ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018



எனது இனிய நண்பர், நாகலிங்கம் இராமலிங்கம் (அப்பன் அண்ணை) நேற்று மாரடைப்பினால் காலமானார். சுமார் 30 வருடங்கள் எமது நட்பு. குழந்தையின் சுபாவம். எது பற்றியும் கவலை இல்லாதவர். சீட்டு, சதுரங்கம் ஆடுவதில் மகா பிரியர். பல வார இறுதி மாலைகளில் விடியும் வரை சீட்டு விளையாடிவிட்டு 40 கி.மீ . வீடேகும் ஒரு இளைஞராகவே அவர் இறுதிவரை வாழ்ந்தார்.

அடுத்த வருடம் எண்பது வயதை எட்டியிருப்பார். தினமும் யோகாசனம் செய்பவர். குறிப்பிடும் வகையில் எந்தவொரு வயதுக்குரிய வியாதிகளும் அவரது உடலை அண்டியிருக்கவில்லை.

குடும்பத்தாரோடும், நண்பர்களோடும் மிக நெருக்கமாகவே இருப்பார். சமூக ஈடுபாடுகள், தாய் நாட்டின் மீதான அக்கறை என்று தனது வாழ்நாள் முழுவதையும் பிரயோசனமாகவே கழித்தவர்.

அவரில்லாத வார விடுமுறைகள் இனிமேல் சபிக்கப்பட்டவையே.

அப்பன் அண்ணை, பிரியா விடை உங்களுக்கு!