ஞாயிறு, 1 ஜூலை, 2007

வன்னியின் செல்வன் - அத்தியாயம் இரண்டு

வன்னியின் செல்வன்


இரண்டாவது அத்தியாயம்


மங்களரின் கனவு


ஏற்கனவே அமளி துமளிப்பட்டுக் கொண்டிருந்த ரோஹண நாடடின் ஆட்சிக்கு சோதிடர்களின் கூற்றுப்படி பல துர்நிமித்தங்கள் தோன்றின. எங்கே தூமகேது தோன்றப்போகிறதோ என்று மக்கள் துயரப்பட்டுக் கொண்டார்கள். நாளுக்கு நாள் பண்டங்களின் விலை அதிகரித்தது. அரச தானியச்சாலை விரைவில் காலியாகிவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது என்று களஞ்சிய அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.


நாட்டின் நிலைமை மன்னர் மகிந்தருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. சோதிடர்களின் வாக்கு பலித்துவிடுமோ தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று மகிந்தர் நாளொரு குப்பியும் பொழுதொரு தொப்பியுமாக அரண்மனையிலேயே மறைந்து வாழ நேரிட்டது.


இந்த வேளையில் அரசரின் சகோதரரும் அந்தரங்க ஆலோசகருமான பசிலர் செய்தியொன்றைக் கொண்டோடி வந்தார். முன்னாள் அமைச்சரும் மகிந்தரின் பல அரசியற் களப் போர்களை முன்னின்று நடத்தி வெற்றிவாகைகளைச் சூடக் காரணமானவருமான மங்கள சமரவீரர் அரசருக்கு எதிராகச் சதியொன்றை மேற்கொள்ளுகிறார் என்பதே அச் செய்தி.
தன்னை எந்த உலக மகா சக்திகளாலும் அசைக்க முடியாதென்று இறுமாப்பிலிருந்துவந்த மகிந்தர் ஒரு கணம் ஆடிப்போய்விட்டார். என்ன இருந்தாலும் நாயக்கர் வம்சத்தின் அழுங்குப்பிடியிலிருந்து நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி மகாராணி சந்திரிகையை நாட்டை விட்டே துரத்துவதற்கு உதவி செய்த மங்களரர் இப்படியாகுவார் என்று எதிர்பார்க்கவில்லைத்தான்.


‘எத்தனை பேருக்கு வெகுமதிகளை அள்ளி இறைத்தேனே! உலகத்திலேயே தேவைக்குமதிகமான அமைச்சர்களை நியமித்து அத்தனை பேருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பல்லக்கு தேர் குதிரை யானை என்று அள்ளி அள்ளிக் கொடுத்தேனே! கஜானா காலியாகிய போதெல்லாம் புத்தம் புதிதாக பணத்தை அச்சடித்து அபிஷேகம் செய்தேனே! தூரதேச யாத்திரைகள் போகும்போதெல்லாம் நூற்றுக்கணக்கில் அமைச்சர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கொண்டு திரிந்து இறக்கைக்குள் வைத்துப் பராமரித்தேனே! இப்படியாகி விட்டதே’

இப்படியாக மகிந்தர் தலையிலடித்துப் புலம்பினார்.


இந்த நேரம் பார்த்து அமைச்சர் பர்னாந்துப்பிள்ளை உள்ளே வந்தார். அவர் மன்னர் மகிந்தருக்கு மிக நெருக்கமானவர். தமிழ் சிங்களவர் ஓருடலும் ஈருயிருமாக வாழ வேண்டுமென்பதற்கு உதாரணமாக வாழ்பவர் அமைச்சர் பர்ணாந்துப்பிள்ளை அவர்கள். மன்னரின் சிவப்பு உத்தரீயத்தின் தலைப்பால் ஏற்கனவே சிவந்து போயிருந்த கண்களைத் துடைத்துவிட்டுக் கொண்டே அமைச்சர் சொன்னார்:


“மன்னாதி மன்னா. இந்த மங்களரின் சதி பற்றி நீங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள். உங்கள் ஆடசியில் தமிழ் மக்களைத் தவிர எந்த ஒரு உயிரையும் நீங்கள் புண்படுத்தியதில்லை. மக்கள் உங்கள் பக்கமிருக்கிறார்கள். புத்த சங்கங்கள் இரண்டும் உங்கள் பக்கம். போதாதற்கு தமிழர் பக்கத்திலிருந்து பல சிற்றரசர்கள் உங்கள் கால்களையே தினம் கழுவிக்கொண்டிருக்கிறார்கள். சிங்கள இனத்துக்கே பெயரையும் புகழையும் பெற்றுத்தந்த கெமுனு மன்னரின் மறு பிறப்பே நீங்கள்தான் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்”


“உண்மையாகவா அமைச்சரே..?”


“ஆமாம் மன்னா! இரண்டாம் கெமுனு என்ற பட்டத்தைச் சூட்டிக் கொள்வதற்கு நீங்கள் தகுதியுடையவர்தான். எல்லாள அரசனின் மறுபிறப்பென்று மக்கள் அழைக்கும் கரிகாலனின் ஆட்சியிலிருந்து கிழக்கு மண்டலத்தை விடுவித்த பெருமை உங்களைத்தானே சேரும்”


“ஆமாம் அமைச்சரே… கொஞ்சம் பொறுங்கள். யாரங்கே அந்தக் குப்பிக்காரனை அழைத்துவரச் சொல்…. கலப்பதற்கு என்ன வேண்டும் அமைச்சரே."

" ஜலமே போதும் மஹாவலியிலிருந்தல்லவா வருகிறது..”


மன்னர் மகிந்தருடைய கோபத்தை எப்படி அடக்கலாமென்ற ரகசியம் அமைச்சர் பர்ணாந்துவிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இருவரும் களிப்போடு ஏனைய அரச கருமங்களைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள்.


“அமைச்சரே இந்த மங்களருக்கு நாம் என்ன குறை வைத்தோம். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? . உண்மையில் அவர் இல்லாவிட்டால் நாம் ஆட்சி அமைத்திருப்பதே சிரமம். சிற்றரசர் சோமவன்சர் போன்றவர்கள் கிளர்ச்சி செய்தபோது அவரோடு சமரசம் செய்து கிளர்ச்சியைக் கட்டுப்படுத்தியவர் இந்த மங்களர். இப்போது அந்த கபடர் சூரியாராய்ச்சியாரோடு சேர்ந்து எனக்கெதிராகச் சதி செய்கிறார். என் சகோதரர் கோதபாயரிடம் சொன்னால் ஒரே நாளில் இருவரையும் வெண் புரவிகளிற் கொண்டுபோய்த் துவம்சம் செய்துவிட முடியும். ஆனால்….” மஹிந்தர் மீசையை முறுக்கினார்.


“அரசே எனக்கு ஒரு சந்தேகம் தோன்றுகிறது. மங்களரின் சதியின் பின்னால் வலுவான அந்நிய தேசங்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர்கள் எல்லோருடைய நோக்கமும் கரிகாலனை ஒழித்துக்கட்டவேண்டுமென்பதே. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட சோழ சாம்ராஜ்யத்தை மீண்டும் நிறுவும் வல்லமை இந்த கரிகாலனுக்கேயுண்டு என்று ஈரேழுலகமும் நம்புகிறது. கரிகாலனால் எங்கே தமது நாடுகளுக்கே ஆபத்து வந்துவிடுமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். எந்தவித வெளிநாடுகளின் உதவிகளுமில்லாமலே பாரிய படைக்கலங்களைச் சோழர் படை தாமாகவே உருவாக்குகிறதென்ற விடயம் வெளிநாடுகளுக்குத் தெரிந்ததிலிருந்து அவர்கள் எச்சரிக்கையடைந்திருக்கிறார்கள்.”


“அதற்கும் மங்களரின் சதிக்கும் என்ன சம்பந்தம்.?”


“கரிகாலனை ஒழித்துக்கட்டும் வல்லமை உங்களுக்கு இல்லை என்று அயற்தேசங்கள் கருதுகின்றன. அத்துடன் சமீபத்தில் நீங்கள் பல வெண் புரவிகளை அரேபியாவிலிருந்து இறக்கியது அமைச்சர் கோதபாயரின் வேண்டுகோளுக்கிணங்கவே என்றும் அவை தருவிக்கப்பட்டதன் பின்னர் தலைநகரில் மட்டும் சென்ற மாதத்தில் 125 தமிழர்கள் வெண்புரவியிற் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள் என்றும் வெளிநாட்டு பிரதானிகள் கருதுகிறார்கள். இக்காரணங்களுக்காக உங்களை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு மங்களரை ஆட்சியிலமர்த்தும் நோக்கம் அயற் தேசங்களுக்கு உண்டு என்று நமது ஒற்றர்கள் அறிந்து வந்திருக்கிறார்கள். அத்தோடு தலைநகரில் தங்கியிருந்த பல அப்பாவித் தமிழர்களைப் பலவந்தமாக இரவோடு இரவாக வெள்ளைத் தேர்களில் ஏற்றி நகரின் எல்லைகளிற் கொண்டுபோய்விட்ட சம்பவம் அயற் தேசங்களை உலுப்பியிருக்கிறது.”


“அப்படியா..? அதற்கு மாற்று வழியாக என்ன செய்யலாம்?

மஹிந்தர் கேட்டார்.அப்போது வாயிற்காவலன் வந்து பணிவாகக் கூறினான்:


“அரசே வாயிலில் அமைச்சர் தேவானந்தர் நிற்கிறார். உங்களை அவசரம் பார்க்க வேண்டுமாம்”


“வரச்சொல். அமைச்சரே உங்களுக்கு ஒரு ஆடசேபணையும் இல்லையே. நீங்கள் இருவரும் ஒரு வழியில் தமிழர்கள் தானே. எங்கே நாயும் பூனையுமாக…”

"இல்லை. எனக்கும் தேவானந்தருக்கும் எதுவித பிரச்சினையும் கிலையாது. தாராளமாகப் பேசுங்கள்"


அமைச்சர் தேவானந்தர் பளிச்சென்ற வெண்ணாடை தரித்து நிதானமாக வந்தார்.


வணக்கம் மன்னர் பெருமானே!


“என்ன விடயம் அமைச்சரே? சிற்றரசர்கள் கருணாகரர் பிள்ளையார் ஆகியோருடைய பிணக்குகளைத் தீர்த்துவைக்க ஏதாவது முயற்சி எடுத்தீர்களா? இப்போதே தீர்க்காவிட்டால் பிள்ளையாரைத் தம்பக்கம் இழுத்துவிடக் கரிகாலன் முயற்சிக்கலாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்”


“ஆம் மன்னரே. மண்டலக்காரர்களை இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறு பணித்திருக்கிறேன்”


“அது சரி… வந்த விடயம்?


“தலை நகரிலிருந்து 300 தமிழர்களை உங்கள் சகோதரர் பலவந்தமாக வெண் தேர்களில் ஏற்றி நகரின் எல்லைகளுக்கு அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்டேன்”


“அதற்கு என்ன இப்போது. பிற தேசங்கள் எங்களைக் கடிந்து கொண்டனதான். இருந்தாலும் பாரதூரமாகக் கண்டிக்கவில்லை. ‘கவலை தெரிவிக்கிறோமென்று’ சிரித்துக்கொண்டுதான் கூறினார்கள். இருந்தாலும் அதை நிறுத்தி தமிழர்களிடம் மன்னிப்புக் கோரும்படி கோரினார்கள். நானாவது மன்னிப்பு அதுவும் தமிழரிடம் கேட்பதாவது. எனக்காக முதலமைச்சர் இரத்தினநாயக்கருக்கு தமிழரிடம் மன்னிப்புக் கோரும்படி உத்தரவிட்டிருக்கிறேன்.


“தமிழரைப் பலவந்தமாக அனுப்பியது பிழையானது. அப்படித் தொடர்ந்தும் செய்திருந்தால் நாமே நமது அன்பிற்குரிய தாய்நாட்டைப் பிரித்துக் கொடுத்தவர்களாக வரலாற்றில் பார்க்கப்படுவோம்.” அமைச்சர் தேவானந்தர் பணிவோடு கூறினார்.


“உண்மைதான் அமைச்சரே. எனது தம்பி கோதபாயரை உங்களுக்குத் தெரியும்தானே. கொஞசம் முற்கோபக்காரன். அவன் அவ்வளவாகக் கல்வி கற்றதில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும். தமிழரின் கொலை முயற்சியிலிருந்து தப்பியவனுக்கு கொஞசம் கோபம் அதிகம் தான்….அது சரி அமைச்சர் மங்களர் எமது ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறாராமே. அமைச்சர் பர்ணாந்து சொல்கிறார்…”


“கேள்விப்பட்டேன் மன்னா. அது நடக்கவல்ல காரியமல்ல. மங்களர் தனது நண்பரும் சிற்றரரசருமான சோமவன்சரினதும் முன்னாள் முதலமைச்சரான விக்கிரமசிங்கருடனும் கூட்டுச்சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றலாமென்று கனவு காண்கின்றார். சோமவன்சருடைய படைபலமும் விக்கிரமசிங்கருடைய படைபலமும் ஒன்று சேர்ந்தாலும் எங்களது பலத்தை மீற முடியாது. அப்படியானாலும் அதற்கு முன்னராக நாம் இன்னுமொரு சதியொன்றை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களுடைய சதியை இலகுவாக முறியடிக்கலாம்.”


“எப்படி எப்படி… சொல்லுங்கள் அமைச்சரே. இதற்காகத்தானே சிங்கள அரசுகள் எப்போதும் தமிழமைச்சர்களை ஆலோசகர்களாக வைத்திருப்பது….”


“மன்னா! ஒரு நாட்டில் ஆட்சி ஈடாட்டம் காணும்போது அது அயல் நாடுகளின் மீது படையெடுப்பைச் செய்ய வேண்டும். தேசீயத்துக்கு அச்சுறுத்தல் வரும்போது மக்கள் ஒரு கொடியின் கீழ் அணிதிரள்வார்கள். உங்களுக்கு மக்கள் ஆதரவு அலையலையாக வந்துகொண்டே இருக்கும். எனவே இப்போ உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது மக்களுக்கு கிராமங்கள் பட்டி தொட்டிகள் எங்கும் பறையடித்துச் சேதியனுப்ப வேண்டியது. தேசீயத்துக்கு அச்சுறுத்தல் என்றால் மக்கள் பொங்கியெழுவார்கள். அத்தோடு கிழக்கு மண்டலத்தை விடடுவித்ததும் நாடு தழுவிய ரீதியில் வெற்றிக் களியாட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். ”


“நல்லது அமைச்சரே. சரியான தருணத்தில் வந்து உங்கள் மதியூகத்தால் எங்கள் நாட்டைக் காப்பாற்றியமைக்கு நான் என்றென்றும் நன்றியுடையவனாயிருப்பேன். இன்னும் சில நாட்களில் கரிகாலனைத் தோற்கடித்து ஈழம் முழுவதையும் வெற்றிகொண்டவுடன் கிழக்கு மண்டலத்தைக் கருணருக்கும் வடக்கு மண்டலத்தை உங்களுக்கும் பாத்தியதையாக எழுதிக்கொடுப்பேன் என்று இப்போதே உறுதி மொழி தருகிறேன்”

மன்னர் மகிந்தர் பறையடித்துப் பிரசித்தம் செய்வோருக்குப் பின்வருமாறு ஓலையை எழுதி அனுப்பினார்.


‘மக்களே எங்கள் சிங்கள தேசத்துக்கும், புத்த சமயத்துக்கும் எங்கள் மத்தியிலிருக்கும் புல்லுருவிகளின் ஆதரவுடன் பிற தேசத்தாரினால் ஆபத்து விளையக் காத்திருக்கின்றது என்று நமது ஒற்றர் படை தகவல் கொண்டு வந்திருக்கிறது. எனவே மக்கள் விழிப்போடு இருந்து எமது தேசத்துக்கு அச்சுறுத்தல் தருபவர்களைக் காட்டிக் கொடுத்து நாட்டை வரப்போகும் ஆபத்திலிருந்தும் காப்பாற்றும்படி இத்தால் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு இரண்டாம் கெமுனு உங்கள் மகிந்த மகாராஜா’


அப்போது அவசரம் அவசரமாக கோதபாயர் அரண்மனைக்குள் நுழைந்தார். சாதாரணமாகவே கடு கடுவென்றிருக்கும் அவர் முகத்தில் இன்னும் ஆயிரம் முகங்கள் முளைத்திருந்தன.


“அண்ணா.. எமது நாட்டுக்கு அச்சுறுத்தல் வந்திருக்கிறது. ஒரு பக்கம் தமிழர். மற்றப்பக்கம்….” மேலும் சொல்வதை நிறுத்திக் கொண்டு கோதபாயர் இரு அமைச்சர்களையும் மகிந்தரையும் மாறி மாறிப் பார்த்தார்.


“எனதருமைத் தம்பியே சொல். உன்னைக் கொலை செய்ய முயற்சித்தபோது ஓடோடி வந்து கட்டிப் பிடித்து முத்தமிட்டேனே.. ஞாபகமிருக்கிதாடா என் தம்பியே. நீ சின்னவனாயிருந்தபோது….”


“போதும் நிறுத்து. அண்ணா…தெற்குக் கடலில் பிரமாண்டமான கப்பல் ஒன்று நங்கூரமிட்டிருக்கிறதாமே. அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?


“தெரியாதடா தம்பி. எனக்கு எதுவுமே தெரியாது.”


“தெரியாதே.. தெரிந்தே இருக்காதே.. உங்கள் நட்பான அயற் தேசம் இந்துஸ்தானம் இது பற்றிச் சொல்லியிருக்காதே…இந்த நண்பர்களும்கூடச் சொல்லியிருக்க மாட்டார்களே..?”


“உனக்கெப்படியாடா தம்பி இதுபற்றித் தெரிந்தது”


“சீனத்து பிரதானி தகவல் அனுப்பியிருந்தார். தமிழருக்கு உதவி புரிவதற்காக வந்திருக்கலாமாம். எதற்கும் விசாரியுங்கள்…”

அப்போது அரண்மனையின் மந்திராலோசனைக் கூடத்திலிருந்து யாரோ வலியினால் முனகும் சத்தம் கேட்டது. ஒருவர் தள்ளாடிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்.

"அண்ணா சமலரே. என்ன கோலமிது? உங்களுக்கு என்ன நடந்தது? "

மன்னர் மஹிந்தரும் அமைச்சர்களும் ஓடிப்போய் அமைச்சர் சமலரைக் கைத்தாங்கலாக அழைத்துவந்து இருக்கையில் அமர்த்தினர்.

"எனதருமைத் தம்பிகளே! தம்பி பசிலரின் ஆலோசனைப்படி நாட்டில் பரிபாலனம் எப்படியிருக்கிறது என்று பார்த்துவரலாம் என்று மாலை நகர் வலம் போனேனா. மக்கள் கற்களால் எறிந்தும் அடித்தும் துரத்தியும் விட்டார்கள். அவர்கள் மிகவும் கோபமாய் இருக்கிறார்கள். நீங்கள் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்"

அப்போது அமைச்சர் தேவானந்தர் அருகே வந்து மெதுவான குரலில் ஏதோ கூறினார். மன்னர் மஹிந்தரின் முகம் மலர்ந்தது.

தொடரும்.





கருத்துகள் இல்லை: