செவ்வாய், 5 ஜூலை, 2011

கனடா நாள்

இன்று யூலை மாதம் முதலாவது நாள்.

இன் நாளை கனடாவின் தேசீய நாளாகக் கொண்டாடுகிறார்கள். யூலை 1, 1867 ம் ஆண்டு வட அமெரிக்காவிலுள்ள பிரித்தானிய காலனிகளை ஒன்றிணைத்து 'கனடா' நாட்டை உருவாக்கிய நாள் இது. 1980 வரையில் தலைநகர் ஒட்டாவாவில் மட்டுமே கொண்டாடப் பட்டு வந்த இந்நாள் இப்போது சகல மாகாணங்களிலும் அரச செலவில் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. கனடா முழுவதும் இன்று அரச விடுமுறை நாளாகும்.

1983 இல் நான் கனடா வந்த பொழுது கியூபெக் மாகாணத்திலுள்ள மொன்றியால் நகரில் வசித்தேன். பிரித்தானிய - பிரெஞ்சு மொழி பேசும் மக்களிடையே இயல்பாகக் காணப்பட்ட பகைமை காரணமாகவும் பிரித்தானிய - வட அமெரிக்க சட்டத்தை எதிர்க்கும் தேவையை முன்னிட்டும் கியூபெக் மக்கள் கனடா தினத்தைக் கொண்டாடாது தமது தேசீய தினமாக ஜூன் 24 ம் திகதியைக் (St.Jean the Baptist Day)கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள் கியூபெக் மக்களுக்கு விடுமுறை நாளாகும்.

கியூபெக் மாகாணத்தில் கனடா தினம் விமரிசையாகக் கொண்டாடப் படுவதில்லை என்பதைக் கண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த (சுதேசியர் அல்ல) ஒருவரே அங்கு ஒரு சிலரது உதவியுடன் கனடா தின ஊர்வலத்தை ஆரம்பித்தார். ஓரிரு வருடங்களில் அவர் மறக்கப்பட்டு டாம்பீகமாக் அரச செலவில் இத் தினம் கியூபெக்கில் தொடர்ந்தும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல்கலாச்சார நாடான கனடாவில் எல்லா இனங்களையும் ஒன்றிணைக்கும் தினமாக இருப்பது மட்டும் அதன் விசேஷம் அல்ல. இந்நாள் ஒரு குறிப்பிட்ட குழுமத்தின் இன, மத, மொழி அடையாளங்களை முன்நிறுத்திய நாளாக அமையாததே அதன் சிறப்புக்கும் பெருமைக்கும் காரணம்.

'ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே' என்ற வரிகளின் அர்த்தம் எமது சந்ததிகளுக்கு உண்மையான ஆனந்தத்தை இனிமேல்தான் அளிக்கும்.







Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

கருத்துகள் இல்லை: