சனி, 30 ஜூன், 2007

வெறும் - குறும் பா

எத்தனையோ விதம் விதமாய்ப் பார்ப்பாள்


எதற்கு எது அர்த்தமென விதி விதிப்பாள்


இத்தனையும் செய்பவளென் கண்மணியாள் என்றெடுத்து


முத்தமிடப் போனால் முகத்தைச் சுளிப்பாள்.




திங்கள், 25 ஜூன், 2007

சிவாஜி - வழமையான சங்கர் .......

சிவாஜி பார்த்தேன். முதலில் பார்ப்பதற்கான எண்ணம் இருக்கவில்லை. பூங்குழலியின் அன்புக்கும் அனுசரணைக்கும் மறுப்புச் சொல்ல முடியாமற் போய்விட்டது. பார்க்கக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. பூங்குழலிக்கு நன்றி. 

 தமிழரை இழிவு படுத்துவதில், திராவிட அரசியல்வாதிகளுக்கு அடுத்தபடியாக இயக்குனர் சங்கரைச் சொல்லலாம். அவருடைய எல்லாப் படங்களிலும் தமிழரைப் பழித்தல் மறைமுகமாக இழையோடும். ரஜனியின் தமிழெதிர்ப்புவாதமும் சங்கரின் தமிழரைப் பழித்தலும் சேர்ந்தே எனக்கு இப்படத்தைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பத்தைத் தகர்த்திருந்தது. ஆனாலும் பூங்குழலியின் ஆசைக்குப் பலம் அதிகம். என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தள்ளி வைத்துவிட்டு ஒரு வெறும் திரைப்பட ரசிகனாகப் பார்த்தால் இப்படம் என்னைத் தன் பக்கம் இழுத்திருக்கிறது என்பதனால் அது சங்கருக்கு வெற்றியே. 

 'இந்தியன்', 'அந்நியன்' வரிசையில் மணிரத்னம், சங்கர் போன்றவர்கள் இந்தியாவைத் திருத்துகிறோமென்று தாமும் அதே கூவத்தில்தான் குளித்தெழும்புகிறார்கள். ஆனாலும் தாங்கள் புனித கங்கையிற் குளித்ததாகச் சொல்லி ரசிகர்களை ஏமாற்றி அதில் வெற்றியும் பெறுகிறார்கள். 

இப்படி ஆயிரம் படங்கள் வந்தாலும் ரசிகர்கள் நடிகர்களின் கட் அவுட்டுகளுக்குப் பாற் பொங்கல் பொங்கியும் ஆட்டுக் கடா வெட்டியும், கற்பூரம் கொழுத்தியும் கொண்டாடுவது நிறுத்தப்பட மாட்டாது. காரணம் அவைகளும் சந்தைப்படுத்தற் திட்டப்படியே நடைபெறுகின்றன. 

மொத்தத்தில் சங்கர், ரஜனி, மெய்யப்பன் போன்ற கறுப்புப்பண தாதாக்களையும் ரஜனி ரசிகர்களையுமே இப்படம் திருத்த முயல்கிறது. ஆனாலும் இந்தியாவின் பிரச்சினகளை மீண்டும் மீண்டும் காட்டிக் கொள்வது இந்தியா திருந்த வேண்டும் என்ற நல்ல நோக்கம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பலவீனமான ரசிகர்கள் இதற்குப் பலிக்கடாவாகிறார்கள் என்பதே கவலை. 

எப்போதுமே கெட்டவர்களும், சோம்பேறிகளும், பாமரர்களும், நம்பத் தகாதவர்களும், குரூர முகங்களைக் கொண்டவர்களும் தமிழர்களாகக் காட்டப்படுவது சங்கரின் முத்திரை. 'சிவாஜி' படத்திலும் இது விதி விலக்கல்ல. 

 'அவன் என்னோட படிச்ச ஐயர்ப் பையன். நம்பிக்கையாகக் கொடுக்கலாம்' என்று விவேக் ரஜனிக்குச் சொல்வதன் மூலம் சங்கர் திராவிடருக்கு உச்சி அடி போடுகிறார். 

 இப்படம் வசூலை எதிர்பார்த்துத் தயாரிக்கப்பட்டது. இளைய தலைமுறையினதும் பாமர ரசிகர்களினதும் பலவீனங்களை நன்றாக அறிந்து வைத்திருக்கின்ற சங்கருக்கு அது பிரச்சினையே அல்ல. பொழுது போக்கு ஒன்றே நோக்கம் என்று இப்படம் பார்க்கப் போவோரை அது ஏமாற்றவில்லை. ரஜனியும் தன் பங்கைச் சரியாகவே செய்திருக்கிறார். 

 எல்லோருக்கும் வெற்றி தமிழினத்தைத் தவிர. இதற்குக் காரணமானவரே தமிழராகவிருக்கும்போது யாரைக் குறை சொல்வது?

செவ்வாய், 19 ஜூன், 2007

காதல் -King Arthur - கார்ல் ஜுங்

காதல் என்றதும் றோஜாப் பூ, மாலைச் சூரியன், கடற்கரை, தென்றல் காற்று, கவிதை என்ற இத்தியாதிகளையெல்லாம் கடந்து ஆட்டம், பாட்டு என்று சினிமா ரகமாகி காதலர் தினம் என்ற வியாபாரப் பொருளாகியிருக்கிற இந்தக் காலத்தில்....

இந்தக் காதலெல்லாம் காதலேயல்ல என்று சொன்னால் சங்க காலத்து அகத்திணை நூல்களை எல்லாம் எடுத்துக் கொண்டு சண்டைக்கு வந்துவிடுவீர்கள்.

உண்மையில் 'நம்ம சினிமாவில' வார காதல்தான் 'நிஜமான' காதல் என்று ஆதர் ராஜா (King Arthur) வைக் காரணம் காட்டி நவீன உளவியல் விற்பன்னர்கள் கூறுகிறார்கள். சரி ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறதா? மேலே படியுங்கள்.

சில வருடங்களுக்கு முன் லண்டனில் நான் வாழ்ந்தபோது இச் சம்பவம் நடந்தது. எனது நண்பர் ஒருவர் சாகசக்காரர். 'குழப்படிக்காரன்' என்ற ரகத்தில் இலகுவாக அடங்குவார். Handsome ஆனவர் என்று அவரைச் சொல்ல முடியாது. நாங்கள் வழக்கமாகப் போகும் மதுச்சாலைக்கு வரும் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணிற்கு என் நண்பர் மீது பிரியம். என் நண்பரைவிட அப் பெண்ணுக்கு வயது இரண்டு மடங்கிற்கு மேல். திருமணம் முடித்து இரண்டு வளர்ந்த பையன்கள் உண்டு. கணவன் ஆஜானுபாகுவான ஆனால் நல்ல சுபாவமுள்ளவன். அவனும் அவளோடு மது அருந்த வருவதுண்டு.

விடயம் முற்றி ஒரு நாள் அப்பெண்ணை அழைத்துக் கொண்டு எனது நண்பன் தனிக்குடித்தனம் ஆரம்பித்து விட்டான். எனக்கு அது சரியானதாகப் படவில்லை.

'நல்ல கம்பீரமான கணவனும் இரண்டு அழகான குழந்தைகளும் இருக்கும்போது நீ ஏன் இப்படியொரு காரியத்தைச் செய்தாய்?' என்று நான் அவளிடமே கேட்டேன்.

' என் கணவன் நல்லவன் தான். ஆனால் அவன் சதா என் காலுக்குள்ளேயே கிடப்பான். இரவு இரண்டு மணிக்கு போய் சிகரட் வாங்கிக்கொண்டு வா என்றால் ஓடுவான். ஆனல் உன்னுடைய நண்பனோ எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவான் என்று நான் ஏங்கிக்கொண்டு இருக்கிறேன்' அதுதான் வித்தியாசம் என்றாள்.

அவளது மனோநிலையைப் புரிந்துகொள்ள நாம் விஞ்ஞானியாயிருக்க வேண்டியதில்லை. அவளைப் போல் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவள் ஒரு துணிச்சல்காரி அவ்வளவுதான்.

எமது விருப்பு வெறுப்புகள் எல்லாம் ஒரு வகையில் ஆழ்மனத்தில் பதிவுகளாகி இருக்கின்றன. எமக்குக் கிடைப்பவை இப் பதிவுகளோடு ஒத்தவையாகிவிட்டால் நாம் அதிர்ஷ்டசாலிகள். இல்லாதபோது கிடப்பவற்றை இரண்டாம், மூன்றாம் பட்சமாகவே ஏற்றுக்கொள்வோம்.

இலட்சிய கனவன் பற்றி அவள் கொண்டிருந்த 'பதிவு' திருப்தியற்றதாக இருந்திருக்கலாம். அப்படியானால் அவள் அப் பதிவை எங்கிருந்து பெற்றாள்?

இங்குதான் King Arthur ஐத் துணைக்கழைத்துக் கொண்டு வருகிறார் கார்ல் ஜுங். எல்லா மனிதர்களினதும் ஆழ்மனங்களில் சில மூலப்படிவங்கள் (archetypes) துயில் கொள்கின்றன என்றும் அவை எங்கும் எக்காலத்திலும் கனவுகள் மூலம் வெளிக்கொணரப்படலாம் என்றும் கார்ல் ஜுங் கருதுகிறார்.

ஆர்தர் மன்னனை ஒரு புராண நாயகனாகப் பார்ப்பதனால் தான் அவனை மக்கள் மோகிக்க முடிகிறது. அவனது துணிச்சலான சாகசமிக்க வாழ்வே அவனைக் காதலின் ஒரு மூலப்படிவமாக்கியிருக்கிறது.

இன்றய சினிமாவின் அடி தடி வல்லவர்களும், படை வீரர்களும் மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பதின் காரணமுமிதுவே.

துணிச்சலான காரியங்களைச் செய்யும் நாயகர்களைப் பற்றி எழுகின்ற மோகமே காதலாகப் பரிணமிக்கிறது. இந்நாயகர்களைச் (இரு பால்)சுற்றி எழுப்பப்படும் பிம்பம் (image) மனங்களில் நிரந்தரமாகவே பதிக்கப்பட்டு விடுகிறது. நமது காப்பிய நாயகர்களான கண்ணனும், ராமனும் தெய்வங்களாகப் பார்க்கப்படுவதைவிட 'காதலர்' களாகப் பார்க்கப் படுவதும் பக்த சிரோன்மணிகள் பரவசப் படுவதுமே அதிகம். முப்புரமெரித்த சிவனின் மீதும் ஆறு படை வீடுகளைக் கொண்ட முருகன் மீதும் கண்ணீர் சொரிந்து பாடப்பட்ட பக்தி இலக்கியங்கள் அக் கடவுள்களை நாயகர்களாக (heroes) உருவகப்படுத்தியதின் விளைவுகளே.

மேற்கத்திய இலக்கியங்கள் காதல் (romance) என்றதும் King Arthur ஐ உதாரணமாகக் காட்டுவதற்குக் காரணம் அம் மன்னன் புரிந்த சாகசங்களினால் (adventures) மக்கள் கவரப்பட்டமையே.

புராண காலங்களிலிருந்து இப்படிப்பட்ட பிம்பங்கள் உருவாக்கப்படுவதும் (அது கற்பனைக் கதைகளாகவோ அல்லது நிஜமாகவே சாகசம் புரிந்த மானிடர்களாகவோ இருக்கலாம்) அவற்றைச் சுற்றி மக்கள் கூட்டம் கூடுவதும் காலப்போக்கில் அவற்றில் சில தெய்வங்களாக்கப்பட்டு வழிபடப்படுவதும் வழக்கமாக வந்துள்ளது. (இன்றய தமிழ்ச் சினிமா உருவாக்கிய சினிமாத் தெய்வங்களைப் போலவே). இவ்வுருவ வழிபாடுகளை வெறும் கல்லார் செயல்களென நாம் முற்றாக ஒதுக்கிவிட முடியாது என்பதற்கு இன்றய தமிழ் சினிமாவே நல்ல உதாரணம். மதுரையை எரிக்காது கண்ணகி வெறுமனே தூக்குப் போட்டுக்கொண்டு செத்துப்போயிருப்பின் இன்று அவள் தெய்வமாக ஆக்கப்பட்டிருக்க மாட்டாள்.

அதற்காக நம்ம பகுத்தறிவுக் கொழுந்துகள் ஆர்ப்பரிக்கவும் முடியாது. பிள்ளையாரின் கற்சிலையைத் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் அவ்விடத்தில் இன்னுமொரு சிலையைத்தானே வைக்கிறார்கள். அச்சிலைக்கும் இன்னுமொரு ஆயிரம் வருடங்களில் மூன்று சாமப் பூசைகள் நடக்காதென்பதற்கு என்ன உத்தரவாதம்?

எனவே நாயகர்கள் உருவாகப்படுவதும் அச்ச்ம்பவங்கள் புராணங்களாகும்போது அதே நாயகர்கள் தெய்வங்களாக மாற்றமெடுப்பதும் நெடுங்கால நடைமுறை. அதை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ உளவியல் ஞானி கார்ல் ஜுங் ஏற்றுக்கொள்கிறார்.

1913ம் ஆண்டு தனது குருவான சிக்மண்ட் பிராய்ட் டுடன் கருத்து வேறுபாடு கொண்டு புறப்பட்ட கார்ல் ஜுங் உலகின் பல மூலைகளிலுமிருந்து பெற்ற தரவுகளைக் கொண்டு அவர் தனது கருதுகோளை நிரூபிக்கிறார்.

இடுகுறி (symbol), கொள்கை (theme ?), பகைப்புலம் (setting) அல்லது குணாம்சம் (character) போன்ற மூலப் படிவங்கள் (archetypes) பல தொடர்பற்ற இடங்களிலும், காலங்களிலும், இலக்கியங்களிலும் மீண்டும் மீண்டும் தோற்றம் பெறுகின்றன. இப்படியான மூலப் படிவங்களை ஆழ்மனச் சேர்க்கை (collective unconscious) என்று கார்ல் ஜுங் கூறுகிறார். வீரத்தின் (சாகசத்தின்) அடிப்படையில் தோன்றும் காதலுக்கு மூலப் படிவங்கள் பலவற்றை உதாரணமாகக் காட்டலாம். ஆதர் ராஜாவை புராண காதலுக்கு உதாரணமாகக் காட்டும்போது அவரின் வாழ்வும் அவர் புரிந்த சாகசங்களுமே அவரை பன்னெடுங்காலமாக நினைவில் வைத்திருக்கின்றன. ஆதர் மன்னனின் வாழ்வு நமது காவியங்களின் கதை அமைப்பையும் அதில் வரும் பாத்திரங்களையும் பெரும்பாலும் ஒத்துப் போகிறது. அவற்றில் வருகின்ற பாத்திரங்கள், கதையமைப்பு எல்லாவற்றிலும் பல பொதுமைகள் காணப்படுகின்றன.

அதி மானுட சக்தி (super power) - இராமாயண ராமன்
மானிட மேம்பாடு (bettering humankind) - பகவத் கீதைக் கண்ணன்
துணிவு (courage) - மஹாபாரத வீமன்
மீள் பிறப்பு (resurrection myth) - சூரன் / சிகண்டி
அடியாள் )assistant) - அனுமான்
எதிரி (nemesis) - இராவணன்
இடையூறு (tragic flaw) - சீதை கடத்தப்படுதல்
படிப்பினை (moral) - பிறர் மனை தவிர்த்தல் (இராமயணம்)
சாதுரியம் (clever / sharp)- கிருஷ்ணன்
பணிவு (humble) - தருமன்
மர்மமான பிறப்பு (mysterious birth) - கர்ணன்

ஆதர் மன்னனின் வரலாற்றைப் படித்தவர்கள் மேற்கூறிய பொதுமைகளைக் காணமுடியும்.

எனவே இப்படியான கதைகளும் பாத்திரங்களும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் எப்படி பல பொதுமைகளோடு உருவாக்கப்பட முடியும்?

கார்ல் ஜுங் 'ஆழ்மனங்களில் தோற்றமளிக்கும் பல வடிவங்கள் 'நாம் வேறெங்கோ பார்த்திருக்கிறோம்' (de-javu) என்கின்ற நினைப்பை உருவாக்குகின்றன என்றும் அவ்வடிவங்கள் பிரபஞ்ச ரீதியாக எல்லா ஆழ்மனங்களிலும் (collective) சம்பவிக்க முடியும்' எனக் கருதுகிறார். ஆழ் மனங்களினிடையே பரிபாஷிக்கப்படும் விடயங்களுக்கு மொழியில்லை பிம்பங்கள் மட்டுமே என அவர் கருதுகிறார்.

இப்படியான உருவங்கள் ஆழ்மனதில் தோன்றி மறையும்போது அவை கனவுகளாகவும் அவை வெளி மனத்தால் நிரந்தரமாக்கப்படும்போது அது மனப்பிறழ்வு நிலையெனக் கருதப்படுகிறது என்றும் கார்ல் ஜுங் கருதுகிறார். இன்றய சினிமா உதாரணத்தில் கூறினால் ஒருவர் ரஜனியைக் கனவில் காண்பதற்கும் தினமும் தன்னை ரஜனியாகவே மாற்றிக்கொண்டு விடுபவருக்கும் (பைத்தியம்) வித்தியாசம் உண்டு.

காதலில் மூழ்குபவர்கள் தனது நாயக / நாயகி களின் மீது மோகம் கொள்வத்ற்கு முன்னர் அவர்களது ஆழ்மனங்களில் பல பிம்பங்கள் தோன்றி விடுகின்றன. பெரும்பாலான பெண்கள் போர் வீரர்களையும், சீருடைக்காரரையும், அதிகாரத்திலுள்ளவர்களையும், சாகசம் புரிபவர்களையும், கலகக் காரர்களையும் மோகிப்பதற்குக் காரணம் இவர்களைப் போன்ற பிம்பங்கள் ஏற்கெனவே அவர்களது ஆழ்மனங்களில் நடமாடியமையே.

பொன்னார் மேனியன் எத்தனை அடியார்களின் கனவில் தோன்றினார்? புலித் தோலை அரைக்கசைத்திருந்தது பற்றி அடியார்கள் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? முன் பின் யாராவது அடியார்கள் மனத்தில் அப் படிவத்தைப் போட்டு வைத்தார்களா? பலரது கனவுகளில் ஒரே பிம்பங்கள் ஏன் தோன்ற வேண்டும்?

இதையேதான் கார்ல் ஜுங் ஆழ்மனச் சேர்க்கைகளிலிருந்து வரும் மூலப்படிவங்கள் என்கிறாரா?

ஞாயிறு, 17 ஜூன், 2007

இவ்வ்ழியால் வாருங்கள்- திரை விமர்சனம்

யாப்பன விற்கு வாருங்கள்

இலங்கையில் தடை செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய சிங்கள திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் அசோக கங்கம. ஏனையோர் பிரசன்ன விதானக, விமுக்தி ஜயசுந்தர ஆகியோர்.

இவாகளது படங்களின் தடைக்கு எதிராக, மூத்த திரைப்பட இயக்குனரும், சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றவருமான லெஸடர் ஜேம்ஸ் பீரிஸ் கருத்து தெரிவித்தபொழுது, இவ்வாறான தடைகள் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்துக்கு நாட்டை இட்டு செல்கின்றமைக்கான அறிகுறியாகும் என தெரிவித்துள்ளார். The Chairman of the National Film Corporation (NFC) Sunil S. Sirisena (who is also a secretary to the Defence Ministry) கருத்து தெரிவிக்கையில் படைப்பாளிகளுக்கு எல்லைகள் வகுப்பது தரமான படங்கள் வெளிவருவதை தடைசெய்யும் என்றார். தனது 'Pura Handa Kaluwara’ படத்துக்கு எதிரான தடைக்கு உயர் நீதி மனறம் சென்றவரும் சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்றவருமான பிரசன்ன விதானக கருத்து தெரிவிக்கையில் அரசியல்வாதிகள், தங்களின் சப்பாத்துக்களின் கீழ், படைப்பாளிகள் தமது கருத்துக்களை, கொள்கைகளைப் போட்டுவிடவேணடும் என நினைக்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் படைப்பாளிகள் அடிபணியப் கூடாது. ஹிட்லர், ஸ்ராலினுக்கு எதிராக நிமிர்ந்து நின்ற படைப்பாளிகளை இன்றும் உலகம் மதிக்கின்றது என்றார்.ஆனாலும் பெரும்பாலான வெகுசனத் தொடர்பு சாதனங்கள், இத்தடையை ஆதரித்து மௌனம் தெரிவித்தன. இவற்றையும் மீறி இந்த படைப்பாளிகள் தொடர்ந்து படங்களைத் தயாரிக்கின்றனர். இதில் அசோக கங்கம வும் ஒருவர். இவர் இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமாக முதலில் 'This is my moon ' (இது என் நிலா) என்ற படத்தையும், பின்னர் சுனாமி பற்றிய கிழக்கிலங்கையை மையமாகக் கொண்ட ''Neganahira Weralen Asena' or 'The East is Calling' என்ற தொலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து 'Take This Road' (இவ்வழியால் வாருங்கள்- 'Me Paren Enna' ) என்ற தொலைக் காட்சி தொடரையும் இயக்கியுள்ளார். இந்த தொடரைப்பற்றி பார்ப்பதற்கு முன்னர், இவர் தமிழ் தேசியம் பற்றி தெரிவித்த கருத்துக்களைப் பார்ப்பது அவசியம். அவற்றில் சில.

• இலங்கையில் கலாச்சாரம் இல்லை, சமூகம் இல்லை, மனித உறவுகள் இல்லை. இருப்பதெல்லாம் தனி மனிதர்கள். அவர்கள் தன்னிச்சையாக இருக்கலாம், விரும்பின் நிர்வாணமாக நடந்து திரியலாம். சுதந்திரமாக செக்ஸ் படம் எடுக்கலாம

• தேசியவாதிகள், இனவாதிகளின் கருத்துப்படி “ இனப்பிரச்சினை மேறகத்தியரால் ஏற்படுத்தப்பட்டது. இவாகளுக்கு மேற்கத்திய சினிமாவும், விஞ்ஞானமும் எதிரி. ஆனால் இன்று வீதியால ஒரு பெண் நடந்து செல்ல முடியாது, பாடசாலைக்கு சிறுவர்கள் வாகனத்தில் கூட பாதுகாப்பாக செல்லமுடியாது. மக்கள் தங்களுக்குத் தேவையான உணவு, உடையை வாங்கமுடியாதுள்ளது. வெகுசன தொடாபு சாதனங்களில் வன்முறைப்பற்றிய செய்திகள் நிரம்பி வழிகின்றன. யுத்தத்தில் இராணுவத்தின் தியாகம் என்பதும் தேசத்துக்காக, நாட்டு மக்களுக்காக என்று கூறப்படுபவையும் வெறும் அரசியல் கோஷங்கள். வேறு தொழில் இல்லாமையினால் வாழ்க்கையைக் கொண்டு நடத்தவே இராணுவத்தில் பலர் சேர்கின்றனர்.

• போரின் விளைவு- உ.ம் - குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் பிரகாரத்தின் படி, சுமார் 33,000 குழந்தை பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 20 விகிதம் பெண் சிறுவர்கள், 10 விகிதம் ஆண் சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர்.


• நான் விடுதலைப்புலிகள் ஆதரவாளனில்லை. ஆனால் தமிழ் மக்கள் பிரச்சினையை ஆதரிக்கின்றேன். நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை வலியுறுத்துகின்றேன்.

இவை அசோக கங்கம இலங்கையைப்பற்றி தெரிவித்த கருத்துக்கள்.

This is My Moon (இது என் நிலா)

போரின்போது இராணுவச் சிப்பாயிடம் சென்றடைகிறாள் ஒருத்தி. சிப்பாய் இவளைக் கண்டதும் சுட முயற்சிக்கிறான். அவள் தனது சங்கிலியைக் கழற்றுகிறாள். ஆனால் அவன் குறி வைப்பதில் இருந்து விலகவில்லை. அடுத்து பாவாடையைத் தூக்குகிறாள். முகத்தை மூடிக் கொள்கிறாள். அவன் புணர்கிறான். அவனைத் தொடர்ந்து அவளும் கிராமத்துக்குச் செல்கிறாள். இவளது வருகை அவனது முறைப் பெண்ணுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. கிராமத்தில் சிப்பாயின் அண்ணன், மாணவன் போன்றோரால் அவள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிறாள். இறுதியாக அருகில் உள்ள பௌத்த விகாரையில் தஞ்சம் அடைகிறாள். மறுநாள் காவியுடையை அநாதரவாக விட்டுவிட்டு பிக்கு காணாமல் போய்விடுகிறார். இறுதியில் இப் பெண்ணுக்கு பிறக்கும் பிள்ளையை கைகளில் ஏந்தி 'இது என் நிலா என்கிறான். இதுவும் தமிழ் மக்கள் பிரச்சினை தங்களது கைகளில் உள்ளன என்று கூறுவது போல் உள்ளது.இங்கு யுத்தத்தின் கொடுமையை பாலியல், மதம் எனபனவற்றின் ஊடாக் காட்ட முற்படுகிறார். யுத்தத்தின் பிரதிபலிப்புகளை சமூக தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். கிராமங்களில் பாலியல் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதன் வெளிப்பாடு தான் போர்ப்பிரதேசங்களில் இராணுவ வீரர்களின் பாலியல் கொடூரங்கள் என சமாதானம் கூறுகிறாரோ என்ற ஜயமும் எழுகிறது. மனிதனின் வழமையான இயங்குதலை, இருத்தலை தீர்மானிப்பது பாலியலா? இன்றைய சிங்கள சமூகம் பாலியலை மையப்பட்டு இயங்குகிறது என்பது இவரது குற்றச்சாட்டு. இது பௌத்த, சிங்கள சமூகத்ததை விமர்சிக்கலாம், ஆனால் இனப்பிரச்சினை கொடூரங்களுக்கான காரணிகளில் ஒன்றாக கருதமுடியாது.இறுதியாக 'இது என் நிலர்' என இராணுவவீரர் கூறும் காட்சி தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒன்ற விடவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்புகின்றது. இங்கும் யுத்தத்தின் மூலவேர் ஆராயப்படாமல் அதன் எச்ச சொச்சங்கள் விமர்சிக்கப்படுகின்றன.

இவ்வழியால் வாருங்கள் Take This Road

இந்த 11 வார தொடரை ரூபவாகினி மற்றும் சனல் ஜ தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பின. இதன் மூலம் 25 விகிதம் கிராம பார்வையாளர்களையும், 41 விகிதம் நகர பார்வையாளர்கயையும் பார்வையிட்டுள்ளனர். இது மொத்தம் 4.1 மில்லியன் மக்களாவார். இதில் தமிழ், முஸலீம் பார்வையாளர்களும் அடங்குவர். இவரது முந்தைய படங்களை தடைசெய்த அரசு, இந்த தொடரை, அதுவும் தனது அரச தொலைக்காட்சி நிறுவனம் மூலம் ஒளிபரப்பச்செய்தமை ஆச்சரியத்துக்குரியதும், சிந்திக்கவேண்டிய விடயமுமே.

A9 பாதை திறந்து விட்ட பொழுது, அவ்வழியே சுபசிங்க குடும்பமும், ஒரு முஸ்லீம் குடும்பமும், பிரயாணிக்கின்றது. சுபசிங்க குடும்பம் நாகதீபத்திற்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். சிங்கள நூல்களும், இணையத்தளங்களும் யாழ்ப்பாணம் முழுவதும் புத்தர் யாழ்ப்பாணம் வந்த பொழுது சிங்கள மக்கள் நிறைந்து வாழ்ந்தார்கள் என பிரச்காரம் செய்கின்றார்கள். கந்தரோடை, நிலாவரை, உருத்திரபுரம், வவனிக்குளம், சுன்னாகம், கொடியவத்தை, மல்லாகம், உடுவில், புலோலி போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாக கூறிய சுவடுகளை சான்றாக காட்டுகிறர்கள்.( http://easyweb.easynet.co.uk/~sydney/jaffna.htm) கி.மு 1ம் நூற்றாமாண்டு புத்தர், இலங்கைக்கு இரண்டாம் தடவை விஜயம் செய்த பொழுது நாகதீபத்திற்கும் சென்றதாக கூறப்படுகிறது. நாகதீபம், நயினாதீவில் அமைந்துள்ளது. புத்தர் சென்ற தலமாதனால் பௌத்தர்கள் இக் கோவிலுக்கு தரிசனம் செல்வது வழமை.

பயணங்களை அடிப்படையாகக்கொண்டு பல படங்கள் வெளிவந்துள்ளன. இது கதையை நகர்த்துவதற்கான பொதுவான ஓர் உத்தியாகும். இங்கும் யு9 வழியே சென்று யாழப்பாணத்தை அடைந்து, பின்னர் நாகதீபம் சென்று, மீணடும் வந்து யாழ்ப்பாணம் வந்து தங்குகின்றனர். படத்தின் பெரும்பாலன பகுதி யாழப்பாணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. நாகதீபம் செல்லும் வழியில், சுபசிங்கவின் மகள், தனது முன்னால் பல்கலைக்கழக சகாவும், இந்நாள் அரசு சார்பற்ற நிறுவன அதிகாரியை சந்திக்கின்றார். இவரின் வேண்டுக்கோளுக்கினங்க யாழ்ப்பாணத்தில் இவர்கள் வீட்டில் தங்குகின்றனர். அந்த தமிழ்க் குடும்பத்தில், அவர்களது மகன் இயக்கத்தில் இருந்து விட்டு தங்கியுள்ளார். அரசு சார்பற்ற நிறுவன அதிகாரி நாவலப்பிட்டியிலிருந்து வந்து இந்த வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார். சுபசிங்க குடும்பம் மீண்டும் கொழும்புவிற்கு செல்ல வெளிக்கிடும் பொழுது, பக்கத்து வீட்டு சிறுமி நிலக்கீழ் குண்டு வெடித்து ஓரு காலை இழந்து விடுகின்றார். இதனால் சுபசிங்கவிற்கு மாரடைப்பு வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். இதனால் இவர்கள் அதே வீட்டில் தங்குகின்றனர். ஆரம்பத்தில் இவர்களுக்கிடையிலிருந்த மனப்புகைச்சல், நம்பிக்கையின்மை பின்னர் நீங்கி விடுகின்றது.

யாழ்ப்பாணம் மீண்டும் வந்துள்ள, வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் படும் அவலங்கள் சிறப்பாக பதியப்பட்டுள்ளது. சொந்த மண்ணின்றி, அகதி முகாமிலேயே தஞ்சமாக இருக்கும் இந்த மக்கள் உண்மையில் இந்த போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள். தங்களது சொந்த வீட்டிலேயே நிலக்கீழ் குண்டுகள். இது வரை எந்த வித மீள் குடியேற்ற திட்டங்களும் இன்றி அவலப்படுகின்றார்கள்.


சுபசிங்கவும், முன்னால் சமசமாஜக் கட்சி உறுப்பினரும், முன்னால் ஆசிரியருமான குடும்பத்தலை வரும், அரசியல் பேசும் பொழுது எழும் விமர்சனங்களில் பண்டாரநாயக்கவையும், இடது சாரிகளையும் விமர்சித்தளவிற்கு, தமிழ் தேசியவாதிகளை, சிங்கள பேரினவாதிகளை விமர்சிக்கவில்லை. இந்த போரின் இன்றைய நிலை இரு இனங்களுக்குமிடையாலான புரிந்துணர்விற்கப்பால் பரந்து விரிந்துள்ளது. மக்களுக்கப்பால் இரு போர் இயந்திரங்களும், துணை இயந்திரங்களும் இயங்குகின்றன. இவை மக்கள் நலனில் அக்கறையின்றி சொந்த நலனில் அக்கறை காட்டுகின்றன. நவீன தேசியத்துக்கு, இனங்களுக்கிடையில் தொடர்ச்சியான கருத்துரையாடல்களும், புரிந்துணர்வும் அவசியம். அதனை இயக்குனர் இப்படத்தில் வலியுறுத்துகின்றார். போர் இயந்திரங்களுக்கு அப்பால் மக்கள் தனித்து இயங்குகின்றார்கள். இவர்கள் இணைவை இந்த இயந்திரங்கள் தடுக்கின்றன என்பதை பதிவாக்கியுள்ளார். போரைப்பற்றிய அறிவு சார் மதீப்பீடுகளை (Cognitive Values) இங்கு விவாதிக்கின்றார். (தர்மசேன பத்திராஜ, சொல்லாது உன்னகே என்ற படத்தில் விரிவாக சுதந்திரம் பற்றி விவாதிக்கின்றார்)
ஒரு சிங்கள படைப்பாளியாக, தனது குற்ற உணர்வின் கருத்தாக்கங்களை விசாரணைக்குட்படுத்தியுள்ளார். எதிர் முரண் பாத்திரங்களுக்கூடாக, விசாரணைகளை தொடர்கின்றார். இந்த யதார்த்த நிலை இவர்களை நேர் கோட்டில் நிறுத்துகின்றது. இவரது குற்ற உணர்வின் வெளிப்பாடாக இவர்கள் தங்கியுpருந்த வீட்டின் மகனை, இவர்களது வாகனஓட்டி தாக்க முற்படும் பொழுது, சுபசிங்கவின் மூத்த மகன் வாகனஓட்டியை அடிப்பது வெளிப்படுகின்றது. சுபசிங்கவுக்கும், குடும்பத்தலைவருக்குமான விவாதங்களில், குடும்பத்தலைவர் குரல், கருத்துக்கள் ஓங்கி இருப்பமை மற்றொரு உதாரணம். இப்படத்தின பெரும்பாலான பார்வையாளர்கள் சிங்களவர்கள். இவர்களையும் இந்த குற்ற உணர்வு தொற்ற வேண்டும் என்பதே இயக்குனரின் நோக்கம். (இந்த குற்றஉணர்வின் வெளிப்பாட்டை, இவரையும் விட சிறப்பாக பிரசன்ன விதானகே, தனது படங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.) ஆனாலும் புரிந்துணர்வில் சிங்களவர் மேலோங்கி நிற்பதாக காட்டியுள்ளார். படத்தில் வரும் அரசு சார்பற்ற அதிகாரி மலையகத்தை சோந்தவர். இவர் யாழ் வாழ் மக்களில் ஒருவரக கருதப்படுவதாக காட்டுகின்றார். இது கூட சற்று அதிகம் தான். யாழ் வாழ் சமூகம் இன்னமும் தங்களுக்கிடையில் சாதி, பிரதேச வேறு பாடுகளை முற்றாக கழைந்துவிடவில்லை.
போரில் மனித வாழ்வின் நிச்சயமற்ற தன்மை, போர் வாழ்வின் தாக்கங்கள், இழப்புக்கள், பிரிவுகள் மனிதர்களை மாற்றிவிடுகின்றது. அவர்களது அக உணர்வின் அச்சங்களையும் மீறி அறிவுசார் முடிவுகளை, மொழி, மதங்களுக்கப்பால் எடுக்கவைக்கின்றது. எனக் கூறியுள்ளார். ஆனால் இன்னமும் தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் பெரும்பாலோனோர் அறிவு சார் முடிவுகளை எடுப்பதில்லை.
ஏனைய வெகுசனத் தொடர்புசாதனங்களை விட சினிமா நவீன தேசியத்துக்கான கற்பிதங்களை மக்கள் மத்தியில் வழங்கும் வல்லமை பெற்றது. அசோக கங்கமவும், நல்ல சினிமா மொழிக’கூடாக இதனை நெறிப்படுத்தியுள்ளார். இப்படத்தில் தேசிய, குற்ற விசாரணைக்களுக்கப்பால், வழமையான பொறாமை, குறிப்பாக எதிர் பால் உறவுகளது மீதான பொறாமை, போட்டி உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
கணித உயர் பட்டதாரியும், இஙகிலாந்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவருமான அசோக கங்கம தனது கட்புலத்திற்கூடாக சிங்கள மக்களை நோக்கி விசாரணைகளை முன்வைத்துள்ளார். இது நவீன தேசியத்துக்கான ஓர் விவாதத்தை உருவாக்குமா?


தமிழ்த் தேசியத்தை பொறுத்தவரை, இன்று அதனை கேள்விகளுக்கோ, அல்லது விசாரணைகளுக்கோ இட்டு செல்ல முடியாதுள்ளது. மரணம் வரவேற்கப்படவேண்டிய் ஓர் கலை யாக, வாழ்வாக, இயல்பாக மாறப்பட்டுவிட்டது. எனவே இங்கு புதிய தேசியத்துக்கான எந்த கருத்தாடல்களையும் முன்வைக்க முடியாது. நாம் சார்ந்திருக்கும் நிலை சார்ந்து இயங்குகின்றோம்.. இது ஓர் வகையில் எமது அக உணர்வுகளின் வெளிப்பாடாகும். இதனால்தான் கொலைகளையும் எந்த வித விசாரணையும் இன்றி ஏற்றுக்கொள்கின்றோம். எமது அறிவுசார் கற்பிதங்கள் புத்தகங்களில் மாத்திரமே. திருநீறு அணிந்து, கூர்ப்பை போதித்தவர்கள் எமது ஆசிரியர்கள். சாதிகள் இல்லையடி பாப்பா எனக் கூறி சாதிக் கொலை புரிந்தவர்கள். எனவே எம்மிடம் எமது குற்றங்களுக்கான விசாரணைகளை படைப்புக்களாக எதிர்பார்க்க முடியாது.
தமிழ் தேசியம் பற்றி, இந்திய தமிழ் படைப்பாளிகளை விட, எமது படைப்பாளிகளை விட சிங்கள படைப்பாளிகளே அக்கறை காட்டியுள்ளார்கள். சர்வதேசத்துக்கு எமது நிலையை சொல்லும் வல்லமை பெற்றவை. இந்திய படைப்பாளிகளின் வியாபாரத்தன்மையே இப்படத்தை ரொரன்ரோவில் விநயோகிப்பதிலும் கையாளப்பட்டுள்ளது. ஏனோ தானோவாக, பத்தோடு, பத்தாக ரொரண்ரோ கடைகளில் விற்கப்படுகின்றன. இதனால் இப்படத்துக்கான முக்கியத்துவம் இழக்கப்படுகின்றது. கலையை வியாபாரமாக, தமது வாழ்விற்காக பயன்படுத்துவர்களின் திருவிளையாடல் இது. எது எப்படியிருப்பினும், மக்கள் மத்தியில் இப்படம் சென்றடையவேண்டும.;. இப்படத்தை 2 டொலர்களுக்கு பெரும்பாலான ரொரண்ரோ கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். மீண்டும் ஒரு தடைவ கூற வேண்டியுள்ளது ஆணி வேருக்கோ. புத்திரின் பெயரால் படத்துக்கோ இந் நிலை வராது.

Asoka Handagama
tele-dramas


Dunhinda Addara
Diyakata Pahana
Synthetic Sihina
Neganahira Weralen Asena

Movies
Thani Thatuwen Piyambanna
Me Mage Sandai
-ரதன்

என் உணர்வுகளைத் தொட்ட, தர்க்க மனத்தை விசாரித்த படம் இது. இருப்பினும் ஒருவேளை என்னுள் பதாங்கமாகவேனும் ஒதுங்கியிருக்கலாமென்றஞ்சிய முற்சாய்வைக் காரணம் காட்டி இப்படத்தைத் தமிழ்த் தேசீய அரசியலாற் காயப்படாத இளைஞர்களிடம் பார்க்கும்படி கொடுத்தேன். அவர்களது கருத்துக்கள்:

  • 'இப் படத்தைப் பிரதி செய்து இலவசமாக இலங்கை முழுவதும் விநியோகிக்க வேண்டும்.
  • இப் படத்தை இந்தியாவுக்கு அனுப்பி 'இப்படித்தான் படம் எடுக்க வேண்டும்' என்று அறிவுறுத்த வேண்டும்'

இதைவிட இப்படத்துக்கு வேறெந்த விமர்சனம் வேண்டும்.

-சிவதாசன்