வியாழன், 5 ஜனவரி, 2017


முக்கோண சூத்திரம்


காரியங்கள் காரணமில்லாமல் நடைபெறுவதில்லை என்பதில் மிகவும் உறுதியான நம்பிக்கை எனக்குண்டு. வரலாற்றுத் தடயங்கள் இதற்கு  நிறைய ஆதாரங்களைத் தந்துள்ளன.

அந்த நம்பிக்கையில் கடந்து போன ஆண்டும்,  வந்திருக்கும் புத்தாண்டும் திடடம், ஒழுங்கு தவறாமல் நடந்தது, நடக்கும் என்பது என் யூகிப்பு.

உலக அரசியல், பொருளாதாரம், சூழல் இந்த இணைக்கப்படட மூன்று புள்ளிகளிடையேயும் தான் எமது வாழ்க்கை. இந்த முக்கோணத்தில் ஒரு மூலை  பெரிதாக வேண்டுமானால் மீதி இரண்டும் சிறிதாகுவது வழமை. மொத்தம் 180 பாகைகள் தான்  என்கிறது கணித சூத்திரம்.

இந்தப் புள்ளிகளை நகர்த்துவதில் காரணிகளாக இருந்த  உலக மகா புள்ளிகள் சிலர் - ஸ்டாலின், ஹிட்லர், சேர்ச்சில், ட்ருமன், பூட்டின் வரிசையில் இடம்பெறப்போகும் துரும்பர் வரையிலான எனது அவதானிப்பு இது.

உலக வரலாற்றின் உந்து புள்ளிகளாக மேலும் பலர் இருந்தாலும் மேற்சொன்னவர்கள் ஒரு வகையில் திசை திருப்பிகளாக இருந்தனர் என்பது எனது அவதானம்.

லெனினின் ரஷ்யப் படைகள் பலத்த இழப்பைத் தொடர்ந்தும் ஹிட்லரை முறியடித்ததற்கு ஸ்டாலின்  தான் காரணம். நேசப் படைகள் நோர்மண்டியில் தாமதமாகவே இறங்கின. யாள்டா ஒப்பந்தத்தின் படி  போரின் முடிவில் ரஸ்யா, பிரித்தானியா போன்ற  நாடுகள் ஐரோப்பாவில் பல நாடுகளைத் தம் வசமாக்கின.

சேர்ச்சிலுக்கு, ஹிட்லரை ஒழிப்பதை விட ஆசிய, ஆபிரிக்க, மத்திய கிழக்கில் தனது சாம்ராஜ்யத்தையும் வருவாயையும் தக்க வைப்பதில் தான் குறி இருந்தது. தனது வர்த்தகக் கப்பல் பாதைகள் யப்பானியரால் முடக்கப்படாது என்பதற்காகவே யப்பான் மீது தாக்குதலை மேற்கொள்ளும்படி ருஸ்வெல்டைத் தூண்டினார் என்கிறார்கள்.

மிக மோசமான குண்டு வீச்சுக்களை யப்பானிய நகரங்கள் மீது அமெரிக்கா நிகழ்த்தி கொடூரமான மனிதப் படுகொலைகளை நிகழ்த்தியிருந்தாலும் யப்பானியரின் சாமுராய் படைகள் மற்றும் கமிகாசி தற்கொலைப் படைகளோடு மக்களும் சரணடைவிற்கு மறுப்புத் தெரிவித்து வீர மரணத்தைத்  தழுவக் காத்திருந்தார்கள். நிபந்தனையற்ற சரணடைவு சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோவின் பல நூற்றாண்டு பரம்பரை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதற்காக சக்கரவர்த்தியின் விருப்பத்திற்கிணங்கவே சரணடைவு உடன்பாடாகியது.

யப்பானின் சரணடைவை நிபந்தனையோடு ஏற்றுக்கொள்வதற்கு ரூஸ்வெல்ட் இணங்கியிருந்த போது துரதிர்ஷ்ட வசமாக அவர் மரணிக்கவே ட்ரூமன் அதிபராகிறார். வரலாற்றில் இது ஒரு முக்கிய திருப்பப் புள்ளி.

ட்ரூமன் காலத்தில் தான் அணுக்குண்டு பரீட்சிக்கப்பட்டது. அதில் எதிர்பார்த்ததை விடவும் பன்மடங்கு அழிவு சக்தி இருக்கப்போகிறது என்பதை அறிந்தவுடன் அதில் பணியாற்றிய பெரும்பான்மை விஞ்ஞானிகள் இது உலக அழிவுக்கு  வழிவகுக்கப் போகிறது என்றும் இது திடடத்தைக் கைவிடும் படியும் கூறி கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை தலைமை விஞ்ஞானி ஓப்பன்ஹைமர் மூலம் ட்ரூமனுக்கு அனுப்பினார்கள். ஓப்பன்ஹைமர் அதை ட்ருமனிடம் கொடுக்காமல் குண்டுகளைத் தயாரிக்க உத்தரவிடடார். இது இன்னுமொரு திசை திருப்பி.

ட்ருமன்  ஒரு 'ஆண்' தன்மை குறைந்தவரென அவரது தந்தையாராலே இகழப்பட்டவர். ஒரு உலக வல்லரசுக்கு அதிபராகத்  தெரியப்பட்டது அவரது சுய மேலாண்மைக்கு வழி வகுத்தது. யாள்ரா ஒப்பந்தத்தின் பிரகாரம் ரஸ்யா யப்பானைத் தாக்குவதற்குத் தயாராகவிருந்தபோது அதற்கு முன்னதாகவே ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டுகளைப்  போடக்  கட்டளையிடுகிறார். ஜெர்மனியை வென்று 'உலகைக் காப்பாற்றிய ஸ்டாலின் மீது அளவிலாக் காதல் கொண்டிருந்த' அமெரிக்க மக்களின் முன் தனது வீரப்பிரதாபத்தைக் காட்ட ட்ருமன் எடுத்த நடவடிக்கை இது என்று சில வரலாற்றாளர் கருதுகின்றனர்.

இந்த ஸ்டாலின், ட்ருமன், சேர்ச்சில் என்ற மூன்று புள்ளிகளின் காரியங்களும்  என்ன காரணங்களுக்காக நடைபெற்றன என்பதைவிட அதன் விளைவுகள் என்ன என்பதுவே இங்கு முக்கியம். ஜெர்மனி, யப்பான், இத்தாலி போன்ற நாடுகள் போரில் வெற்றிபெற்றிருந்தால் இன்றய உலகம் வித்தியாசமாகவிருந்திருக்கும்.

இந்தக் கோணத்தில்தான் துரும்பரின் வரவையும் நான் பார்க்கிறேன். இது ஒரு திருத்த நிகழ்வு (correction process).

ஒபாமாவைப் பொறுத்தவரையில் ஒரு கறுப்பர் அமெரிக்க அதிபராக வந்தார் என்பதும் துரும்பர் வரவுக்கு வழிகோலியவர் என்பதும் மட்டுமே அவரது சாதனைகள். அவர் ஒரு அடிமையின் பரம்பரை என்றிருந்தாலும் கூட ஓரளவுக்குப் பெருமை சேர்த்திருக்கும்.

சிரியா, பாலஸ்தீனம், இஸ்லாமிய பயங்கரவாதம், சீனாவின் எழுச்சி என்று எதிலும் அவரால் வெற்றிகாண  முடியவில்லை. அமெரிக்க பொருளாதாரம் சிறிது முன்னேற்றம் கண்டிருந்தாலும் மக்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. இறுதியில் ஒரு மனமுடைந்த தோற்றுப்போன அதிபராகவே அவர் விடைபெறுகிறார்.

இதற்கு ஒபாமாவின் இயலாமை காரணமல்ல. அதிபராகிய பின்னர்தான் அவர் அடிமையானார். விலங்குகள் போடப்படடன. சொல்வதை மட்டுமே செய்தார்.

உலக அரங்கில் அவரது 'நிறம்' துவேஷிக்கப்பட்டது. புட்டின் அவரைக் கணக்கிலே எடுக்கவில்லை. சவூதி அரேபியாவில் அவமானப்படடார். இஸ்ரேலினால் அவமதிக்கப்படடார். பிலிப்பைன்ஸ் அதிபர் கூட அவரை இகழுமளவிற்கு அவரது நிலைமை இருக்கிறது. புட்டின் - துரும்பர் உறவு கூட இந்த துவேஷ அச்சில் தான் நிகழ்கிறது. ஒரு வகையில் ஒரு கருமை நிறத்தவரால் உலக ஒழுங்கை நிர்வகிக்க முடியாது என்ற உண்மையே ஒபாமா விட்டுச் செல்லும் பாடம்.

உலகமெங்கும் துவேஷிகளின் மீழெழுச்சி அதிவேகத்துடன் முன்னெடுக்கப் படுகிறது. துரும்பரின் வரவு அதன் ஒரு அடையாளம். பிரித்தானியாவின் வெளியேற்றம் ஒரு சலனம். புட்டினின் தினவு அந்த இழந்த பெருமையை மீட்டெடுக்கும் முயற்சிக்கான முழக்கம்.

இதுவெல்லாம் உலகம் இழந்த சமநிலையைச் சீர் செய்ய எடுக்கும் தன்னியக்க திருத்த முயற்சிகள். இவை பல தடவைகள் நிறைவேறியிருக்கின்றன. எகிப்திய, ரோம , ஒஸ்ட்றோ - ஹங்கேரிய, மொங்கோலிய, சோழ, பிரித்தானிய சாம்ராஜ்யங்கள் எல்லாம் எழுந்ததற்கும், அழிக்கப்பட்டதற்கும்   காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆபிரகாமின் குழந்தைகளின் அட்டகாசம் கை மீறிப் போவது கண்டுகொள்ளப்படவில்லை என்று  எண்ணத்  தேவையில்லை.  துவேஷிகளின் மீழெழுச்சிக்கு இதுவும் ஒரு  காரணமாக இருக்கலாம். யார் கண்டது?. இந்த துவேஷிகளின் காலம் முடிவுறும்போது ஒரு முதுகெலும்புள்ள வெள்ளையில்லாத ஒரு நாடு உலகை ஆளலாம். அதுவும் நிச்சயமானதொரு துவேஷத்தில் எழுப்பப்பட்ட சாம்ராஜ்யமாகவும்  இருக்கலாம்.

எல்லா வினைகளும் சமமானதும் எதிரானதுமான விளைவுகளைத் (Every action has equal and opposite reaction) தோற்றுவிக்கும் என்ற விதி எப்போதுமே அமுலில் இருக்கிறது. விளைவுகளை அவதானித்து வினைகளைப்  புரிவதே சிறந்த நடைமுறை.  நீண்ட வரலாற்றில்  முன் வினைகளும் விளைவுகளும் விழிப்புலத்திலிருந்து தப்பியது என்பதற்காக அவை எங்கேயும் போய்விட்டதாக அர்த்தமில்லை.

காரணமில்லாமல் அவர் 'அவதரிக்கவில்லை'. முக்கோண சூத்திரம் பொய்க்காது.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஜனவரி 2017 ஈ குருவியில் பிரசுரமானது. அதில் ஸ்டாலினுக்குப் பதிலாக லெனின் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மன்னிக்கவும். 














கருத்துகள் இல்லை: