சனி, 21 ஜூலை, 2007

Understanding Andy அல்லது ஆனந்தனைப் புரிந்துகொள்ளல்

Hi எனது பெயர் Andy. அப்படித்தான் எனக்கு என்னை அழைக்க விருப்பம். ஆனால் என் அம்மா என்னை ஆனந்தன் என்றே அழைக்க விரும்புகின்றாள். போகட்டும். அவளது ஆசையை நான் நிறைவேற்றியே ஆகவேண்டும். பாடசாலையில் எனது peers and teachers என்னை Andy என்றே அழைப்பர்.

இவ்வளவும் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து எழுதியதை வாசிப்பதற்கே உங்களுக்குச் சிரமமாயிருந்திருக்கும் இல்லையா? அப்படியானால் தினமும் பாலசாலையிலும் வீட்டிலும் என்று எத்தனை தடவைகள் நான் கனடியனாகவும் தமிழனாகவும் வாழக் கஷ்டப்பட்டிருப்பேன்?

போகட்டும். அவள் எனது தாய். அவளுக்காக நான் கஷ்டப்படுவதில் பாவமேதுமில்லை. இதுவெல்லாம் என் துன்பங்களில் ஒரு அற்ப பங்கேதான்.

எனக்கு 16 வயது. கனடாவில்தான் பிறந்தேன். எனக்கு ஒரு தாயும் (சிரிக்காதீர்கள்) ஒரு அக்காவும் இரண்டு மாமன்காரரும் இருக்கிறார்கள். எனக்கு பதின்மூன்று வயதாகவிருக்கும்போதே என் தந்தை அம்மாவை விட்டு விட்டு வேலையில் சந்தித்த யாரோ பெண்ணுடன் ஓடிவிட்டானாம் என்று அம்மா சொன்னாள். அப்பா ஏன் ஓடினார் என்று காரணம் தெரியும்வரை 'ஓடினான்' என்று அழைப்பதாகவே நான் தீர்மானித்திருக்கிறேன். தயவுசெய்து குறை நினைக்காதீர்கள்.

அம்மா சுமாரான அழகுடையவள். ஆனால் அவளுக்குக் காது கேட்பது கொஞ்சம் குறைவுதான். அப்பா ஓடிய பிறகு வீட்டில் சண்டை பிடிப்பதற்கு எவருமில்லை. பக்கத்து அப்பாட்மெண்டிலிருந்து சுவரில் தட்டுவது இப்போது இல்லை. உரத்த குரலில் பேசிய அப்பன் போனதிலிருந்து வீடு வெறிச்சோடிப் போனதை அம்மாவே ஒத்துக் கொண்டாள்.

அக்காவுக்கு 20 வயது. ஒரு காலத்தில் நன்றாகப் படித்தவள். University of Toronto வில் இரண்டாவது வருடம் படித்துக்கொண்டிருந்தபோதுதான் அப்பா ஓடினான். அதன் பிறகு அவள் படிப்பில் கவனம் செலுத்தாது விட்டுவிட்டாள். இப்பொழுது College க்குப் போகிறாள். முன்பு போலெல்லாம் அவளுக்குச் சிநேகிதிகள் இல்லை. மேக்கப் போடுவதில்லை. தலை சீராக வாருவதில்லை. படிப்பு எப்படிப் போகிறது என்று எப்போதாவது நான் கேட்டால்தானுண்டு. அப்போதும் ஒரு shrug ஓடு அப்பாற் போய்விடுவாள். அவளுடைய மனதில் என்ன இருக்கிறது என்றறிவதற்கு அம்மாவிற்கு நேரமுமில்லை அறிவும் போதாது.

அம்மா இரண்டு வேலை செய்கிறாள். காலையில் ஒரு Book Binding கம்பனியில். பின்னேரம் ஒரு தமிழ்ச் சாப்பாடுக் கடை Kitchen இல். அரச உதவிப்பணம் பெற்றுக்கொண்டு பேசாமல் தானுண்டு தன் சோலியுண்டு என்று அவள் வாழ்ந்திருக்கலாம். பெரீய ego வைத் தலையில் வைத்துக்கொண்டு திரிகிறாள். தான் வேலை செய்து பிள்ளைகளைப் படிப்பித்தேன் என்று ஊருலகம் சொல்ல வேண்டும் என்பது அவளது ஆசை போலும்.

இரவு பதினொரு மணிக்குப்பின் அவள் கொண்டுவரும் சாப்பாடுதான் எங்களதும். ஆனால் நாங்கள் எத்தனை மணிக்குச் சாப்பிடுவதென்பது அவளது முதலாளியின் கைகளிலேதானிருக்கிறது. அவர் தனது வாகனத்தில் கொண்டுவந்து விட்டால்தான் அம்மா வீட்டுக்கு வரலாம். அம்மாவின் காது கேட்காத பிரச்சினையால் அவளால் வாகனம் ஓட்ட முடியாது.

அப்பன் ஓடியதிலிருந்து எனக்கும் வாழ்க்கையில் சலிப்புத்தட்டி விட்டது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்னதான் brave face என்று மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தாலும் உள்ளே வெறுமை சதா அரித்துத் தின்றுகொண்டிருக்கிறது. அப்பனைப் பற்றி அம்மா எதுவும் பேசுவதில்லையாதலாலும் அவளோடு என்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது சரியில்லை என்பதாலும் நான் அப்பனைப் பற்றிப் பேசுவதை வெகுவாகக் குறைத்து விட்டேன். ஆனாலும் அவனைப் பற்றியும் அவன் ஏன் எங்களை அநாதரவாக விட்டு ஓடினான் என்பது பற்றியும் எப்போவாவது ஒரு நாள் அறிந்தேயாக வேண்டும் என்று என் மனம் விழைகிறது.

அப்பன் குரைப்பான், சத்தமிடுவான் ஆனால் ஒருபோதும் அம்மாவை அடித்ததில்லை. வீட்டுக்குத் தேவையான அத்தனையும் கொண்டுவந்து போடுவான். He was a great provider, I must admit.

அம்மாவும் அவனை நேசித்துத்தானிருக்க வேண்டும். இப்போதும் இடைக்கிடையே வீட்டில் இருக்கக் கிடைக்கும் போதெல்லாம் அவள் சட்டைத் தலைப்பைக் கண்ணுக்குள் விட்டுக்கொண்டிருக்கிறாளென்றால் அது கண்ணீரைத் துடைக்கவல்லாது வேறெதற்கு? எனக்கும் அக்காவுக்கும் முன்னால் அப்பனைத் திட்டித் தீர்ப்பாள். அதில் மட்டும் அவள் நன்றாக நடிப்பாள்.

அப்பனுக்கும் அம்மாவுக்குமிடையில் சண்டை முற்றியிருந்தபோது இரண்டு தடவைகள் மாமன்மார் என் வீட்டிற்கு வந்தார்கள். ஒரு கடுமையான குளிர் இரவில் அப்பனை அடித்துத் துரத்தி வெளியேவிட்டுக் கதவைப் பூட்டினார்கள். இன்னுமொரு நாளில் அப்பன் தனது உடுப்புகளையும் பெறுமதிகளையும் எடுத்துக்கொண்டு இறுதியாக விடைபெறும்போது அம்மா அவன் பின்னால் ஓடிவிடாது 'காப்பற்றுவதற்காக' அவளைப் படுக்கையறையுள்ளே வைத்துப் பூட்டினார்கள். அதன் பிறகு அவர்கள் எங்கள் வீட்டுப் பக்கம் வந்ததேயில்லை.

அப்பன் இறுதியாக விடைபெற்ற இரவில் அம்மாவின் கூப்பிய கரங்களும் கெஞ்சிய கண்களும் என்னால் இன்னும் மறக்க முடியாதவை. காரணம் அவள் அப்படிக் கெஞ்சியது தனது சகோதரர்களிடம்தான். அன்று அவர்கள் கொஞ்சமேனும் இரக்கம் காட்டியிருந்தால் இன்று எனது அப்பன் எங்களோடு இருந்ததிருக்கலாம் என்று பலதடவைகள் நான் நினைத்ததுண்டு. அதையேதான் அம்மா தினம் தினம் நினைத்துக் கொள்கிறாளோ என்னவோ.

எங்களை விட்டுப்போய் சில நாட்களில் அப்பனை மால்களில் சில தடவைகள் சந்தித்திருக்கிறேன். எனது பாடசாலைக்கு அருகில் இருக்கும் அந்த மாலுக்கு அவன் வருவதே என்னைப் பார்க்கத்தான் என்று அவன் ஒரு தடவை சொன்னான். அப்போதெல்லாம் அவன் அன்போடு என்னைக் கட்டிப் பிடித்து சாப்பிட வரும்படி அழைப்பான். ஏதாவது வாங்கித் தருகிறேன் என்று அடம்பிடிப்பான். இன்றுவரை அவனிடம் எதுவுமே வாங்கியதில்லை. இப்போ சில வருடங்களாக அவனை நான் கண்டதில்லை. எனது பதினெட்டாவது பிறந்தநாளுக்கு அவனை அழைக்கவேண்டுமென்று அம்மாவைக் கேட்டபோது 'உன் மாமன்மார் கொலை செய்துவிடுவார்கள்' என்று அவள் சொன்னதோடு அப்பனோடு உறவு கொண்டாடும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன்.

எங்களை விட்டுப் பிரிந்து சில வருடங்களுக்கு அப்பன் வேறு திருமணம் புரிந்து கொள்ளவேயில்லை என்று அம்மா சொன்னாள். பின்னர் அவன் மிசிசாகாவுக்குப் போய்விட்டான். சுமார் 50 கி.மீ. தொலைவுதான். இருப்பினும் இங்கிருக்கும்போதெ அவன் எங்களை மறப்பதற்குத் தீர்மானித்து விட்டான் போலிருக்கிறது. தூரமும் நேரமும் பாசத்தைப் பிரிக்குமென்பார்கள். I had no choice.

எனக்கும் இப்போது படிப்பில் அவ்வளவு அக்கறையில்லை. அக்காவின் மனதை இப்போது மிகவும் அதிகமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. வகுப்பில் ஆசிரியர் பல தடவைகள் முயன்றும் நான் எனது குடும்பப் பிரச்சினைகளப் பற்றி அவரிடம் எதையுமே கூறியதில்லை. அப்படிச் சொல்லியிருப்பின் இப்போது எங்கோ ஒரு Foster parent வீட்டில் ஒரு வெள்ளைக்கார அப்பா அம்மாவுக்கு பதிநான்காவது பிள்ளையாக Anti-depressant குளிசைகளோடு மால்களில் திரிந்திருப்பேன். அல்லது ஒரு medium security prison இல் ஏனைய கைதிகளோடு கஞ்சா குடித்துக் காலம் கழித்திருப்பேன். நான் ஆனந்தனாக வளர்க்கப்பட்டதன் விளைவே இன்னும் நான் நானாக இருப்பது என்று நினைத்து மகிழ்வதுண்டு.

ஒருநாள் நானும் அக்காவும் சில நிமிடங்கள் பேசக் கிடைத்தபோது இருவரும் ஏகோபித்து எடுத்த முடிவு - நாங்கள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்வதில்லை - என்பதே. அவள் ஆசையாக நேசித்திருந்த பிருந்தனிடம் தன் முடிவைச் சொன்ன அன்று அவள் sleeping tablets எடுக்கவிருந்தாள். எப்படியோ இன்று அவள் உயிர் தப்பியிருந்தாலும் ஒரு நடைப்பிணமாகவே இருக்கின்றாள்.

எங்கள் குடும்பம் சிதைந்து போனதற்கு யாரைக் குற்றம் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட எல்லோருமே தங்கள் சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் முடிவுகளைத் தீர்மானித்தார்களென்றே எனக்குப் படுகிறது. என்னுடைய அல்லது எனது அக்காவுடைய நலன்கள் எதையும் எவரும் கருத்திற் கொண்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் தத்தமது ego வைத் திருப்திப் படுத்தும் வகையிற்றான் நடந்துகொண்டுள்ளார்கள்.

நாங்கள் நன்றாகப் படிக்க வேண்டுமென்று அம்மா இரண்டு வேலை செய்தாள். இருந்தும் என்ன பிரயோசனம்? அம்மாவே வீட்டிலிருந்து நாங்கள் என்ன படிக்கிறோம் என்றுகூடக் கேடடதில்லை. அம்மாவுக்குச் சரியானதென்பதை எப்படி மாமன்மார் தீர்மானிக்கலாம்?.

எல்லோருமே தாங்கள் ம்ற்றவர்களுக்கு நன்மை செய்வதாகவே நினைத்துக் காரியங்களைச் செய்கின்றார்கள். ஆனால் அந்த 'மற்றவர்களிடம்' என்ன பெறுபேறுகள் விளைந்தன என்பது பற்றி எதுவித அக்கறையிமில்லாது தங்கள் ego திருப்தியடைந்தால் மட்டும் போதுமானது என்றளவில் நின்றுவிடுகிறார்கள். இது தான் எமது பிரச்சினை.

என் மனதில் நெருடல்கள் ஆயிரம் இருக்கின்றன. யாருடனாவது பேசினால் கொஞ்சம் ஆறுதலாகவிருக்கும். I am sure என்னைப்போல் தான் என் அக்காவும் துடித்துக்கொண்டிருப்பாள் என்று நினைக்கிறேன். என் நண்பர்களும் என்னைப் போலவே ஆயிரம் பிரச்சினைகளைச் சுமந்துகொண்டு திரிகின்றார்கள். Everyone needs a shoulder to cry, I guess.

சென்ற வாரம் எனது பாடசாலையில் இரண்டு மாணவர்கள் என்னை மிரட்டினார்கள். Lunch money யைத் தரும்படி மிரட்டினார்கள். என்னிடம் lunch money இல்லை, வேண்டுமானால் lunch ஐத் தருகிறேன் என்றேன். இரண்டு பேரும் சேர்ந்து என்னை அடித்தார்கள். சக மாணவர்கள் பார்த்துச் சிரித்தார்கள். ஏனென்றால் அடித்தவர்கள் ஏதோ ஒரு gang ஐச் சேர்ந்தவர்கள். நான் இச் சம்பவத்தை பிறின்சிபாலிடம் முறையிடவில்லை ஏனென்றால் அடித்தவர்களும் தமிழர்கள்தான்.

இப்போது நான் இன்னுமொரு gang member. இனி என்னை ஒருவரும் தொட முடியாது. எனக்குப் பாதுகாப்பு வழங்க ஒரு குழு இருக்கிறது. ஆனால் நானும் என் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும்.

Ryan என்ற றட்னாகரன் எனது gang இல் இருக்கிறான். மிகவும் நல்ல பையன். ஆனால் போதை வஸ்து எடுப்பான். 'நீ எப்போது இதைப் பழகினாய்' என்று கேட்டதற்கு அவன் சொன்னான் 'எல்லாம் ஒரு பெண்ணுக்காக' என்று. அவனது காதலி ஒருநாள் அவனிடம் சொன்னாளாம் 'Thats it. We have to part our ways. You are not tough enough for me. Look at the guy who is leaning on the red Honda Civic. He is my my new guy. Bye...'

இதுதான் இன்றய உலகம். This is real. I don't want to bury my head in the sand!. Ryan இப்போது ஒரு tough guy. He goes to prison every weekend for three months. Assault with weapon, possession of narcotics with the intent of trafficking and obstruction of justice. எல்லாமே பொய் வழக்கு. போலீஸ் சோடித்த வழக்கு. றயான் எல்லாக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டுவிட்டான். காரணம் அவனைப் பிணை எடுக்கக்கூட ஒருவரும் முன்வரவில்லை. He also comes from a single parent family. I won't blame him.

எனது நிலைமை எப்படியாகும் என்று சொல்வதற்கில்லை. நான் வீடு போகும்போது வீட்டில் விளக்கு எரியாது. வெறுமையாக இருக்கும். சாப்பிட எதுவும் இருக்காது. கையில் காசும் இருக்காது. வீட்டுக்கு வருவதற்கே மனமிருக்காது. மற்ற நண்பர்களைப் போல சட்டத்துக்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டுப் பணம் சம்பாதிக்கல்லாம். மனம் ஒத்துழைக்குதில்லை. So far I have resisted successfully. The only other option is to take my life. Is this life worth living?

I hope you understand me. Please don't feel sorry for me. There are so many kids out there crying for help. There could be a kid out there pricking needle in a back alley. There could be one waiting to jump off a highrise building. Please save them. For god sake, they have many more years to live, just the way you do. They are your children.

மன்னிக்க வேண்டும். I got carried away.

நான் இதுவரை சொன்னது ஆனந்தனைப் பற்றி மட்டுமே. அறிகுறிகளைச் சொன்னேன். ஆதங்கங்களைச் சொன்னேன். நாங்கள் நல்லவர்களாக உருவாகுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

I wouldn't have been in this state had my father not abdicated his responsibility.

இற்தியாக, அப்பாவுக்கு! 'அப்பா எனக்கும் உங்களைப்போல கல்யாணம் செய்து பிள்ளை குட்டி பெற்று முழுமையாக வாழ்வதற்கு ஆசைதான். அடுத்த தடவை முயற்சி செய்யுங்கள்.

Forgive me உங்களை அப்பன் என்று சொன்னதற்கு. அதுவே இல்லாது எத்தனை குழந்தைகள் இருக்கும்போது. Please lookafter my sister, at least.'

செவ்வாய், 17 ஜூலை, 2007

பொங்கு 'சிங்களம்'

சிங்கள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததே அதிசயம் என்றார்கள். இப்போது அதைவிடப் பெரிய அதிசயம் இலங்கையில் நடைபெற்றிருக்கிறது.

ஆறென்றால் அது மலையில் ஆரம்பித்து கடலில் விழும். தமிழர் தேசத்திலோ போராறு கடலில் (மாவிலாறு) ஆரம்பித்து (குடும்பி) மலையில் முடிவடைந்திருக்கிறது.

பேரழிவுகளுக்கு முன் அதிசயங்கள் நிகழுமென்பார்கள். மஹிந்தவைப் புலிகள் ஏற்றி வைக்கப் புலிகளை மஹிந்த இறக்கி வைத்திருக்கிறார் குடும்பிமலையிலிருந்து.

அதிசயமேதான்!

புலிகள் இறங்கினார்களா அல்லது இறக்கப்பட்டார்களா என்பது 'குடும்பிமலை ரகசியம்'. இப்போதைக்கு அறிய முற்படுவது தேவையற்றது.

எப்படியாயினும் புலிகள் தந்திரோபயமாகத் தப்பி மரபு வழிப் போரிலிருந்து மீண்டும் கரந்தடிப் போர் யுக்தியைக் கையாளப் போகிறார்கள் எனப்படுகிறது.

உண்மை அதுவாகவிருப்பினும் சிங்கள ஆட்சிக்கும் இராணுவத்துக்கும் இது ஓர் பாரிய வெற்றி. உள்ளூர் மக்களிடத்தும் சர்வதேச அரங்கிலும் புலிகளுக்கு இது ஒரு பெரிய தோல்வி.

சிங்கள ஆட்சியாளர்களுக்கு இது அரசியல் வெற்றியே தவிர இராணுவ வெற்றியல்ல என்கிறார் சர்வதேசப் புகழ் பெற்ற இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ்.

இருக்கலாம். ஆனால் காலம் காலமாக தென்னிலங்கை ஆட்சியாளர்கள் இராணுவத்தைப் பாவித்து வருவதே அரசியல் வெற்றிக்காகத்தானே! மக்களின் அதிருப்தி, சரிந்துவரும் பொருளாதாரம், கட்சியுடைவு என்று பல வழிகளிலும் அதல பாதாளத்தை நோக்கி விழுந்துவிடத் தயாராகவிருந்த மஹிந்த்வுக்கு குடும்பிமலையையே சஞ்சீவியாகப் பெயர்த்துக் கொடுத்துக் காப்பற்றியிருக்கிறார் அனுமார் சரத் பொன்சேகா. தென்னிலங்கை மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை இருவரும் காப்பாற்றியிருக்கிறார்கள். அதற்கான வெகுமதியை மக்களிடமிருந்து ஏற்பதற்கு அவர்கள் தகுதியுடையவர்களே.

மாறாகப் புலிகள் மக்களுக்குக் கொடுத்த வாகுகுறுதிகளை நிறைவேற்றவில்லை. 'ஒரு வருடமாகவே இப்படித்தான் எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் எதுவுமே செய்ய முடியாது' என்று இராணுவ அதிகாரி கேலியாகப் பேசுகிற அளவுக்கு நிலைமைகள் இருக்கின்றன.

புலிகளைத் தெரிந்தவர்கள் வழமைபோற் சிரிப்போடு உதாசீனம் செய்கிறார்கள். பாரிய தாக்குதல் ஒன்றுக்கு அவர்கள் தயாராகிறார்கள் என்பதிலும் இரண்டாம் அபிப்பிராயமில்லை. முன்பு பல தடவைகள் இதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். மக்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அதுவேதான்.

ஈழ்த் தமிழர்களுக்கு அதுவே இறுதி நம்பிக்கையும்கூட. இலங்கை அரசுகளை நம்பி ஏமாந்தார்கள். இந்தியாவை நம்பி ஏமந்தார்கள். இறுதியாக சர்வதேசங்களை நம்பி மோசமே போய்விட்டார்கள்.

இந்த நிலையில் புலிகள் ஏதாவது செய்தேயாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

எங்கு எப்படி எப்போது என்பது மர்மமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் மூதூர் கிழக்கு, சம்பூர், குடும்பிமலை என்று தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் பறிபோய்க்கொண்டிருக்க இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அரை வயிறுகளோடு சில்லுக்கும் செல்லுக்கும் தப்பி நெடுங்காலம் வாழமுடியாது. அரசிடம் இருந்து இவர்களுக்கு நிவாரணம் கிடைக்காது. அவர்களை மீண்டும் அவர்களது நிலங்களிற் குடியேற்றுவது தமிழர் கடமை.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அங்குள்ள மக்கள் ஒரு பேருண்மையை உணர வேண்டும். ஜே.வி.பி போன்ற தென்னிலங்கை இனவாதிகளின் (இவர்களை மார்க்சீயவாதிகள் என்றால் அது மேதை மார்க்ஸ் இற்கு இழுக்கு!) ஒரே நோக்கம் இலங்கை முழுவதையும் ஒரு பெளத்த சிங்கள நாடாக்குவதே. அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தளவுக்கு அவர்களது திட்டங்கள் நிறைவேறியிருக்காது. புலிகள் எந்தளவுக்கு கோமாளியான ராஜபக்ஷவைப் பாவித்து தமது தனி ஈழத்தைப் பெற முயற்சித்தார்களோ அதே போன்றுதான் ஜே.வி.பி. யினரும் ராஜபக்ஷவுடன் கூட்டணியமைப்பதன்மூலம் தமது திட்டங்களை நிறைவேற்ற முயற்சித்தார்கள். இன்றய கள நிலவரத்தின்படி ஜே.வி.பி. யினர் தமது முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். வடக்குக் கிழக்குப் பிரிப்பு, கிழக்கின் வெற்றி எல்லாம் ஜே.வி.பி. யின் திட்டங்களே.

கிழக்கைக் கைப்பற்றியது இராணுவ வெற்றியல்ல அரசியல் வெற்றிதான் என்று ஒப்புக்குக் கூறினாலும் கிழக்கில் புலிகளின் வெற்றிடத்தையும், மக்களின் இடப்பெயர்வையும் சாதகமாக்கி சிங்களமயமாக்கல் துரிதப்படுத்தப் படுகிறது என்பதே உண்மை. கருணாவின் பிரிவிற்கு முன்னர் இது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று! இப்பொழுது கருணா விரும்பினாலும் கிழக்கின் சிங்கள மயமாக்கலை நிறுத்த முடியாது. அப்படி முயற்சித்தால் சிங்கள இராணுவம் கருணா அணியைத் துவம்சம் செய்துவிடும். 'வன்னிப் புலிகளை' த் துரத்துகிறோம் என்று மண்ணையே தாரை வார்த்துக் கொடுத்ததே கருணா அணியும் அதன் ஆதரவாளர்களும் சாதித்தது.

இந்த நிலையில் கருணா அணியினர் ஜனநாயக வழிக்குத் திரும்பித் தேர்தல்களிற் பங்கேற்றால் நிலைமை மாறும் என்று நினைக்கலாம். கிழக்கு மாகாணத் தமிழ் மக்களது உணர்வுகளை அர்சு மதித்திருந்தால் மக்கள் பட்டினியால் வாடும்போது வெற்றி விழாக் கொண்டாடியிருக்க மாட்டார்கள். இராணுவ ஆட்சியோ ஜ்னநாயக ஆட்சியோ சிங்கள மயமாக்கல் அதி வேகத்தில் நடைமுறைப் படுத்தப்படும். இதைத் தடுத்து நிறுத்தும் ஒரே வழி-கருணா அணியும் புலிகளும் MOU செய்து கொண்டு போரை உக்கிரப்படுத்துவதுதான். மிகவும் கோபப்படுகிறீர்கள் போலிருக்கிறது. மண்ணைக் காப்பாற்ற இதைவிட வேறேதும் வழியிருந்தால் சொல்லுங்கள்!

விடுதலைப் போராட்டம் ஆரம்பித்ததே தமிழரின் மொழியுரிமை, பிரதேச உரிமை வாழ்வுரிமைகளைக் காப்பாற்றிக்கொள்வதற்காக. அவற்றை இழந்து பெறும் விடுதலைக்கு அர்த்தமில்லை.

ஞாயிறு, 1 ஜூலை, 2007

வன்னியின் செல்வன் - அத்தியாயம் இரண்டு

வன்னியின் செல்வன்


இரண்டாவது அத்தியாயம்


மங்களரின் கனவு


ஏற்கனவே அமளி துமளிப்பட்டுக் கொண்டிருந்த ரோஹண நாடடின் ஆட்சிக்கு சோதிடர்களின் கூற்றுப்படி பல துர்நிமித்தங்கள் தோன்றின. எங்கே தூமகேது தோன்றப்போகிறதோ என்று மக்கள் துயரப்பட்டுக் கொண்டார்கள். நாளுக்கு நாள் பண்டங்களின் விலை அதிகரித்தது. அரச தானியச்சாலை விரைவில் காலியாகிவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது என்று களஞ்சிய அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.


நாட்டின் நிலைமை மன்னர் மகிந்தருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. சோதிடர்களின் வாக்கு பலித்துவிடுமோ தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று மகிந்தர் நாளொரு குப்பியும் பொழுதொரு தொப்பியுமாக அரண்மனையிலேயே மறைந்து வாழ நேரிட்டது.


இந்த வேளையில் அரசரின் சகோதரரும் அந்தரங்க ஆலோசகருமான பசிலர் செய்தியொன்றைக் கொண்டோடி வந்தார். முன்னாள் அமைச்சரும் மகிந்தரின் பல அரசியற் களப் போர்களை முன்னின்று நடத்தி வெற்றிவாகைகளைச் சூடக் காரணமானவருமான மங்கள சமரவீரர் அரசருக்கு எதிராகச் சதியொன்றை மேற்கொள்ளுகிறார் என்பதே அச் செய்தி.
தன்னை எந்த உலக மகா சக்திகளாலும் அசைக்க முடியாதென்று இறுமாப்பிலிருந்துவந்த மகிந்தர் ஒரு கணம் ஆடிப்போய்விட்டார். என்ன இருந்தாலும் நாயக்கர் வம்சத்தின் அழுங்குப்பிடியிலிருந்து நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி மகாராணி சந்திரிகையை நாட்டை விட்டே துரத்துவதற்கு உதவி செய்த மங்களரர் இப்படியாகுவார் என்று எதிர்பார்க்கவில்லைத்தான்.


‘எத்தனை பேருக்கு வெகுமதிகளை அள்ளி இறைத்தேனே! உலகத்திலேயே தேவைக்குமதிகமான அமைச்சர்களை நியமித்து அத்தனை பேருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பல்லக்கு தேர் குதிரை யானை என்று அள்ளி அள்ளிக் கொடுத்தேனே! கஜானா காலியாகிய போதெல்லாம் புத்தம் புதிதாக பணத்தை அச்சடித்து அபிஷேகம் செய்தேனே! தூரதேச யாத்திரைகள் போகும்போதெல்லாம் நூற்றுக்கணக்கில் அமைச்சர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கொண்டு திரிந்து இறக்கைக்குள் வைத்துப் பராமரித்தேனே! இப்படியாகி விட்டதே’

இப்படியாக மகிந்தர் தலையிலடித்துப் புலம்பினார்.


இந்த நேரம் பார்த்து அமைச்சர் பர்னாந்துப்பிள்ளை உள்ளே வந்தார். அவர் மன்னர் மகிந்தருக்கு மிக நெருக்கமானவர். தமிழ் சிங்களவர் ஓருடலும் ஈருயிருமாக வாழ வேண்டுமென்பதற்கு உதாரணமாக வாழ்பவர் அமைச்சர் பர்ணாந்துப்பிள்ளை அவர்கள். மன்னரின் சிவப்பு உத்தரீயத்தின் தலைப்பால் ஏற்கனவே சிவந்து போயிருந்த கண்களைத் துடைத்துவிட்டுக் கொண்டே அமைச்சர் சொன்னார்:


“மன்னாதி மன்னா. இந்த மங்களரின் சதி பற்றி நீங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். உங்கள் ஆடசியில் தமிழ் மக்களைத் தவிர எந்த ஒரு உயிரையும் நீங்கள் புண்படுத்தியதில்லை. மக்கள் உங்கள் பக்கமிருக்கிறார்கள். புத்த சங்கங்கள் இரண்டும் உங்கள் பக்கம். போதாதற்கு தமிழர் பக்கத்திலிருந்து பல சிற்றரசர்கள் உங்கள் கால்களையே தினம் கழுவிக்கொண்டிருக்கிறார்கள். சிங்கள இனத்துக்கே பெயரையும் புகழையும் பெற்றுத்தந்த கெமுனு மன்னரின் மறு பிறப்பே நீங்கள்தான் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்”


“உண்மையாகவா அமைச்சரே..?”


“ஆமாம் மன்னா! இரண்டாம் கெமுனு என்ற பட்டத்தைச் சூட்டிக் கொள்வதற்கு நீங்கள் தகுதியுடையவர்தான். எல்லாள அரசனின் மறுபிறப்பென்று மக்கள் அழைக்கும் கரிகாலனின் ஆட்சியிலிருந்து கிழக்கு மண்டலத்தை விடுவித்த பெருமை உங்களைத்தானே சேரும்”


“ஆமாம் அமைச்சரே… கொஞ்சம் பொறுங்கள். யாரங்கே அந்தக் குப்பிக்காரனை அழைத்துவரச் சொல்…. கலப்பதற்கு என்ன வேண்டும் அமைச்சரே."

" ஜலமே போதும் மஹாவலியிலிருந்தல்லவா வருகிறது..”


மன்னர் மகிந்தருடைய கோபத்தை எப்படி அடக்கலாமென்ற ரகசியம் அமைச்சர் பர்ணாந்துவிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இருவரும் களிப்போடு ஏனைய அரச கருமங்களைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள்.


“அமைச்சரே இந்த மங்களருக்கு நாம் என்ன குறை வைத்தோம். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? . உண்மையில் அவர் இல்லாவிட்டால் நாம் ஆட்சி அமைத்திருப்பதே சிரமம். சிற்றரசர் சோமவன்சர் போன்றவர்கள் கிளர்ச்சி செய்தபோது அவரோடு சமரசம் செய்து கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தியவர் இந்த மங்களர். இப்போது அந்த கபடர் சூரியாராய்ச்சியாரோடு சேர்ந்து எனக்கெதிராகச் சதி செய்கிறார். என் சகோதரர் கோதபாயரிடம் சொன்னால் ஒரே நாளில் இருவரையும் வெண் புரவிகளிற் கொண்டுபோய்த் துவம்சம் செய்துவிட முடியும். ஆனால்….” மஹிந்தர் மீசையை முறுக்கினார்.


“அரசே எனக்கு ஒரு சந்தேகம் தோன்றுகிறது. மங்களரின் சதியின் பின்னால் வலுவான அந்நிய தேசங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர்கள் எல்லோருடைய நோக்கமும் கரிகாலனை ஒழித்துக்கட்டவேண்டுமென்பதே. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட சோழ சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவும் வல்லமை இந்த கரிகாலனுக்கேயுண்டு என்று ஈரேழுலகமும் நம்புகிறது. கரிகாலனால் எங்கே தமது நாடுகளுக்கே ஆபத்து வந்துவிடுமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். எந்தவித வெளிநாடுகளின் உதவிகளுமில்லாமலே பாரிய படைக்கலங்களைச் சோழர் படை தாமாகவே உருவாக்குகிறதென்ற விடயம் வெளிநாடுகளுக்குத் தெரிந்ததிலிருந்து அவர்கள் எச்சரிக்கையடைந்திருக்கிறார்கள்.”


“அதற்கும் மங்களரின் சதிக்கும் என்ன சம்பந்தம்.?”


“கரிகாலனை ஒழித்துக்கட்டும் வல்லமை உங்களுக்கு இல்லை என்று அயற்தேசங்கள் கருதுகின்றன. அத்துடன் சமீபத்தில் நீங்கள் பல வெண் புரவிகளை அரேபியாவிலிருந்து இறக்கியது அமைச்சர் கோதபாயரின் வேண்டுகோளுக்கிணங்கவே என்றும் அவை தருவிக்கப்பட்டதன் பின்னர் தலைநகரில் மட்டும் சென்ற மாதத்தில் 125 தமிழர்கள் வெண்புரவியிற் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள் என்றும் வெளிநாட்டு பிரதானிகள் கருதுகிறார்கள். இக்காரணங்களுக்காக உங்களை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு மங்களரை ஆட்சியிலமர்த்தும் நோக்கம் அயற் தேசங்களுக்கு உண்டு என்று நமது ஒற்றர்கள் அறிந்து வந்திருக்கிறார்கள். அத்தோடு தலைநகரில் தங்கியிருந்த பல அப்பாவித் தமிழர்களைப் பலவந்தமாக இரவோடு இரவாக வெள்ளைத் தேர்களில் ஏற்றி நகரின் எல்லைகளிற் கொண்டுபோய்விட்ட சம்பவம் அயற் தேசங்களை உலுப்பியிருக்கிறது.”


“அப்படியா..? அதற்கு மாற்று வழியாக என்ன செய்யலாம்?

மஹிந்தர் கேட்டார்.அப்போது வாயிற்காவலன் வந்து பணிவாகக் கூறினான்:


“அரசே வாயிலில் அமைச்சர் தேவானந்தர் நிற்கிறார். உங்களை அவசரம் பார்க்க வேண்டுமாம்”


“வரச்சொல். அமைச்சரே உங்களுக்கு ஒரு ஆடசேபணையும் இல்லையே. நீங்கள் இருவரும் ஒரு வழியில் தமிழர்கள் தானே. எங்கே நாயும் பூனையுமாக…”

"இல்லை. எனக்கும் தேவானந்தருக்கும் எதுவித பிரச்சினையும் கிலையாது. தாராளமாகப் பேசுங்கள்"


அமைச்சர் தேவானந்தர் பளிச்சென்ற வெண்ணாடை தரித்து நிதானமாக வந்தார்.


வணக்கம் மன்னர் பெருமானே!


“என்ன விடயம் அமைச்சரே? சிற்றரசர்கள் கருணாகரர் பிள்ளையார் ஆகியோருடைய பிணக்குகளைத் தீர்த்துவைக்க ஏதாவது முயற்சி எடுத்தீர்களா? இப்போதே தீர்க்காவிட்டால் பிள்ளையாரைத் தம்பக்கம் இழுத்துவிடக் கரிகாலன் முயற்சிக்கலாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்”


“ஆம் மன்னரே. மண்டலக்காரர்களை இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறு பணித்திருக்கிறேன்”


“அது சரி… வந்த விடயம்?


“தலை நகரிலிருந்து 300 தமிழர்களை உங்கள் சகோதரர் பலவந்தமாக வெண் தேர்களில் ஏற்றி நகரின் எல்லைகளுக்கு அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்டேன்”


“அதற்கு என்ன இப்போது. பிற தேசங்கள் எங்களைக் கடிந்து கொண்டனதான். இருந்தாலும் பாரதூரமாகக் கண்டிக்கவில்லை. ‘கவலை தெரிவிக்கிறோமென்று’ சிரித்துக்கொண்டுதான் கூறினார்கள். இருந்தாலும் அதை நிறுத்தி தமிழர்களிடம் மன்னிப்புக் கோரும்படி கோரினார்கள். நானாவது மன்னிப்பு அதுவும் தமிழரிடம் கேட்பதாவது. எனக்காக முதலமைச்சர் இரத்தினநாயக்கருக்கு தமிழரிடம் மன்னிப்புக் கோரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.


“தமிழரைப் பலவந்தமாக அனுப்பியது பிழையானது. அப்படித் தொடர்ந்தும் செய்திருந்தால் நாமே நமது அன்பிற்குரிய தாய்நாட்டைப் பிரித்துக் கொடுத்தவர்களாக வரலாற்றில் பார்க்கப்படுவோம்.” அமைச்சர் தேவானந்தர் பணிவோடு கூறினார்.


“உண்மைதான் அமைச்சரே. எனது தம்பி கோதபாயரை உங்களுக்குத் தெரியும்தானே. கொஞசம் முற்கோபக்காரன். அவன் அவ்வளவாகக் கல்வி கற்றதில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும். தமிழரின் கொலை முயற்சியிலிருந்து தப்பியவனுக்கு கொஞசம் கோபம் அதிகம் தான்….அது சரி அமைச்சர் மங்களர் எமது ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறாராமே. அமைச்சர் பர்ணாந்து சொல்கிறார்…”


“கேள்விப்பட்டேன் மன்னா. அது நடக்கவல்ல காரியமல்ல. மங்களர் தனது நண்பரும் சிற்றரரசருமான சோமவன்சரினதும் முன்னாள் முதலமைச்சரான விக்கிரமசிங்கருடனும் கூட்டுச்சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றலாமென்று கனவு காண்கின்றார். சோமவன்சருடைய படைபலமும் விக்கிரமசிங்கருடைய படைபலமும் ஒன்று சேர்ந்தாலும் எங்களது பலத்தை மீற முடியாது. அப்படியானாலும் அதற்கு முன்னராக நாம் இன்னுமொரு சதியொன்றை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுடைய சதியை இலகுவாக முறியடிக்கலாம்.”


“எப்படி எப்படி… சொல்லுங்கள் அமைச்சரே. இதற்காகத்தானே சிங்கள அரசுகள் எப்போதும் தமிழமைச்சர்களை ஆலோசகர்களாக வைத்திருப்பது….”


“மன்னா! ஒரு நாட்டில் ஆட்சி ஈடாட்டம் காணும்போது அது அயல் நாடுகளின் மீது படையெடுப்பைச் செய்ய வேண்டும். தேசீயத்துக்கு அச்சுறுத்தல் வரும்போது மக்கள் ஒரு கொடியின் கீழ் அணிதிரள்வார்கள். உங்களுக்கு மக்கள் ஆதரவு அலையலையாக வந்துகொண்டே இருக்கும். எனவே இப்போ உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது மக்களுக்கு கிராமங்கள் பட்டி தொட்டிகள் எங்கும் பறையடித்துச் சேதியனுப்ப வேண்டியது. தேசீயத்துக்கு அச்சுறுத்தல் என்றால் மக்கள் பொங்கியெழுவார்கள். அத்தோடு கிழக்கு மண்டலத்தை விடடுவித்ததும் நாடு தழுவிய ரீதியில் வெற்றிக் களியாட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். ”


“நல்லது அமைச்சரே. சரியான தருணத்தில் வந்து உங்கள் மதியூகத்தால் எங்கள் நாட்டைக் காப்பாற்றியமைக்கு நான் என்றென்றும் நன்றியுடையவனாயிருப்பேன். இன்னும் சில நாட்களில் கரிகாலனைத் தோற்கடித்து ஈழம் முழுவதையும் வெற்றிகொண்டவுடன் கிழக்கு மண்டலத்தைக் கருணருக்கும் வடக்கு மண்டலத்தை உங்களுக்கும் பாத்தியதையாக எழுதிக்கொடுப்பேன் என்று இப்போதே உறுதி மொழி தருகிறேன்”

மன்னர் மகிந்தர் பறையடித்துப் பிரசித்தம் செய்வோருக்குப் பின்வருமாறு ஓலையை எழுதி அனுப்பினார்.


‘மக்களே எங்கள் சிங்கள தேசத்துக்கும், புத்த சமயத்துக்கும் எங்கள் மத்தியிலிருக்கும் புல்லுருவிகளின் ஆதரவுடன் பிற தேசத்தாரினால் ஆபத்து விளையக் காத்திருக்கின்றது என்று நமது ஒற்றர் படை தகவல் கொண்டு வந்திருக்கிறது. எனவே மக்கள் விழிப்போடு இருந்து எமது தேசத்துக்கு அச்சுறுத்தல் தருபவர்களைக் காட்டிக் கொடுத்து நாட்டை வரப்போகும் ஆபத்திலிருந்தும் காப்பாற்றும்படி இத்தால் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு இரண்டாம் கெமுனு உங்கள் மகிந்த மகாராஜா’


அப்போது அவசரம் அவசரமாக கோதபாயர் அரண்மனைக்குள் நுழைந்தார். சாதாரணமாகவே கடு கடுவென்றிருக்கும் அவர் முகத்தில் இன்னும் ஆயிரம் முகங்கள் முளைத்திருந்தன.


“அண்ணா.. எமது நாட்டுக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. ஒரு பக்கம் தமிழர். மற்றப்பக்கம்….” மேலும் சொல்வதை நிறுத்திக் கொண்டு கோதபாயர் இரு அமைச்சர்களையும் மகிந்தரையும் மாறி மாறிப் பார்த்தார்.


“எனதருமைத் தம்பியே சொல். உன்னைக் கொலை செய்ய முயற்சித்தபோது ஓடோடி வந்து கட்டிப் பிடித்து முத்தமிட்டேனே.. ஞாபகமிருக்கிதாடா என் தம்பியே. நீ சின்னவனாயிருந்தபோது….”


“போதும் நிறுத்து. அண்ணா…தெற்குக் கடலில் பிரமாண்டமான கப்பல் ஒன்று நங்கூரமிட்டிருக்கிறதாமே. அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?


“தெரியாதடா தம்பி. எனக்கு எதுவுமே தெரியாது.”


“தெரியாதே.. தெரிந்தே இருக்காதே.. உங்கள் நட்பான அயற் தேசம் இந்துஸ்தானம் இது பற்றிச் சொல்லியிருக்காதே…இந்த நண்பர்களும்கூடச் சொல்லியிருக்க மாட்டார்களே..?”


“உனக்கெப்படியாடா தம்பி இதுபற்றித் தெரிந்தது”


“சீனத்து பிரதானி தகவல் அனுப்பியிருந்தார். தமிழருக்கு உதவி புரிவதற்காக வந்திருக்கலாமாம். எதற்கும் விசாரியுங்கள்…”

அப்போது அரண்மனையின் மந்திராலோசனைக் கூடத்திலிருந்து யாரோ வலியினால் முனகும் சத்தம் கேட்டது. ஒருவர் தள்ளாடிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்.

"அண்ணா சமலரே. என்ன கோலமிது? உங்களுக்கு என்ன நடந்தது? "

மன்னர் மஹிந்தரும் அமைச்சர்களும் ஓடிப்போய் அமைச்சர் சமலரைக் கைத்தாங்கலாக அழைத்துவந்து இருக்கையில் அமர்த்தினர்.

"எனதருமைத் தம்பிகளே! தம்பி பசிலரின் ஆலோசனைப்படி நாட்டில் பரிபாலனம் எப்படியிருக்கிறது என்று பார்த்துவரலாம் என்று மாலை நகர் வலம் போனேனா. மக்கள் கற்களால் எறிந்தும் அடித்தும் துரத்தியும் விட்டார்கள். அவர்கள் மிகவும் கோபமாய் இருக்கிறார்கள். நீங்கள் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்"

அப்போது அமைச்சர் தேவானந்தர் அருகே வந்து மெதுவான குரலில் ஏதோ கூறினார். மன்னர் மஹிந்தரின் முகம் மலர்ந்தது.

தொடரும்.