோவைத் தளமாகக் கொண்ட ஈழப்  போராட்ட வரலாற்றின் ஒரு காலக்  கூ(ற்)று  அது.

அந்த வரலாற்றைப் பார்க்குமுன்  மாமுலன் என்ற படைப்பாளியையும் பார்க்க வேண்டும். நான் இதைச் சொல்வதற்கு ஒரு காரணமுண்டு.

இயக்கங்களில் ஏதோ ஒரு வகையில் தம்மை இணைத்துக் கொண்டோர் சிலரிடம் ஒரு கருத்து நிலவுகிறது. போராட்டம் பற்றிய விடயங்களில் கருத்துக் கூறுவதற்கு அதில் சம்பந்தப்படாதவர்களுக்கு அருகதையில்லை என்பது போல. 'இவருக்கு என்ன தெரியும். இவர் அப்ப எங்க இருந்தவர்' என்ற தோரணையில் அமையும் வினாக்களுக்கு விடை சொல்வது தேவையற்றது.

வரலாறு என்பது ஒரு spectrum. ஆதி அந்தம் தெரியாத ஒரு நிறமாலை. இதற்கு  எவரும் பங்களிக்கலாம். அது பார்வையாகவோ, அவதானிப்பாகவோ கருத்தாகவோ இருக்கலாம். அந்த நிறமாலையின் காலகிரமத்திற்கும் ஒழுங்கிற்கும் ஒத்துவராதவற்றை அது நிராகரித்துவிடும். A kind of self testing mechanism.

மாமுலனின் 'இனப்படுகொலை நாட்களில்' ஒரு வரலாற்றுத் துண்டு. ரொறொண்டோவைத் தளமாகக் கொண்டது. அது சரியா தப்பா என்பதை வரலாறு பார்த்துக்கொள்ளும்.
மாமுலன் ஒரு தமிழ் மொழி, இனப் பற்றாளர். அரசியலில் எந்த நிலைப்பாடடையும் எடுத்தவர் அல்லர். சமரசம் செய்யாதவர் அதனால் பிழைப்புவாதத்துக்கு இடமில்லை. ஒரு குறுகிய நட்பு வட்டமே  அதற்குச் சாட்சி.

2004 / 05 காலப்பகுதியில் நண்பர் திலீப்குமார் இவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் ஒரு fake news தயாரிப்பாளர் அல்ல. சாய்வு நிலை (bias) அவரது எழுத்துக்களை பாதிப்பதில்லை. தேடல் மிக்கவர். பிரச்சார எழுத்துக்களை வெறுப்பவர்.


இந்த பின்னணியில் அவரது 'இனப்படுகொலை நாட்களில்' நுலைப் பார்க்கலாம்.
இதில் வரலாறு அல்ல முக்கியத்துவம் பெறுவது. ranting என்ற அவரது பொருமும் சுபாவமே எழுத்துக்களாக வருகின்றது. சமூகத்தில் நடைபெறுகின்ற பல விடயங்களை அவர் தன் பாணியில், தனது அளவுகோலில் அளந்து அவை உடன்படாத பட்ச்சத்தில் (பெரும்பாலும்) பொருமுவார். அவை ஒன்றில் எழுத்துக்களாக வரும் அல்லது நண்பர்கள் சந்திக்கும் போது கோபக் குறிப்புக்களாக வரும். பெரும்பாலான தருணங்களில் அவரது பொருமல்கள் நியாயமானவை. பல காலம் கடந்த பின்னரே நிரூபணமானவை.

இத்தகைய மாமுலனின் இந்தப் படைப்பு ஒட்டுமொத்த தமிழினமே கொந்தளித்துக் கொண்டிருந்தபோது எழுதப்படடவையானால் எப்படியானவையாக இருக்கும் என நீங்கள் எதிர்பார்க்கலாம்.

மே  முதல் - அக்டோபர் வரையிலானதாக குறிப்புக்கள் தலைப்பிடப்படடாலும் அவை அப்பாலும் இப்பாலுமாக நீட்டிக்கப்பட்டே  இருக்கின்றன.  ரொ ண்டோ தமிழர்களின் நடவடிக்கைகள் எப்படியாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எப்படியான விளைவுகளை அவை சந்திக்கும் என அப்போதே ஆருடம் கூறியிருந்தார். நமது சமூகத்திலிருக்கும் ஒழுங்கீனங்களை அவர் சொல்லிக் கொண்டே போகிறார். அது தான் அவர். இது என்ன வரலாறா என வாசகரம் பொருமலாம்.

மகாபாரதம், இராமாயணம், விவிலியம் போன்ற நூல்களில் parables எனப்படும் உப / கிளைக் கதைகள் வரும். அவற்றின் தேவை பல்முகப்பட்டது. ஒன்று பெருங்கதைகள் வாய்வழியாகச் சொல்லப்படும்போது இயல்பாக ஏற்படும் தளர்வைக் குறைக்க பிரசங்கியாரால் கொடுக்கப்படும் ஒரு வகையான உற்சாக dose. இரண்டாவது அக்கதைகளினால் சுட்டிக்காட்டப்படும் தர்மம்.

மாமுலன் கட்டுரைகளில் இது reverse ஆகப் பிரயோகம் பெறுகிறது. அதாவது அவரின் பொருமல்களின் பின்னால் தர்மம் இறைஞ்சப் படுகிறது. அதே வேளை அப் பொருமல்கள் ஒரு வரலாற்றின் தொங்கு புள்ளிகளாகவும் பரிணாமம் பெறுகின்றன.  பல சம்பவங்கள் காலக் கிரமத்துடன் சொல்லப்பட்ட்டபின் அவற்றின் மீதான பொருமல்கள் தொடர்கின்றன. ஒரு வகையான உற்சாக dose.

கனடாவின் பெரும்பாலான வாசகர்களுக்கு பல சம்பவங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால் மாமுலன் ஒரு படி உள்ளே போய் அச் சம்பவங்களுக்கான காட்சிப் படிமங்களையும் சில இடங்களில் நிஜமான பாத்திரங்களையும் குறிப்பிடுவதன் மூலம் அச் சம்பவங்களின் பின்னாலுள்ள உண்மைத்தன்மையை நிரூபிக்கிறார். அவரது குறிப்புகளுடன் உடன் படாதவர்கள் மறுதலிக்க முடியாதவாறு தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதர நாடுகளின் வாசகர்களுக்கோ அல்லது வரலாறுத் தொகுப்பாளனுக்கோ  இச் சம்பவங்களினுடு இழையுடும் வரலாற்றுத் துணுக்குகள் பயனுள்ளனவாக அமையும்.

இந்த வரலாற்றுத் துணுக்கில் மாமுலனின் பொருமல்களில் இடம்பெறாத ஒருவர் இந்த சுவிஸ் முரளி. அவரும்  ஒரு கதை சொல்லி அத்தோடு பல கதைகளின் கதை மாந்தர். இங்கு அவர் வரலாற்றுப்  'புள்ளி'

அவரின் நச்சரிப்பால் தான் இந்த நூல் சாத்தியமானது என்றும் மாமுலன் பொருமியிருக்கிறார். அவரின் பொருமல்கள் நன்றாகவே முடிகின்றன என்பதற்கு இப் புத்தகம் ஒரு சாட்சி.
உள்ளே  போய் வாசித்து கிரகித்து, பொருமல்களின் பிடிடியிலிருந்து வராற்றைப் பிரித்தெடுத்து சேமித்துக் கொள்வது உங்கள் கடமை.




செவ்வாய், 10 ஏப்ரல், 2018

கனடிய அரசியலில் தமிழர்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

கனடாவில் தமிழரின் பெருமளவிலான குடி வரவு ஆரம்பித்தது 1982 ம்; ஆண்டளவில் தான். இதை ஆரம்பித்து வைத்தவர்களாக ஜேர்மனி நாட்டில் தஞ்சம் கோரியிருந்த தமிழர்களைக் குறிப்பிடலாம். அப்பொழுது பிரித்தானிய பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு நுழைவு முன் அனுமதி பெறாமலேயே  கனடாவில் கால் பதிக்கலாம் என்ற விதி இருந்தது.  இச் சலுகையைச் சாதகமாக்கிக் கொண்டு பல தமிழர்கள் கனடாவின் பல இறங்கு துறைகளில் வந்திறங்கி அகதி நிலை கோரினார்கள். அப்போது பிரதமராக இருந்த பியர் ட்ரூடாவின் அரசும் அதைத் தொடர்ந்து வந்த பிரதமர் மல்றோனியின் அரசும் (இடையில் மூன்று மாதங்கள் ஜோன் ரேணர் அரசும் இருந்தது) தமிழ் அகதி நிலைக் கோரிக்கை விடயத்தில் மிகவும் அனுதாபத்தோடு செயற்பட்டார்கள்.

இந்த முதலாவது தமிழர் வருகை அலை பெரும்பாலும் கியூபெக் மாகாணத்தின் மொன்றியால் நகரை நோக்கியே இருந்தது. அதற்கு அடுத்த படிகளில் டொரோண்டோ, வான்கூவர், மனிடோபா நகரங்கள் இருந்தன. 

கியூபெக் மாகாணத்தில் மொழி பரிச்சயமற்ற நிலைமையிலும் பெரும்பாலான தமிழர்கள் அங்கு சென்றதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று புதிய குடிவரவாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றது ஒப்பீட்டளவில் குறைந்த வாழ்க்கைச் செலவு. 1982-1983 காலப் பகுதிகளில் அங்கு புதிதாகக் குடிவந்த தமிழர்களின் எண்ணிக்கை ஓரிரு நூறுகளில் இருந்திருக்கலாம்.

நான் 1983 ஆவணி 31ல் மொன்றியால் நகருக்குக் குடி பெயர்ந்தேன். அப்போது மொன்றியல் நகரில் சுமார் நூறு தமிழர்கள் இருந்திருக்கலாம். தொழில் நிமித்தமாக எழுபதுகளில் குடியேறியிருந்த சில தமிழர்கள் மொன்றியால் நகருக்கு வெளியே, புறோசார்ட், வெஸ்ட் ஐலன்ட் போன்ற இடங்களில் வாழ்ந்தார்கள். அவர்களில் ஒரு சில ஈழத் தமிழர்களும் பல தமிழ் நாட்டுத் தமிழர்களும் இருந்தார்கள். பொங்கல் விழாவை இவர்கள் ஒன்றிணைந்து நடத்துவார்கள். அதைத் தவிர இந்த 'முது குடித்' தமிழர்கள் சமூகமாக ஒன்றிணைந்து வாழவில்லை என்று கருத இடமுண்டு.

ஈழத் தமிழர்களின் சமூக உருமாற்றத்திற்கு ஐரோப்பாவில் இருந்து கனடாவிற்கு வந்த தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது. அவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவோ அல்லது மணமுடித்திருந்தால் குடும்பங்களை ஐரோப்பாவிலோ அல்லது ஈழத்திலோ விட்டு விட்டு வந்தவர்களாகவோ இருந்தார்கள். அவர்கள் படித்திருந்தாலும் அலுவலக வேலைகளைத தேடி ஓடாமல் எந்தவித அடி நிலை வேலைகளைச் செய்வதற்குத தயங்காதவர்களாகவும் கூட்டாக வாழ்ந்து பணத்தைச் சேமித்து தமது குடும்பங்களைப் பராமரிப்பவர்களாகவும் இருந்தார்கள். அதே வேளை தாய் நாட்டில் வீறு கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்திற்கு மிகுந்த பங்களிப்பைச் செய்பவர்களாகவும் தமிழ்க் கலாச்சாரத்தைப் பேணுபவர்களாகவும் இருந்தார்கள். 

அது தாய் நாடாகவிருந்தாலும் சரி வாழும் பிற நாடுகளாகவிருந்தாலும் ஈழத்தமிழர்களின் ஒரு பண்பு சனா சமூக நிலையங்கள், வாசிக்க சாலைகளை அமைத்து சமூக நலன்களை செய்வது. அமைப்புக்களை உருவாக்கி ஒழுங்கு படுத்தப்பட்ட சமூகமாக வாழ்வது அவர்களது வழக்கம். அத்தோடு உச்சம் பெற்றிருந்த விடுதலைப் போராட்டம் இவர்களின் தமிழ் மற்றும் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதில் முனைப்போடு செயற்பட வைத்தது. இதுவே அவர்களின் பின்னாளைய தாம்  வாழும் நாடுகளில் அரசியற் பிரவேசத்திற்கு வித்திட்டது எனச் சொல்லலாம்.

அப்போது மொன்றியால் நகரில் பல விடுதலைப் போராட்ட அமைப்புக்களின் கிளைகள் இருந்தன. அவர்கள் தம்மை ஒழுங்கு படுத்தப்பட்ட சிறிய கட்டமைப்புக்களாக உருவாக்கி இருப்பினும் ஒரு பொதுவான மக்கள் அமைப்பாக உருவெடுத்த முதல் அமைப்பு 'ஈழத் தமிழர் ஒன்றியம்' எனவே சொல்லலாம். 

1982 பிற்பகுதி அல்லது 1983 முற்பகுதியில் இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இச் சங்கத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கை வகித்தவர்களில் குறிப்பிடக் கூடியவர்கள் பொன்னுச்சாமி, முல்லைத் திலகன் மற்றும் மறைந்த நந்தகுமார் ஆவர். 

முல்லைத் திலகனின் கையெழுத்தில் கனடாவின் முதல் தமிழ்ச் சஞ்சிகையான 'தமிழ் எழில்' இச் சங்கத்தினால் வெளியிடப்பட்டது. 

ஈழத் தமிழர் ஒன்றியத்தைத் தொடர்ந்து 'தமிழர் ஒளி' என்ற அமைப்பும் தமிழ்க் கலாச்சார அமைப்பாக உருவெடுத்தது. எந்தவித அரச, சமூக உதவிப் பணங்களையும் பெறாது அங்கத்தவர்களின் பணத்தைக் கொண்டு நடத்தப்பட்ட ஈழத்தமிழர் ஒன்றியம் புதிய குடிவரவாளர்களுக்கு உதவிகளை வழங்கியதன் மூலம் மத்திய, மாகாண அரசுகளின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இதே காலத்தில் டொரோண்டோ நகரில் வாழ்ந்த சில மூத்த தமிழ்க் குடிகளும் சில புதிய குடிவரவாளரும் சேர்ந்து தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவி புதிய தமிழ்க் குடிவரவாளருக்குப் பல உதவிகளைச் செய்தும் கலாச்சார நிகழ்வுகளை நடாத்தியும் வந்தனர். 

இதே வேளை தலை நகர் ஒட்டாவாவில் அரச பணி புரிந்து வந்த கலாநிதி இலகுப்பிள்ளை போன்றோரம் புதிய குடிவரவாளருக்கு மிகுந்த உதவிகளைச் செய்து வந்தனர். ஒட்டவா நகரிலும் தமிழர் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு மத்திய அரசுடன் உறவை ஏற்படுத்தி புதிய குடிவரவாளருக்கு மட்டுமல்லாது தாய் நாட்டிலுள்ள மக்களின் விடுதலைக்காகவும் இவர்கள் செயற்பட்டனர். ஒரு பொது வேலைத் திட்டத்தின் கீழ் கனடாவின் பல நகரங்களிலும் செயற்பட்ட சங்கங்கள் இணைந்து செயற்பட்டன. மத்திய கட்சிகளான லிபரல் கட்சியும் பழைமைவாதக் கட்சியும் தமிழ்ப் புதிய குடிவரவாளருக்குச் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு இச் சங்கங்கள் பெரும் உதவிகளைச் செய்தன.

இக் கால கட்டத்தில் தமிழர்களின் வாக்குகளின் எண்ணிக்கை பெருமளவில் இல்லாவிடினும் ஈழத் தமிழர்களின் சமூகமான வளர்ச்சி சகல நிலைகளிலுமுள்ள அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்திருந்தது. தமிழர் சங்கங்களின் பிரதிநிதிகள் அப்போதைய மத்திய அரசியல்வாதிகள் சிலருடன் தொடர்புகளை ஏற்படுத்தி பல நற்பணிகளைச் செய்தனர். அப்படியான அரசியல்வாதிகளில் மல்றோனி அரசில் குடிவரவு அமைச்சராகவிருந்த கியூபெக்கின் பியர்போன்ட்-டோலார்ட் தொகுதியின் பிரதிநிதி ஜெரி வீனெர் என்பவரும் பியர் ட்ரூடோ ஆட்சியில் குடி வரவு அமைச்சராகவிருந்த லோயிட் அக்ச்வேர்தி (மனிடோபா)ஆகியோர் தமிழருக்குப் பல சகாயங்களைச் செய்தனர். பிரதியுபகாரமாக தமிழர்களின் வாக்குகள் இவர்களை மட்டுமல்ல இவர்களது கட்சிகளையும் சென்றடைந்தது. பிற்காலத்தில் தமிழர்களின் அரசியற் பிரவேசத்திற்கான முதல் அடிக்கு வித்திட்டவர்கள் இப்படியானவர்களே.

ட்ரூடோ, மல்றோனி போன்றோரின் ஆட்சிக் காலங்களில் தமிழ்க் குடி வருவோரின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்காகப் பெருகியது. அத்தோடு கூடவே தமிழ் விடுதலை இயக்கங்களின் வளர்ச்சியும் வேகம் கண்டது. பொதுவாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்திக் கொண்டிருந்த சங்கங்கள் இயக்கங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டன. ஈழ விடுதலையை மனதில் வைத்து இத்தகைய விடயங்களை மக்கள் பெரிதும் பொருட்படுத்திக் கொள்ளவில்லை.

தொண் நூறுகளின் ஆரம்பத்தில் தமிழர்களில் பல இளைய தலைமுறையினர் வன்முறைகளில் ஈடுபடத் தொடங்கினர். பல குழுக்களாகப் பிரிந்து தம்மிடையே மோதிக்கொள்ளவும் செய்தனர். அதே வேளை வெள்ளையரல்லாதோர் கனடாவிற்குள் வருவதை எதிர்க்கும் பல அரசியல் வாதிகள் தமிழர் வன்முறையையும் இதர புதிய குடிவரவினரின் வன்முறைகள் போன்றவற்றையும் உதாரணமாகக் காட்டி நமது மக்களின் குடிவரவுக்கு முட்டுக்கடை போட்டனர். கனடிய பிரதான ஊடகங்களும் இதற்குத் தூபம் போட்டன . அரசு குடிவரவுச் சட்டங்களை மேலும் இறுக்கமாக்கியது. 2001 இரட்டைக் கோபுரத்  தாக்குதலைத்  தொடர்ந்து உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்களுக்குள் கனடியாத தமிழர் தலைவிதி மட்டுமல்ல ஒட்டு மொத்த தலை எழுத்தும் மாற்றி எழுதப்பட்டது. இதனால் கனடிய தமிழர் அமைப்புக்களின்  நடவடிக்கைகள் பாதுகாப்பு தரப்பினால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டது. இறுதியில் விடுதலைப் புலிகளின் அமைப்பான உலகத்த தமிழர் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்டது.

இது வரையில் தமிழர் அமைப்புக்களோடும் சமூகங்களோடும் ஊடாடி வந்த அரசியல் வாதிகள் ஒதுங்கத் தலைப்பட்டனர். கடும் போக்கான கன்சர்வேட்டிவ் கட்சி குடிவரவினருக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்க லிபரல் கட்சி ஓரளவு நட்புறவைப் பேணி வந்தாலும் பகிரங்கமான உறவாக அது இருந்ததில்லை. 

இருப்பினும் தமிழர் அமைப்புக்கள் பல எடுத்த தொடர் முயற்சிகளின் பயனாக சில அரசியல்வாதிகள் (மூன்று நிலை அரசுகளிலிருந்தும்) தமது சுய வாக்குத் தேவைகளுக்காக தமிழர் அமைப்புக்களையும் சமூகத் தலைவர்களையும் நாடி உறவுப் பாலங்களைப் புதுப்பித்துக் கொண்டனர். தமிழரது வாக்குப் பலத்தைத் தமிழர் உணர்ந்து கொண்ட தருணமிது.

கனடாவில் தாய் நாட்டிலுள்ள பெரும்பாலான விடுதலை அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களது கிளை அமைப்புக்களை இங்கு நிறுவிக் கொண்டிருந்தாலும் விடுதலைப் புலிகளின் அமைப்பே ஓரளவுக்கு செல்வாக்குப் பெற்றதும், அங்கத்தவர் எண்ணிக்கை கொண்டதும் ஓரளவு ஒழுங்கமைக்கப்பட்டதுமாக இருந்தது. புலிகள் தாய்நாட்டில் பலமான அமைப்பாக இருந்ததும் வெளிநாடுகளில் அதிக மூல வளங்களையும் அதிகாரத்தையும் அவர்கள் தம் கைவசப்படுத்தக் காரணாமாக இருந்திருக்கலாம். 'அவங்கள் தானே நிண்டு அடிபடுகிறாங்கள்' என்ற பொது மனோனிலையும் மக்களை அவர்கள் பக்கம் சாய வைத்தது.

கனடாவில் உலகத் தமிழர் அமைப்பு தடைசெய்யப்படும் வரை அவர்களே தமிழரின் ஏகோபித்த பிரதினிதிகள் என்ற நிலைப்பாட்டை அவர்கள் வரித்துக் கொண்டிருந்தார்கள். அதனால் இங்குள்ள அரசியல்வாதிகளும் அவர்களுடன் உறவைப் பேணியிருந்தனர். உலகத் தமிழர் அமைப்பு தடைசெய்யப்பட்ட பின்னர் அரசியல்வாதிகள் உண்ணி கழர்வது போல் கழர ஆரம்பித்ததும் தமிழர் மத்தியில் விழிப்புணர்வு உருவாகியது. இதன் பலனாக தமிழர் வாக்கு வங்கிகளைப் பயன்படுத்தி ஏன் தமிழ்ப் பிரதினிதிகளை இங்குள்ள மூன்று நிலை அரசுகளுக்கும் இதர சபைகளுக்கும் அனுப்பக் கூடாது என்றொரு முனைப்பும் தமிழரிடையே எழுந்தது. இதன் வெளிப்பாடாக வின்சண்ட் வீரசுந்தரம், டாக்டர் இலகுப்பிள்ளை போன்ற பலர் உள்ளூர் தேர்தல்களில் போட்டியிட்டனர். அவர்களால் வெற்றியீட்ட முடியவில்லை எனினும் அவர்கள் திறந்து விட்ட அரசியல் மடையில் தொடர்ந்தும் பல தமிழர்கள் ஓடினார்கள். நீதன் சான், லோகன் கணபதி, யுவனிதா நாதன் போன்ற பலர் கலிவிச் சபைகளுக்கும் நகரசபைக்கும் தெரிவாகினர்.

2009 இல் தாய்னாட்டில் போராட்டம் முடிவுக்கு வந்த போது, பெருமளவில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது கனடாவில் தமிழர்கள் மேற்கொண்ட கவனஈர்ப்புப் போராட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு கனடிய அரசியல்வாதிகள் ஆதரவைத் தரவில்லை. தமிழர் தரப்பு நியாயமான கோரிக்கைகளை முன் வைத்தாலும் அவற்றை இவ்வரசியல்வாதிகள் உதாசீனம் செய்தனர் என்றே சொல்ல வேண்டும். இதில் இங்குள்ள இரண்டு பிரதான மத்திய அரசியல் கட்சிகளான கன்சர்வேட்டிவ் கட்சியும் லிபரல் கட்சியும் தமிழருக்குத் துரோகமிழைத்து விட்டதாகவே பெரும்பாலான தமிழர்கள் நம்பினர்.

ஆனால் புதிய ஜனனாயகக் கட்சியின் (மத்திய) தலைவரான ஜாக் லெய்ட்டன் மட்டும் தமிழரின் கொறிக்கைகளை மதித்து அவர்களோடு பேசி தனது ஆதரவைத் தொடர்ந்தும் கொடுத்துக் கொண்டிருந்தார். அது மட்டுமல்ல அவராகவே முன் வந்து தமிழர்கள் அதிகமாக வாழும் ஸ்காபரோ தொகுதியில் 2011 இல் நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிட ஒரு வேட்பாளரைத் தரும்படி வேண்டிக் கொண்டார். அது வரையில் லிபரல் கட்சியோ அல்லது கன்சர்வேட்டிவ் கட்சியோ தமிழர் ஒருவரை வேட்பாளர் போட்டியிடுவதற்கான எதுவித் சந்தர்ப்பத்தையும் வழங்கவில்லை. 

புதிய ஜனனாயகக் கட்சியின் தலைவர் ஜக் லெயிட்டனின் வேண்டுகோளை ஏற்று தமிழர் அமைப்பான கனடிய தமிழர் பேரவை தமிழர் சமூகத்தின் ஆதரவோடு ராதிகா சிற்சபைஈசனைத் தேர்ந்தெடுத்து ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதியில் மத்திய பாராளுமன்றத்துக்கான புதிய ஜனனாயகக் கட்சி வேட்பாளராக நிறுத்தினர். இதற்கு இதர தமிழ் அமைப்புக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கின.  ஒருங்கிணைந்த தமிழர் ஆதரவுடன் கனடிய தமிழார் சமூகம் கனடாவின் முதல் தமிழ் வம்சாவழி பாராளுமன்ற உறுப்பினரைக் கனடிய பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர். அவரின் வெற்றிக்கு இரண்டு காரணிகள் முன்னின்றன. ஒன்று-ஜாக் லெய்ட்ட்ன் என்ற மாபெரும் மனிதர். இரண்டு- 2009க்குப் பின்னான தமிழரின் உணர்வு பூர்வமான முனைப்பு. 

ராதிகா சிற்சபையீசனின் கனடிய பாராளுமன்றத் தெரிவு இரண்டு முக்கிய படிப்பினைகளைத் தந்தது. ஒன்று- இதர கனடிய பெரும் சமூக கட்சிகளித் தமிழரைப் பொருட்படுத்த வைத்தமை. இரண்டு - தமிழ் வாக்காளர்கள் எந்த வகையிலும் இளிச்ச வாயர்கள் அல்ல என்பது. 

ராத்திகா சிற்சபைஈசனின் தேர்தல் விடயத்தில் மிக முக்கிய பங்காய் வகித்தவர் என்ற வகையில் இக் கருத்துக்களுக்கு ஓரளவு அங்கிகாரம் இருக்குமென்ற நம்பிக்கையுடன் நான் இக் கருத்துக்களை முன் வைக்கிறேன். 

ராதிகா சிற்சபைஈசனின் தேர்தலில் நான் ஏற்கெனவே கூறியது போல ஜாக் லேய்ட்டன் அலை மட்டுமே அவரது வெற்றிக்குகே காரணம் என்று நம்புபவர் சிலருண்டு. தமிழ் மக்களின் ஒற்றுமையான உணர்வு பூர்வமான முயற்சியின் வெளிப்பாடு தான் வெற்றிக்கு காரணம் என்பவர் சிலர். தன்னுடைய திறமையும் ஆளுமையும் தான் காரணம் என்று நம்பும் ராதிகாவும் ஒரு பக்கம். என்னைப் பொறுத்தவரை முன்னைய இரண்டுடன் மூன்றாவதற்கும் ஓரளவு பங்கை நாம் வழங்கவேண்டும். 
















சனி, 31 மார்ச், 2018

இளசுவின் மாறாட்டம்



இளசு எனப்படும் இளையராஜா கனடாவுக்கு வருகிறார், மன்னிக்க வேண்டும் கொண்டுவரப்படுகிறார். சில இசை ரசிகர்களுக்குச் சந்தோசம் தான். அந்த சிலரை விட மீதிப் பேருக்கு பயங்கர கடுப்பு.

இளசைப்பற்றி பல வருடங்களாகவே எனக்குள் அபிப்பிராய மோதல்கள் நிகழ்ந்து வருவது உண்மை. எண்பதுகளின் ஆரம்பத்தில் இவர் பங்குபற்றிய தமிழ்நாட்டு நிகழ்வொன்றில் (அப்போது இவரை வெளிநாட்டுக்கு கொண்டுவருமளவுக்கு தமிழ் வியாபாரிகள் வெளிநாடுகளில் இருக்கவில்லை) யாரோ மண்டபத்தின் பின்வரிசைகளிலிருந்து கூச்சல் போட்டதைச் சகிக்க முடியாமல் 'யாரடா அங்க சிலோன் காரங்களா  குழப்பம் செய்யிறாங்க? அவங்களைப்  பிடிச்சு வெளியே தள்ளுங்கடா' என்று கர்ச்சித்ததாகக்  கேள்விப்  பட்டேன். அச் செய்தி பொய்யாகவும் இருக்கலாம். இருப்பினும் மனம் அருவருத்தது.

தொடர்ந்து வந்த காலங்களில் அவரது இசையின் ஆக்கிரமிப்பால் நினைவில் உலர்ந்து போய்க்கொண்டிருந்த அவர் பற்றிய குறைபாடுகள் புறந்தள்ளப்படடன. சமீப காலங்களில் அவரது கர்ச்சிப்புகளையும் வித்துவச் செருக்கு என்ற அம்சத்துக்குள் அடக்கிவிட்டுப் போய்க்கொண்டே இருந்தேன். ஆனால் சென்ற தடவை அவரைக் கனடாவுக்குக் கொண்டு வந்தபோது அவர் நடந்து கொண்ட விதம் உண்மையில் என்னை இந்த 'கடுப்புக்' கோஷ்டியிடம் தள்ளி விட்டது.

இளசு 'சிலோன்' காரங்களை மதிப்பதில்லை. இளசு மட்டுமல்ல பல தமிழ் நாட்டு சினிமாக் காரன்கள் சிலோன் காரங்களை மதிப்பதில்லை. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. அது பற்றி இன்னொரு தடவை பார்ப்போம்.

இளசுவை சென்ற தடவை கனடாவுக்குக்  கொண்டு வந்தபோது அவர் நடந்து கொண்ட விதம் கனடாவுக்கு உரியதல்ல. ஒன்று அவருக்கு நாகரிகம் பண்பாடு தெரியாமல் இருந்திருக்கலாம். அல்லது 'இவங்கள் சிலோன் காரங்கள் தானே, இவங்கெல்லாம் யாரு எனக்கு?' என்ற மமதையின் காரணமாகவிருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவர் பல இலங்கைத் தமிழரைக் கோபப் படுத்தியிருக்கிறார்.

இந்த தடவை கொண்டுவரப்படும் போது எப்படி நடந்து கொள்வாரோ தெரியாது. ஆனால் பல இலங்கைத் தமிழர்கள் அவரைப் பார்க்கத் துடிப்பார்கள் என்று அவரோ கொண்டு வருபவர்கள்  எதிர்பார்க்க மாடடார்கள் என்று நினைக்கிறேன். (இப்போதே டிக்கட்டுகள் அரை விலைக்குக் கூவப்படுவதாகக்  கேள்வி).

பாவம் இந்த இறக்குமதி வியாபாரிகள். இளசுவைக் கொண்டுவந்து, சென்ற வாரம் ஊடக பவனி செய்தார்கள். சில 'சிமார்ட் போன்' ஊடகக்காரர் சத்தமின்றிக் காட்சிப்படுத்தியதில் சிலரின் வாயசைப்புகள் நம்பிக்கையை அளிக்கவில்லை. இறுக்கமாக இருந்த இளசுவின் முகம் இளகத் தொடங்கியபோது  பல 'சிலோன் காரங்கள்' அவருக்குப் பாத பூசை செய்து கொண்டிருந்தார்கள். பணமும் பாத பூசையும் கிடைத்துவிடடால் அவருக்குப் போதும் தானே. 'முடடாள்கள்' என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டு அவர் அடுத்த மெட்டை  அவர் முணு முணுத்திருக்கலாம்.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த  கதை போல இளசு செய்த இன்னுமொரு விடயம் இறக்குமதிக்  காரருக்கு வயித்தில்  புளியைக் கரைத்திருக்கலாம். ஈஸ்டரும் அதுவுமாக இயேசு நாதர் உயிர்த்தெழவில்லை என்பதை விஞ்ஞான பூர்வமாக  'யூ டியூப்' மூலம் தான் நிறுவி விட்டதாகப் பேசியிருக்கிறார் இளசு. தான் வழிபடும் ரமண மகரிஷி மட்டுமே  உண்மையில்  உயிர்த்தெழுந்தவர் என்பதை  'யூ டியூப்' எதுவுமில்லாமலேயே நிறுவி விடுகிறார். அவரது இசையை விரும்பும் பக்தர்களில் கிறிஸ்தவர்களும் இருக்கலாம் என்பதையோ அவர்களது மனங்களைப்  புண்படுத்தக் கூடாது என்பதையோ, அல்லது தனது இறக்குமதி வியாபாரிகள் நட்டமடையக் கூடாது என்றோ இளசு யோசிக்கவில்லை.

இளசுவின் இந்துத்துவம் பற்றி எனக்கு விருப்பு வெறுப்பு எதுவுமில்லை. அவரது இசையில் இன்னும் எனக்கு வெறுப்பு எதுவும் ஏற்படவுமில்லை. அவரது மேதாவித்தனம் மீதும் எனக்கு அக்கறையுமில்லை. அவரைக் கடுப்பேத்துவதற்காக மட்டும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

தயவு செய்து humbleness என்றால் என்னவென்று சில  'யூ டியூப்' வீடியோக்களைப்  பாருங்கள்.

வெளிநாடுகளில் வதியும் பாத பூசைதாரிகளுக்கு: நிமிர்ந்து நிற்பது எப்படி என்று நமது பொது எதிரி மகிந்த ராஜபக்சவிடம் கற்றுக் கொள்ளுங்கள்.








ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018



எனது இனிய நண்பர், நாகலிங்கம் இராமலிங்கம் (அப்பன் அண்ணை) நேற்று மாரடைப்பினால் காலமானார். சுமார் 30 வருடங்கள் எமது நட்பு. குழந்தையின் சுபாவம். எது பற்றியும் கவலை இல்லாதவர். சீட்டு, சதுரங்கம் ஆடுவதில் மகா பிரியர். பல வார இறுதி மாலைகளில் விடியும் வரை சீட்டு விளையாடிவிட்டு 40 கி.மீ . வீடேகும் ஒரு இளைஞராகவே அவர் இறுதிவரை வாழ்ந்தார்.

அடுத்த வருடம் எண்பது வயதை எட்டியிருப்பார். தினமும் யோகாசனம் செய்பவர். குறிப்பிடும் வகையில் எந்தவொரு வயதுக்குரிய வியாதிகளும் அவரது உடலை அண்டியிருக்கவில்லை.

குடும்பத்தாரோடும், நண்பர்களோடும் மிக நெருக்கமாகவே இருப்பார். சமூக ஈடுபாடுகள், தாய் நாட்டின் மீதான அக்கறை என்று தனது வாழ்நாள் முழுவதையும் பிரயோசனமாகவே கழித்தவர்.

அவரில்லாத வார விடுமுறைகள் இனிமேல் சபிக்கப்பட்டவையே.

அப்பன் அண்ணை, பிரியா விடை உங்களுக்கு!