செவ்வாய், 5 ஜூலை, 2011

ஆடலுடன் பாடலைக் கேட்டு....

தமிழ் நாட்டில் 'மணிக்கொடி' க் காலம் என்பது எவ்வளவு முக்கியமாகக் கருதப்படக் கூடியதோ அவ்வளவு முக்கியம் வாய்ந்ததாகக் கனடாவில் - அல்லது புலம் பெயர்ந்த தமிழுலகில் - கருதப்படக் கூடியது 'தாயகக்' காலம்.

1980 களின் பிற்பகுதியில் ஜோர்ஜ் குருச்சேவ் ஐ ஆசிரியராகக் கொண்டு வாரந்தரியாகத் தொடர்ந்து ஒரு தசாப்த காலம் வெளிவந்தது இப் பத்திரிகை / சஞ்சிகை.

இச்ச சஞ்சிகையில் 'ஆடலுடன் பாடலைக் கேட்டு...' என்ற பத்தியைத் தொடர்ந்து எழுதி வந்தவர் பல் கலை வித்தகர் (கொடுக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட பட்டமல்ல) நண்பர் ஆனந்த பிரசாத். முறைப்படி கர்நாடக இசையையும், வாத்தியக் கருவிகளின் பயிற்சியையும் பெற்ற அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞரும் கூட.

திடீரென்று அவரைப் பற்றி எழுத அப்படி ஒரு முக்கியமான நிகழ்வுகளும் நடைபெற்று விடவில்லை. எஸ்.பொ. வின் புத்தகம் ஒன்றைத் தேடும் போது தற்செயலாக ஆனந்த் பிரசாத் எழுதி 1992 ல் 'காலம்' வெளியீடாக வெளி வந்த 'ஒரு சுய தரிசனம்' என்ற கவிதை நூல் தட்டுப்பட்டது. ஆர்வத்தோடு அதைப் பிரித்த போது அதன் மூன்றாவது பக்கத்தில் அவரது சமர்ப்பண வரிகள் இப்படி இருந்தன.

"அதிர்ஷ்டங்கள் வந்து நான்
அறியாமைக்குள் அமிழ்ந்து போகாது
என்னைத் தடுத்தாட் கொண்ட
துரதிர்ஷ்டங்களுக்கு"

வாசித்ததும் சிரிப்புத் தாங்க முடியவில்லை.

பிரசாத் ஒரு அற்புதமான பிறவி. அவர் பேசினாலும் எழுதினாலும் - 'தாயக' மொழியில் சொன்னால் - பிடித்தாழ்வார் அல்லது கடித்தாழ்வார். வண்ண மலர்களின் வசியப்பட்டு வண்டுகள் சிறைப் பட்டது போல் இந்த நான்கு வரிகளும் அவரது கவிதைகளை மீண்டும் ஒரு தடவை வாசிக்கச் செய்து விட்டது.

அது நிச்சயமாக ஒரு ஆனந்தமான அனுபவம் தான்...


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

கருத்துகள் இல்லை: