வெள்ளி, 1 ஜூலை, 2016

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
செவ்வாற்றுக் கடமை

சென்ற வாரம் செவ்வாற்றில் இரண்டு திருவிழாக்கள் கொடியேறின.

நான் சொல்வது இசுக்காப்ரோவின் ரூஜ் றிவர் பகுதியை. (பிரஞ்சு மொழியில் ரூஜ்=சிவப்பு).

செவ்வாறு தமிழ்க் கனடியர்களின் தலைநகரம் என்பதில் சந்தேகமில்லை. கனடாவின் மூன்று நிலை அரசியல் கட்சிகளும் , வாதிகளும்  இதைத் தெரிந்தும் புரிந்தும் வைத்திருக்கின்றன என்று தான் -உங்களைப் போல - நானும் நம்ப விரும்புகிறேன்.

அதிகம் அரசியல் மயப்படுத்தப்பட்ட தமிழர்கள் வாழும் இடம் செவ்வாறு என்பதால் நடந்த திருவிழாக்கள் பற்றிய விவரணம் தேவையில்லை. எல்லாமே எப்போதோ -திட்டமிட்டப்டி - முடிந்த காரியம்.

இது தமிழர்களின் வாழிடம். தமிழரே வெற்றியைத் தீர்மானிப்பவர்கள் என்பது உண்மையாகிய பின் கட்சிக்கா அல்லது வேட்பாளருக்கா வாக்களிப்பது  என்ற விவாதம் - தர்க்க ரீதியாக இருப்பினும் - எடுபடாது.

இந்த அனுமானத்தில் மூன்று பிரதான கட்சிகளும் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தலாமென்றும் போட்டி வரின் ஜனநாயக முறையில் கட்சியின் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது, தலைவர்களாலும் அறிவிக்கப்பட்டது. இங்கு தலைவர்கள் என்பது கட்டாயமாகக் கட்சித் தலைவர்களைக் குறிக்கவேண்டுமென்பதில்லை.

முந்நாட்களில் இந்த ஜனநாயக நடைமுறை பல தடவைகள் கட்சித் தலைமைகளால் எகத்தாளமாக மீறப்பட்ட வரலாறு உண்டு. உழைப்பாளிகளின் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியும் இந்த ஜனநாயக மீறலைச் செய்தது.

இந்தத் தடவை முற்போக்கு பழமைவாதக் கட்சி ஜனநாயக மீறலைச் செய்துவிட்டது என அக்கட்சி வேட்பாளராக முனைந்து ஏமாற்றமடைந்த தமிழர் தியோ அன்ரனியும் இதர பல தமிழர்களும் குமுறுகிறார்கள். அவர்களின் குமுறல் நியாயமானதா என்பது பற்றி முகநூல் மற்றும் ஊடகத் தெருக்களில் பக்கவாட்டுத் திருவிழாக்கள்  பல நடைபெறுகின்றன.

முற்போக்கு பழமைவாதக் கட்சியிந் தலைவர் பற்றிக் பிறவுண் மீது எனக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. அதி பழமைவாத புற எல்லையிலிருந்த துருப்பிடித்த கட்சிக்கு ஓரளவு முற்போக்கு முகம் கொடுத்தவர் பிறவுண். அவருடைய தந்தையார் ஒரு புதிய ஜனநாயகக் கட்சிக்காரர் என்பதால் அவர் மீது கொஞ்சமாவது  முற்போக்குத் தூசி படிந்திருக்கும். அதையும் விட ஒரு துடி துடிப்பான செயல் வீரர். மெருகு படுத்தப்பட்ட மேற்தட்டு பழமைவாதம் அவரிடம் இல்லை. பலத்த எதிர்பார்ப்புகளையும் முறியடித்து அவரைத் தலைவராக்கியதில் தமிழருக்குப் பெரும் பங்குண்டு என்பதை உணர்ந்தவர், அடிக்கடி பிரதான மேடைகளிலும் சொல்லிக காட்டுபவர்.

இந்த தடவை அவரது கட்சி வேட்பாளர் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்படுவார் என  அவர் அறிவித்தவர் என்ற விடயம் முறையீட்டாளர்களால் மீண்டும் மீண்டும் முழங்கப் படுகிறது.

செவ்வாற்று வேட்பாளர் தெரிவில் அவர் தடுக்கி விட்டார் என்பவர்களும் தடுக்கி விழுத்தப்பட்டார் என்பவர்களும், கட்சித் தலைவர் கட்சிக்கு எது தேவையோ அதைச் செய்திருக்கிறார் என்பவர்களுமாகத் தமிழர் பிரிந்தே போய்விட்டார்கள்.

அவரது தெரிவு - கட்சியி தெரிவு - றேமண்ட் சோ. றேமண்ட் சோ தமிழருக்குப் புதியவர் அல்ன்லர். ஆனால் தமிழரல்லர். ஆயிரத்துக்குமதிகமான வாக்குகளைத் தயார் செய்துகொண்டு போட்டிக்காக ஜனநாயகக் களத்தில் இறங்கி நின்ற தமிழரைப் புறம் தள்ளி  விட்டு றேமண்ட் சோ களமிறக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நடைமுறை தவறு எந்று குரலெழுப்புபவர்கள் பலர். அது தமிழர் ஒதுக்கப்பட்டார் என்பதற்காகவா அல்லது ஜனநாயகம் ஒதுக்கப்பட்டது என்பதற்காகவா எந்பது குறித்த விவாதம் இரண்டாம் பட்சம்.

வேட்பாளர் தெரிவில் கட்சித் தலைமைகள் தலையிடக்கூடாது என்பதுவே எனது வாதம்.

இந்தத் தடவை லிபரல்களின் கோட்டையான ரூஜ் றிவரை நீலமாக மாற்றிவிட வேண்டுமென்பதுதான் கட்சியினதும் தலைவரினதும் நோக்கம் என்றும் அந்த வெற்றியைத் தேடித் தர வல்லவர் றேமண்ட் சோ மட்டுமே என்றும் கட்சித் தமிழர்கள் அடம் பிடிக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் றேமண்ட் சோ வெற்றி பெறின் மானில அரசில் ஒரு தமிழரை அமர்த்தும் வாய்ப்பை வலுக்கட்டாயமாகப் பறித்த குற்றம் கட்சிக்கும், தலைமைக்கும், கட்சித் தமிழருக்கும் சாரும்.

பழமைவாதக் கட்சி தமிழரிடம் வேரூன்றுவதற்கு நிறைய வருடங்கள் பிடித்தது. பல தமிழர்களின் உழைப்பின் பெறுபேறு அது.

தியோ அன்ரனி விடயத்தில் கட்சி இழைத்தது தவறு என நம்பும் தமிழர்கள் - தியோ அன்ரனியை வெறுப்பவர்கள் கூட - அதிகம். கட்சியும், அதன் நம்பிக்கை நாயகனான பற்றிக் பிறவுணும் தமிழருக்குத் துரோகம் செய்துவிட்டதாகவே அவர்கள் பார்க்கிறார்கள்.

இந்தத் தடவை றேமண்ட் சோ வென்றாலும் சரி தோற்றாலும் சரி தமிழர்களின் வெஞ்சினத்திலிருந்து கட்சி விடுபட பல ஆண்டுகள் பிடிக்கலாம்.

இது ஒரு இடைத் தேர்தல் மட்டுமே. இதில் கட்சி ஒரு தமிழரை நிறுத்தி அவர் தோற்றிருந்தாலும் கட்சிக்கும் தலைவருக்கும் அது வெற்றியே தான்.

தமிழருக்கு சந்தர்ப்பம் கொடுத்த நன்றிக்காக அடுத்த மானிலப் பொதுத் தேர்தலில் தமிழர்கள்  பழமைவாதக் கட்சிக்கு - இதர தொகுதிகளிலும் வாக்களிக்க முன்வருவார்கள்.

இந்த தடவை றேமண்ட் சோ வைச் சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்பதால் தொகுதிக்கோ அல்லது பழமைவாதக் கட்சிக்கோ எந்தவித பலனுமில்லை.

றேமண்ட் சோவின் தெரிவில் கட்சி எடுத்த முடிவு சரியானது என வாதிடும் கட்சித் தொண்டர்களும் முன்னாள் வேட்பாளர்களும் (தமிழர்களை மட்டுமே சொல்கிறேன்) தேவை கருதிய ஒத்தோடல் வகையறாக்களே.

அடுத்த தேர்தலில் இந்தத் தொகுதியிலோ அல்லது வேறெந்தவொரு தொகுதியிலோ வேட்பாளர் தெரிவின்றி ஒரு தமிழரல்லாதார் களமிறக்கப்படும் போது அதில் போட்டியிடும் தமிழரில் ஒருவராக இத் தொண்டர்களில் ஒருவர் இருக்க நேரிடலாம். யார் கண்டது.

இந்த வேட்பாளர் தெரிவுகளின் பின்னணியில் இருக்கும் பரிந்துரைகள், கை முறுக்கல்கள், முதுகு சொறிதல்கள் போன்ற இன்னோரன்ன நடவடிக்கைகள் புதியனவையோ அல்லது தமிழரிடம் மட்டுமே உள்ள குணாதிசயங்களோ அல்ல.

செவ்வாற்றுக்கு ஒரு வரலாறுண்டு. தமிழர்களின் வாக்குப் பலத்தை உலகெங்கும் பறை சாற்றிய பலமும் அதற்குண்டு.

வாய்ப்பைக் கொடுக்காது வாக்கைப் பெற நினைப்பதை (நந்றி: வாசு சங்கரப்பிள்ளை) அது மன்னிக்காது.

செவ்வாறு தமிழர் குடிசையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். நொந்துபோயிருக்கும் ஈழ வடுக்களுக்கு அதுதான் மாளிகை.

சிவதாசன் ஜூன் 2016




*********
கூட்டுக் கட்டுரை

என்னைக் கேட்டால் - பழமைவாதக் கட்சி தவறிழைத்திருக்கிறது. இதனா ல் அவர்கள் தமிழரின்  பெருங் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதன் விளைவுகள் இந்த இடைத் தேர்தலையும் தாண்டி பல தமிழர் வாழும் பகுதிகளிலும் பாதிப்புகளை உருவாக்க வாய்ப்புண்டு.

றேமண்ட் சோ இந்தத் தேர்தலில் தெரிவானால் ஒரு தமிழர் மானில அங்கத்தவாரக வரும் சந்தர்ப்பம் பறிக்கப்பட்டு விடும் எந்ற ஒருவித கசப்பான உணர்வு மக்கள் மத்தியில் வேரூன்றிவிடும்.

றேமண்ட் சோ வேட்பாளாராக வேண்டுமென்ற எண்ணத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தால் அது கட்சியின்  தந்திரம். தியோ அன்ரனி வேட்பாளராகக் கூடாது என்பதற்காக முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அது தமிழரின்  மந்திரம்.

இது அரசியல்
நமக்கேன் வம்பு?




கருத்துகள் இல்லை: