வெள்ளி, 1 ஜூலை, 2016

ஷான் & ஜயா சந்திரசேகர் கலைக் குடும்பம்






இன்று ஒரு மகத்தான நாள். தற்செயலாக மார்க்கம் நகரிலுள்ள ATN கலையகத்துக்குப் போகக் கிடைத்தது. அதன் உரிமையாளர் ஷான் எனக்கும் என்னுடன் வந்த இரு நண்பர்களுக்கும் (குலா செல்வத்துரை, சிறிதரேன் துரைராஜா) தன் கலையகம் முழுவதையும் நேரில் அழைத்துச் சென்றுகாட்டினார். வட அமெரிக்காவிலேயே குறிப்பிட்டுச் சொல்லத்தக்க புதிய தொழில்னுட்பங்களை உள்வாங்கிய futuristic வடிவமைப்பு. ஏறத்தாழ 140 பேர் பணி புரிகிறார்கள்.

ஷான் சந்திரசேகரும் அவரது மனைவி ஜயா சந்திரசேகரும் ஒரு சிறிய எடிட்டிங் அறையினுள் பணியாளருக்கு அருகிலிருந்து சிறு திரையொன்றைக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தார்கள். கண்ணாடிச் சுவருக்குள்ளால் எங்களைக் கண்டதும் எழுந்து வந்து வணக்கம் சொல்லி வரவேற்று (நான் முன்னர் ஒருபோதும் அவரிடம் பேசியிருந்ததில்லை ஆனால் என்னுடன் வந்த குலா செல்லத்துரையை அவருக்குத் தெரியும்) உள்ளே அழைத்தார். மனைவியாரும் எழுந்து நின்று கரம் கூப்பி வணக்கம் சொன்னார்.

நாங்கள் நிகழ்ச்சியொன்றின் ஒளிப்பதிவிற்காக அவசரமாகச் சென்று கொண்டிருந்தோம். அதுவும் அவருக்குத் தெரியும். அப்படியிருந்தும் நீங்கள் அவசியம் இந்த ஒளிப்பதிவைப் பார்த்தேயாக வேண்டும். இது வேறெங்கும் கிடைக்காத பதிவு என்றார்.

சின்னதொரு எடிட்டிங் திரையொன்றில் சிவாஜி கணேசன் படப்பிடிப்பு ஒன்றிற்காக ஒத்திகை போட்டுக் கொண்டோ அல்லது இடைவேளையில் இளைப்பாறிக் கொண்டோ இருந்தபோது ஷான் அவரைப் பிடித்துக்கொண்டார் போலும். இப்போதய வயதைவிட அரை வயதுத் தோற்றத்துடன் சிவாஜியைப் பேட்டி கண்டு கொண்டிருந்தார்.

அப்போது, வெளி நாட்டுத் தமிழருக்கு (இந்தியருக்கு?) என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பது போன்றொரு (?) கேள்வியைச் ஷான் கேட்டிருக்க வேண்டும். சிவாஜி ஆங்கிலத்தில் பதிலளிக்க முனைந்தபோது ஷான் 'நீங்கள் தமிழிலேயே பதில் சொல்லுங்கள்' அன்போடு கேட்டுக்கொள்ள 'அங்கேயும் தமிஸ் பேசுவாங்களா?' என்ரூ சிரிப்போடு சிவாஜி பேச ஆரம்பித்தார். ஒரு வித தயாரிப்பமில்லாது மழையாக வந்த அவரது கூறும் பேச்சு ஒரு வகையில் 'மனோகரா' வசனத்துக்கும் 'தேவர் மகன்' வசனத்துக்கு இடைப்படட தொனி. எந்தவித மிகைப்பாடும் இல்லாத சினிமா கலக்காத சுத்த தமிழ். அவரின் உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்து வந்த அந்த சிங்காரத் தமிழைக் கேட்டுக் கொண்டிருக்கவேண்டும் போலிருந்தது. தமிழ் மீதும் தமிழர் மீதும் தான் வாழ்ந்த மண்ணின் மீதும் அவர் காட்டிய பாசம் என்னக்குப் போதையையே ஏற்றியது. சிவாஜியின் இழப்பை இப்போதுதான் நான் மனப்பூர்வமாக உணர்ந்தேன். கண்கள் பணிக்கவாரம்பித்தன.

எங்கள் நிகழ்ச்சி பதிவு முடிந்ததும் மீண்டும் தான் பணியை இடை நிறுத்திக்கொண்டு ஷான் எங்களை அழைத்துச் சென்று தான் கலையகம் முழுவதும் காட்டினார். அவருடைய தந்தையார் முதற்கொண்டு சகோதரி (பத்மா சுப்பிரமணியம்) சகோதரர்கள், அவரது பத்து வயதில் எடுத்த திரைப்படத்துக்கான விருது என்று பல வரலாற்றுப் பதிவுகளை ஒளிப்படங்களாக வைத்திருந்தார்.

அதில் ஒரு படம் முதற் கணிப்பில் இன்னுமொரு 'படம் காட்டும்' படம் அல்லது நம்மவர் தம் அலுவலக சிம்மாசனத்துக்குப் பின்னால் மாட்டும் படம் என்றே கணித்திருந்தேன். அப்படத்தில் ஷானுக்கு வலது பக்கத்தில் முன்னாள் கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் இடது பக்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நின்றுகொண்டிருந்தனர். மோடியின் வலது கை ஷானின் இடது தோளைபி பற்றியிருந்தது. மூவரும் சிரிப்பில் ஆழ்திருந்தபோது கமரா இமையை மூடிவிட்டது போலும்.

அப்படத்தை மட்டும் சுட்டிக் காட்டி ஷான் சொன்னார் "இது ஒரு ironic moment. தான் இந்தியாவில் பிறந்திருந்தும் தன்னை ஒரு இந்திய பிரதமருக்கு 'இவர் ஒரு மிகச் சிறந்த கனடியர்' என்று கனடிய பிரதமர் அறிமுகப்படுத்தினார்" என்று சொன்னபோது மோடி சொன்னாராம் 'அப்போ அவரை மீண்டும் இந்தியாவின் உடைமையாக்கப் போகிறேன்' எங்ரவாறு மோடி சொன்னதாகவும் அதற்குப் பதிலளித்த ஹார்ப்பர் "தேவையான அளவு யுரேனியத்தை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் ஷானை நாகங்கள் விட்டுவிட மாட்டோம்"

ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்பதில் முதல் தடவையாக நம்பிக்கையை இழக்கச் செய்துவிட்டார் ஷான்.

கரந்துறைந்து வாரி வழங்கும் பாரியாக ஷான் இருந்ததற்கான வெகுமதிதான் இந்த ஹார்ப்பரின் பரிசு.

உங்களுக்காக இலவச வானொலியைத் தருகிறேன் (sirius XM), இலவசமாக ஒளிப்பதிவு செய்து சமூகத்தை முன்னேற்றும் எந்தப் பணிகளுக்கும் இந்தக் கலையகத்தின் எந்தப் பகுதியையும் இலவசமாகத் தருகிறேன். வாருங்கள் என்கிறார்.

கடவுளின் கருணையால் நிரம்ப உழைத்து விட்டேன். இனித் திருப்பிக் கொடுக்கும் காலம் என்கிறார். அவை உதட்டிலிருந்து வந்த வார்த்தைகளென நான் நம்பவில்லை.

நான் கடந்து வந்த பாதையைப் பார்க்கும்போது ...வலிக்கிறது. ஒப்பிடாமலிருக்க முடியவில்லை.


கருத்துகள் இல்லை: